உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 15 அக்டோபர், 2024

மழையின் பொழுதுகள்..




     



                கண்களை மூடிக்கொண்டு மனம் ஒரு தியானத்திற்கு தயாரவது என்பது என்னளவில் என்றைக்கும் நடந்தது இல்லை.. தியானத்திற்காக உட்கார்ந்த இடம் ஒன்றாகவும், யோசனை அளவில் உட்கார்ந்து இருக்கிற இடம் வேறொன்றாகவுமே எப்போதும் இருந்திருக்கிறது. இதை மற்றவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், அப்பாடா என்ற ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. அதையும் மீறி கண்களை மூடி ஒரு தியானம் வசப்படும் இடம் என்பது, மழைக் காலங்களில் வெயில் தங்கிப் போன சுவற்றின் மீது, தங்க அடம் பிடிக்கிற மழையின் வாசத்தை நாசி முழுக்க  உள்ளிழுக்கும் போது நடந்திருக்கிறது.  அப்படி கண்களை மூடினால் கருத்தில் நிற்கிற ஒரே புள்ளி அந்த மழை வாசம் மட்டும் தான். 

                    மழை வந்தால் மொட்டை மாடியில் மட்டுமே பார்க்க முடிகிற ஜந்து நான். மழை நீரை சேமிக்கவென்று வீட்டில் அப்பா ஏற்படுத்திக் கொடுத்த நீளக் குழாய் வழியே, ஆர்வமாய் தவழ்ந்து வருகிற பிள்ளையை அள்ளியெடுத்து கொஞ்சுகிற ஒரு அன்பின் சாயலை எப்போதும் மழை பெற்றுவிடும்.. மழை வந்தால் மழை நீரில் மட்டுமே குளிப்பேன் என்ற சிறுவயது அடத்தை மணம் இப்போது கொள்ளுமா என்பதும்  சந்தேகம் தான். வீட்டுச் செடிகளின் மீது மழைக் கழுவி விட்டுப் போன பின்னும் தங்கியிருக்கிற வாசம் மழைக்கானது மட்டும் தானே.. 

                மழை நின்ற பின் அந்த சிமெண்ட் தரைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் மழையின் சுவடுகள் மறைய ஆரம்பித்தாலும், அந்த குளிர் ஈரத்தை மிச்சம் வைத்திருக்கும் தரையில் படுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் உடலுக்குள் ஏறி, மூக்கின் நுனி மேல் மழையின் கரத்தை பெற்றுவிடும் போது உடல் முழுதும் ஒரு மழையின் பெட்டகமாக மாறியிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். 

                   மழை வந்தால் மாடியின் மறைப்பில் ஒரு பிளாக் காபி + இசை + பிடித்த புத்தகம் என்று என் வீட்டு மழைக்கு துணை இருக்கிறேன் என்று நானே சொல்லிக்கொள்கிற பைத்தியக்காரத்தனமும் நடந்தது உண்டு.. 

                    இன்றைக்கான மழையை மனம் நேற்றிலிருந்தே எடைபோட தொடங்கிவிட்டது.. மழைக்குப் பழகத் தொட்டுப் பார்க்கிற விரல்கள் போய், பயந்து விடுவிக்கிற விரல்களை சில நேரங்களில் இந்த மழை பெற்றுக்கொண்டது எப்படி என்ற கேள்வி மனதிற்குள் வரமால் இல்லை.. 

                எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சுயநலம் தன் மாபெரும் இருக்கையை இயற்கைக்கு முன்பு போட்டுக்கொண்டு உட்காரும் போதெல்லாம் இது நடக்கிறது தான்.. ஆனால்  மழையால் வளர்ந்த எனக்கு மாபெரும் கவலையாக மாறியிருப்பது எல்லாம், யப்பா.. இந்த புத்தகங்களை மட்டும் காப்பாத்திட்டா போதும் மத்த எது போனாலும் மசுரே போச்சுன்னு மனசு சொல்றதை திரும்ப திரும்ப அச போட்டுட்டே இருக்கிறேன். சோழர்கள், மாமல்லபுரம், கோபல்ல கிராமம், பாறை ஓவியங்கள்ணு கண்ணுக்குள்ள படுற எல்லா புத்தகத்துக்குப் பின்னாடியும் ஒரு தனிமனிதனோட சேர்ந்த கூட்டு வாழ்க்கை இருந்திருக்கு.. அதுக்குள்ள காற்றும் மழையும் சேர்ந்தே தானே இருக்கு.. அப்போ அந்த புத்தகத்தை தொடுறது அந்தக் காலங்களை தொடுறதும் தானேன்னா, அந்த அழிவில்லாத இயற்கைய தொடுற மாதிரி தானே.. 

                இதோ இங்க மழை வேகம் எடுத்திருச்சு.. கிரவுண்ட் ஃபுளோர் மக்களை பரிதாபமாக பார்க்கிற மக்களின் கண்கள் ஏனோ வதைக்கத் தொடங்குகிறது.. ஆனால் மழைக்கு கண் உண்டு..  நம்புறேன்..  ஆனா ஒண்ணு அழையா விருந்தாளி போல சட்டென்று வருகிற மழைக்கும், இந்த தேதியில் புயல் உருவாகி இருக்கு, மழை இத்தனை சென்டிமீட்டர்ல பெய்ய வாய்ப்பு இருக்குன்னு தீர்மானங்களோட தகவல் வழியா வந்து சேருற மழைக்கும் வேறு வேறான மனநிலை தேவைப்படுது தான்..


      

0 கருத்துகள்: