உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 6 மார்ச், 2016

டைரிக் குறிப்புகள் 3

நம் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை நம்மை விட்டுப் போனவர்களின் நினைவுகளுக்கும் உண்டு தானோ என்று இக்கணம் நினைக்கிறேன்..

விட்டுப் போனவர்கள் என்ற சொல்லின் புதிர்
நம் தேடலுக்கான விடை..


பிரித்துப் பார்ப்பதற்கும், பிரிந்து இருந்து பார்ப்பதற்குமான பார்வை வித்தியாசங்கள், தாய்மொழி கூடு பாய்கிற வேற்றுமொழியின் நாவினைப் போல்..

பிசகுதலை லயமென்று ஏற்றுக்கொண்டால்
பாடப்படும் பாடல்?


பிறழ்கிறேன்..

வெளிச்சங்களையெல்லாம் இருட்டடைக்கும் மெளனத்தின் வழியாய் எடுத்துக்கொண்ட கணத்தின் திரை விலகுதல், கொற்றவை நடனம்..

சொல்லின் சலங்கை நிலம் முழுதும் தெரித்து அதிர்கிறது.
அடங்க மறுக்கிறது மனதின் மேடை..
மூச்சுமுட்ட நிலம் பார்க்கும் வேர்வையில்,
பூக்கிறது பூக்காடு..


வாசம் வாசம் எங்கும் தனிமையின் கடல் வாசம்..

ஓர் அடர்பொழுதின் பிடிக்குள் உப்புக்காற்றின் சுவையோடு என்னை வந்த சேர்ந்த இந்த கலைஞனையும், அதற்கு பின் எனக்குப் புழங்கக் கிடைத்த வார்த்தைகளையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்..


காட்சிகள் மாறுகிறது,
கடலாகாது..


கடல்
என்னை ஒவ்வொருமுறையும் வெவ்வேறு ஆழத்தில் காவு வாங்கியிருக்கிறது...


அசைவற்று அதன் ஆழம் பழகுதலை, கிளிஞ்சல் பொறுக்கும் சிறுமியின் ஆவல் கைகளென அலையவிடுகிறேன்..

கடல் விரிகிறது,
புரியப்படாத மெளனத்தின் நீலத்தில்..
மூச்சடைக்கிறது,
நாசியேறிவிட்ட உப்பின் கரிப்பில்..


நான் கடலாவதை, கரை நின்று பார்க்கிற தனிமைக்கு என் மேல் அத்தனை காதல்..
தீண்டுகிறது இன்னும் தீராமல்..

ஷங்கர் டக்கர்.. 

அண்ணனின் வழியாய் அறியக்கிடைத்த பெயர்,
இன்றும் எனக்குள் பேசிப் பேசிச் சலித்த என் பெரும்பான்மை பொழுதுகளை, என்னிலிருந்து எனக்கு வேறாக்கித் தருகிற பாடல்கள் இவரது யூடியூப் பக்கத்தில்  நிறைந்து கிடக்கிறது..


நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ என்று மனம் உச்சக்கட்டமாய் கத்த ஆசைப்படுகிற வேண்டுதலில் தொடங்கி, ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடித் தோழி என்ற ஏக்கத்திலெல்லாம் நான் தொலைந்திருக்கிறேன்..

அண்ணனுக்குப் பிடித்த மன்மோகினி பாடலின் ஆண் மேல் எனக்கும் அத்தனை காதல்..

மொழிகள் பிடிபடுவதற்குள் நம்மைத் தொற்றிக்கொள்கிற, பால்பற்களுடைய உணர்வுகள் மட்டுமே, நம்மை மொழியறியும் முயற்சியை நோக்கி முரண்டுபிடிக்கும் குழந்தையாய் வளர்க்கிறது.


இன்றும் நான் முரண்டுபிடிப்பவள் தான்..

இந்த மதியத்தை எதுவுமற்றுக் கழிப்பதென்ற எண்ணத்தை மீறிக்கொண்டு வந்துவிட்ட இந்த கைகளையும், கேட்க ஆசைப்படுகிற இந்த பாடலையும்
உங்களோடு பகிர்வதில் நிம்மதியடைகிறேன். 


ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ




https://www.youtube.com/watch…
-ரேவா

சனி, 5 மார்ச், 2016

மனக்கிறுக்கல்கள் 20





கடந்த காலங்களின் மேல் கல்லெறிபவர்கள் மீது சமாதானம் உண்டாவதாக..

 நம் எளிய நேர்மைக்கு நேர்வது எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், திக்கெட்டும் விரிகிற உணர்வை ஊன்றுகோலாக்கி எழுந்துவிடுகிற மனம் மட்டுமே நம் பிரதானம்..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் 
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் 
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் 

இதன் மையத்தை தொட்டுவிட பிரயத்தனப்படுகிற வாழ்வின் முரண் புதிர்களே, நம் ஆசையின் சிக்கல் காடு. 

எங்கேயும் எழுந்துகொள்கிற விதையென குரல்கள், புதைந்து எழுகிற நேரத்தின் விருட்சம். பற்றிய கனவுகள் மனவேரின் துடிப்பு..

எதுவாகவோ விழுந்து, எதன்மூலமோ கிடந்து, பின் முளைக்கிற பொழுதுக்கான நீர்மையை வார்ப்பது நம் மன நிலமே அன்றி வேறெதுவாய் இருந்திடமுடியும். 

அன்பு செலுத்துவதும், பின் அது நகைமுரணாய் மாறி பிரசவிக்கிற துரோகத்திற்கும், இடையே எத்தனை எத்தனை நிறுத்தங்கள், எத்தனை எத்தனைக் கொண்டாட்டங்கள்..எத்தனைவிதமான உணர்வாட்டங்கள்..

ஊசலாட்டம் காட்டும் காலத்தின் முன் ஆடத்தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் ஒப்பனைகள் இட்டுக்கொள்வதில்லை, நம் உடம்பொரு ஒப்பனைக்கூடம்.. அது களைகிற இடத்தில் இருக்கிற வெளிச்சம் பிரபஞ்சத்தின் சக்தி.

 நம்மை இறக்கிவிட பிரியப்படுகிற பிரியத்தின் எந்த நிறுத்தத்தில்  நாம் இறங்கிக்கொள்வது? எந்த கொண்டாட்டத்தின் கால்களை வாங்கிக்கொண்டு இனி அங்கே பயணப்படுவது என்பது மட்டுமே நம் மனமுதிர்வை வெளிக்காட்டுவிடுகிற சுருக்கங்கள்..

வயதின் சுருக்கம் வாழ்வாகிவிடுவதில்லை என்ற இடத்தில் இருக்கும் ஆழம், அனுபவத்தின் நீச்சல் கைகள்.. நீந்துதல் என்பது பிழைத்தலாகும் போது வாழ்தலின் பெயரில் மரணம் அதே வாழ்வாகி சம்பவிக்கிறது. 

இருப்பதற்கும் இல்லாமல் போவதற்குமான சொற்ப தூரமே வாழ்வாகிக் கிடக்கையில், கடத்தலென்ற சொற்ப வரிக்குள் நாம் கண்டு தெளிகிற வளைவுகள் எத்தனை.

ஓர் அணுவுக்குள் அடைபட்ட உயிரின் வளர்ச்சி, நம்மை அடைகாக்கிற இந்த பிரபஞ்சத்தின் நிலம் தரும் காருண்யம். அது நிராகரிப்பதில்லை என்பதே நாம் வாழும் மரணத்திற்கான உத்திரவாதம்..

இடைப்பட்ட இந்த தூரங்கள் இப்படித்தான் கடந்திடவேண்டுமென்றால், பணிதல் மட்டுமே சிறந்த மாணவர்களுக்கு அழகென்ற இடத்தை எடுத்துக்கொண்டு, தோள் தாங்குமளவு சுமக்கத் தயாரகும் பயணத்தை ஏற்றுக்கொள்வதே,  நீண்டு கிடக்கும் இந்த பிரபஞ்சத்தை அடைவதற்கான வழியாகவும் இருக்கிறது. 

வலியறிந்து வழி அடைவோம்..

இன்னும் பேசுவோம்..


ரேவா