உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 29 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்...5

காதலுக்கென்று
தனிமொழியேதுமில்லாமல்
போனாலும் போய்விடும்
கொஞ்சம் வாய் திறந்து பேசிவிடு....




 
விதைத்தவனாய் 
நீ இருக்க
தன்னை தானாய் 
வளர்த்துக்கொள்கிறது
இந்த காதல்.....

ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...
தீர்ந்துவிடுமோ
என்ற பயத்தில்
நீ பத்திரப்படுத்தும்
புன்னகை தான்
என்னை
பாதிப் பைத்தியமாக்குகிறது
என்பதை அறிவாயா
நீ?....
வரங்கள் சில நேரம்
சாபங்களாய் போவதுண்டு
இதழ் முத்தம் கொஞ்சம்
கன்னத்திற்கு ஈயப்படும் போது......


= ரேவா
 
 
 
 

வியாழன், 21 ஜூன், 2012

சற்றுமுன் நடந்த கொலை....




ஊரெல்லாம் உறங்கிப்போன
ஓர் இரவில்
உறக்க மறந்த நிமிடங்களினால்
உறைந்து போய் நானிருக்க,

அறையின் ஓரத்தில் யாரோ
அழுவதுபோன்ற குரல் 
அடித்துப்போட்டது 
என் கவனத்தை..

கவனமீர்த்த திசைநோக்கி
 நடந்துசெல்கிறேன்,
மீதமாய் மிதந்தலையும்
அவன் நினைவுகள்
கழுத்தை நெறிக்க
கண்ணீரோடு கரைந்து போயிருந்தேன்...

 பின் நிதானம் பிடிபட
மெல்ல மெல்ல 
அழுகைவந்த இடம் சென்றடைந்தேன்..
சற்றுமுன் உக்கிர நடனம்
ஆடிவிட்டுச்சென்ற காதலின்
வார்த்தை சலங்கைகள்
அங்கங்கே  சிதறிக்கிடக்க,
அதை ஒவ்வொன்றாய் கோர்த்து
பார்த்து பார்த்து
அழுதுகொண்டிருந்தது
இந்த பொல்லாத
காதல்..........

மரணம் சில
வார்த்தைகளால் கூட
நிகழ்ந்துவிடும்.....................




திங்கள், 18 ஜூன், 2012

இப்படியாய் சில அறிமுகம்.....



என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....

 இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..

உள்ளுக்குள் ஒர் உராய்வு
உந்தன் விழிகள்
என்னை நோக்குகையில்..
வெளிகாட்டா வகையில்
கடந்து சென்றேன்
அவ்விழியிடம்...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...

தூரத்தில் கடக்கும் ரயிலிருந்து
தூரல்விழும் மழையில்,
தொடங்கி
எதிர் இருக்கை குழந்தையின் சிரிப்புயென
அர்த்தமில்லாமல் அடித்து பெய்தது
நம் உரையாடல்.....

உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...

கேட்க நான் மறந்து
கொடுக்க நீ மறந்த
தொலைபேசி எண்ணில்
தொலைக்கப்பட்டிருந்தது
எப்போதும் போல
இந்த இரயில் சினேகிதமும்..........


சனி, 16 ஜூன், 2012

புரியாக்காலமது...




புழுதிமண் பரக்க
நாம்
விளையாண்ட விளையாட்டில்
விளையாட்டாய் விடப்பட்ட
வார்த்தைகளில் விரிசல்கண்ட
பிரியமது....

உண்மைக்கும் பொய்மைக்கும்
சரிக்கும் தவறுக்கும்
வித்தியாசம் பெரிதாய்  விளங்கிடாத
வயதுமது...

இருந்த பிரியங்களையும் 
புரிந்த சண்டைப்புதைமணலில்
புதைத்துக்கொண்ட
பருவமது...

கிட்டகிடைந்த அன்பிலிருந்து
கிட்டதட்ட பிரிந்த
வேளையது..

வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது..


இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


சனி, 9 ஜூன், 2012

பயணங்கள் புதிதில்லை...ஆனாலும் புதிதாய்.....


வணக்கம் உறவுகளே... அனைவரும் நலமா?.... கவிதை தளத்தில் பயணங்கள் பற்றி பகிர்ந்திட நினைத்ததின் நோக்கம், சில பயணங்கள் நாம் நினைத்ததையும் தாண்டி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போகும், அப்படி எனக்குள்ளான மாற்றங்களை எழுத்தில் ஏற்றிடத்தான் இந்த பதிவு... ஏற்கனவே என் சென்னை வாழ்க்கையை பற்றி தொடர ஆரம்பிச்சு இன்னைக்கு தொடரமுடியாமல் இருப்பது வருத்தமா இருந்தாலும், இதுவும் சென்னையப்பற்றிய பதிவுதான்ங்கிறது கொஞ்சம் ஆறுதலான விஷயமா இருக்கு...

சென்னை எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ன்னு சொல்லலாம்..எப்பவும் ஓடிட்டே இருக்கிற மனுசங்க, பரபரப்பா எதையாவது தேடிட்டே இருக்கிற முகங்கள், கொஞ்சம் அசந்தாலும் முளைச்சலவை மூலம் சாயம் போக காத்திருக்கும் வாழ்க்கைன்னு பல முகங்களை தனக்குள்ள வச்சுக்கிட்டு சக்கரமா சுத்துற ஊரு... சென்னையில வேலையவிட்டு வந்தப்பயெல்லாம் மாதம் ஒரு தடவைன்னு சென்னைக்கு போய் என் நினைவுகளை புதுப்பிச்சுட்டு வருவேன்... இப்ப அப்படியெல்லாம் இருக்க முடியலை... குடும்ப சூழல் ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, சென்னை தந்த நினைவுகள் கொஞ்சம் கனக்கன்னு காலம் எப்படியோ போயிட்டு இருக்கு...வருடம் ஒன்னாச்சு சென்னைக்கு போயி.. என் நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிற பழைய இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு அப்ப அப்ப நினைச்சு பார்க்கிறது உண்டு...

இப்ப மே மாதம் இறுதியில் சென்னைக்கு போகுற வாய்ப்பு கிடைச்சது... பல எதிர்பார்ப்புகளை சுமந்துகிட்டு தாயத்தேடி ஓடும் பிள்ளையா சென்னைய நோக்கி வந்தேன்...அப்பப்பா எத்தனை மாற்றம் இந்த ஒருவருட காலத்தில் சென்னை சந்திச்சிருக்கு... சென்னையில எனக்கு மனசுக்கு நெருக்கமான இடம்ன்னா டி. நகர் வீதிகள் தான், நான் வேலை பார்த்த பகுதியென்பதால் அங்கு அங்கு என் பிள்ளை குறும்புகள் கொட்டிக்கிடக்கின்ற இடம் அது...
டி நகர் வீதியில் தொடங்கி போக் ரோடுகள் வரை ரொம்ப பரிச்சையமான வீதிகள்.. காலமாற்றத்தில் வந்திட்ட மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை...

  நான் சென்னையில பணிபுரிந்த காலங்களில் தான் லூக்காஸ் பாலம் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகின, அப்ப எல்லாம் அந்த இடம் வாகன நெருக்கடிகளால் மூச்சுத்தெணரி நிற்கும்.. இன்று பணிகள் நிறைவடைந்து அதோட பிரம்மாண்ட தோற்றத்தப்பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், பல சோகங்களை போக்க அந்த கட்டுமானப்பணிகளுக்கு வெளி ஊர்ல இருந்து வந்து டெண்ட் போட்டுகிட்டு வேலை பார்த்த அந்த சகோதரர்களின் முகமும் நினைவுக்கு வந்து போகுது...

எப்போதும் பஸ் பயணித்தில் அதோட அழகை ரசிச்ச எனக்கு என் தம்பியோட இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும் புது சந்தோஷத்தையும் தந்தது..அவனுக்கு பழக்கப்பட்டுப்போன இந்த வசதிகளுக்கு பின்னான ஆரம்ப கட்ட செய்திகளை சொல்லிகிட்டே அந்த இடம் விட்டு நகர்ந்தேன்...

அடுத்து என்னோட பல நினைவுகளை ஒளிச்சு வச்சுகிட்டு இருக்கிற இடம் கோயம்பேடு வீதிகள், நாதன்ஸ் கபேல தொடங்கி கோயம்பேடு மார்கெட், விஜயகாந்த் கல்யாண மண்டபம், அப்பறம் ரோகிணி தியேட்டர் வரைக்கும் பஸ்க்காக காத்திருந்த நாட்களில் தோழமைகளோடு கதை பேசி நடந்ததுண்டு, இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கான வேலைகளால் பழைய முகத்தை கொஞ்சம் மறைச்சுவச்சுகிட்டு என்னை வரவேற்றது அந்த வீதிகள்.. சில நினைவுகளை மீட்டெடுத்து மீளமுடியா நினைவுகளோடு திரும்பி வந்தேன்... கோயம்பேடு நிறுத்ததில் அமர்ந்துகொண்டு பல சாயல் கொண்ட முகங்களையும் மனிதர்களையும் எவ்வளவு நேரம் வேணாலும் பார்க்கிற தியானம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அடுத்து கோடம்பாக்கம் வீதிகள், ஹாஸ்டலுக்காக அலையோ அலையோன்னு நண்பர்களோட அலைஞ்ச இடம், என் வயதிற்கே ஆனா குறும்புத்தனங்களால் பிரச்சனைகளை ஹேண்ட் பேக்ல போட்டுட்டு சுத்துன சந்தோஷ காலம்...கோடம்பாக்கம் ரயில் நிலையத்துல டிக்கெட் கவுண்டருக்கு எதிரில் இருக்கும் இரண்டாவது இருக்கைகளில் எப்போதும் அமர்ந்திருக்கும் என் நண்பனின் முகம் இன்னும் அவ்விடங்களை கடக்கும் போதெல்லாம் என்னை பார்த்து சிரிப்பதாய் ஒரு உணர்வு...இவ்வீதிகளும் மெட்ரோ திட்டத்தில் மாறித்தான் போயின.

டி. நகருக்கு அடுத்து நான் பணிபுரிந்த இடம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது..ஆரம்பத்தில் இந்த வீதிகளின் மீது பெறிதும் ஈடுபாடு இல்லாமல் போனாலும் போகப்போக ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... சென்னையோட இன்னொரு முகம் ஜெமினி தொட்டாலே தெரிஞ்சிடும்..அந்த பரந்த வீதிகளில் பயணம் செய்யுறதே அலாதிதான், அதுவும் இரவு நேரங்களில் 29C க்கு காத்துகிடந்து கூட்டத்தில காணமப்போற பலருல நானும் ஒருத்தி...
எப்படியோ வாழும் சூழலை மாத்திக்க பலரும் போன சென்னைக்கு நானும் போனேன்..ஆனாலும் என் மதுரைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கிற இடம் சென்னை தான்...ஆரம்பகாலத்தில் சென்னை மீது வெறுப்பு வந்தாலும் வாழும் முறைய சொல்லிக்கொடுத்தது சென்னை தான்...தோல்விகளும் வலிகளும் அதிகம் என்றாலும் வாழ்வை சொல்லிகொடுத்தது சென்னை தான்......

சென்னை பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருப்பேன்...இந்த பயணம்  நான் நினைச்ச படி இருந்ததான்னா இல்லைன்னு தான் சொல்லனும், இங்க பழைய நினைவுகளை புதுப்பிச்சுக்கிட்டாலும் அந்த நினைவுகளை தந்த பல உறவுகள் இன்னைக்கு காலப்பிரட்சியால காணமப் போனதும், பல நண்பர்களின் கல்யாணத்தின் மூலம் நட்புக்கு முற்று புள்ளி வைத்ததும், பலர் தொடர்பை துண்டித்தும், துண்டிக்கப்பட்டும் தொலைந்து போன நட்பின் தொலையா நினைவுகளால் ஒருவாறு மனம் கனத்து போய் தான் அந்த நினைவுகளை எடுத்துட்டு வந்தேன்... இறுதியா சொல்லனும்னா I Miss You...................


I miss you all the time, but I miss you most when i lay awake at night and think of all the wonderful times we spent with each other; for those were some of the best times of my life.


எதிர்பாராமல் சென்னை வந்ததால் பல உறவுகளை சந்திக்க முடியவில்லை, அதற்கு இந்த பதிவின் மூலம் மன்னிக்க வேண்டுகிறேன்...


வியாழன், 7 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்....4



உனக்காக எங்கு காத்திருந்தாலும்
அவ்விடத்தையெல்லாம்
விட்டுவிட்டு
நீ இருக்கும் இடத்தை நோக்கியே
இழுத்துவருகிறது
மனது...

 உன் தோள்களில்
சாய்ந்துகொள்வதற்காவே
பேருந்து பயணத்தையே
தேர்வு செய்கின்றேன்யென்பதை
நீ அறிவாயா?........


 உன் அழகு சுமந்துவரும்
இந்த கவிதையை
இறக்க இடம் காணாமல்
தேடுகிறேன்
இப்புவி முழுவதும்....
கல்லில் சிலைவடிக்கும்
சிற்பியாய்
என்னில் காதல் வரவைத்த
கலைஞன்
நீ.........



சிரிப்பதும்
பின் அணைப்பதுமாய்
நீள்கிறது
நம் சண்டைக்கு பின்னான
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.........

எத்தனையோ முறை
உன்னை மறக்க
முயற்சித்தும்
பூஜ்ஜியங்களிலே
வந்து முடிக்கின்றது
மனம்..........

 
மற்ற ஆணிடமிருந்து
உன்னை
தனித்து காட்டும் சொல்
காதல்.......


உன்னை நினைத்தவுடனே
கண் முன்னே கட்டிப்போட
எப்படி தெரிகிறது
என் கவிதைக்கு..
 
உன் நினைவுத்தலையணையில்
பத்திரமாய் உறக்குகிறது
என் காதல்......


ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீ



முந்தைய பதிவு : 



புதன், 6 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்...3


இவன்

என் வரையறுக்கப்பட்ட வார்த்தை
வாழத்தூண்டும் அனுபவம்
கூடவே இருக்கும் அறை நிலா..

 எந்த புள்ளியில்
தொடங்கினாலும்
அது உன்னையே
வந்து சேர்கின்றது..

 எழுதா பக்கங்களைப்போல
ஒரு அழகான் கவிதை
இருந்துவிடுமா
உன்னை பற்றி சொல்ல...


 தனிமையில் துணைக்குவரும்
நிலவை போல
நிழலைப்போல
எனக்கு
நீ...

 உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........



திங்கள், 4 ஜூன், 2012

இறுதியாய் இது உனக்காக....................


 வார்த்தை வர சக்தியற்று கிடக்கும் 
இந்நாட்களின் வலிகளைப்போல்
இனிவரும் நாள் இருந்திடாது....

உடம்பெங்கும் இல்லாக்காயம்
உயிரில் வலிகொடுக்க
கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இத்துயரை...

உள்ளுணர்வும் 
உயிர்க்கூடும் 
செயலற்றுக்கிடக்க,
செத்துகிடக்கும் 
என் வார்த்தைகளுக்கு
கொஞ்சம் உயிர்தந்து 
உழவவிடுகிறேன்..

எழுத நினைத்து ஏமாந்துபோவதும்
ஏமாந்தவை எழுத்தில் எட்டிப்பார்ப்பதும்
வாடிக்கையாய் நிகழ,
கிழித்தெரிகின்றேன் 
சில பல பக்கங்களை..

நிலைமையொன்றும் 
சரியில்லையென்றானபின்
தனிமையை துணைகொண்டு
காலாற நடக்கின்றேன்.

நடைபிணத்திற்கு துணையெதற்க்கென்று
நாட்டியமாடுகின்ற உந்தன்
நினைவுக்கு பயந்து
இருளச்செய்கின்றேன்

எந்தன் அறையை..

கவனிக்காமல் விட்ட 
சில கவிதைகள்
உன் முகம் காட்டி இரவை
மூர்ச்சையாக்க,
எழுதா பக்கங்களில் கரைக்கின்றேன்
இவ்விரவை...

உன்னை
தேடிகளைத்து பின் அலுத்துபோன
இந்நாட்களில்
அனைவரின் விசாரிப்பும் 
உன்னை பற்றியே என்றான பின்
எப்படி புரியவைப்பேன் 
இப்பிரிவை...
உன்னை பற்றி எதையும் 
இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..
இறுதியாய்
இது
உனக்காய்
இருந்துவிட்டு போகட்டும்...