உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 மார்ச், 2019

கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )




இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் "கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும் நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இதையும் ஒரு அலை விளையாட்டென முதலில் ஆடத் தொடங்கினேன். முதல் நான்கு பக்கங்களிலேயே ஆட்டம் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பது எங்கேயோ கேட்க தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் உள் நகர்த்தியிருக்கிற அலைகளை வேண்டாம் என்று தள்ளிவிட்டு வெளியேற முடியாமல் தான் கரை தாண்டி பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன். 

ஒவ்வொரு பக்கத்திற்கு ஆழம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கவிதைகளின் தலைப்புகளை பற்றிப் பிடித்து இளைப்பாற வேண்டியிருந்தது. மொத்த பயண நேரமும் இடைவிடாமல் அசைத்து பார்த்துக் கொண்டே இருந்த அலைகளில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் தான் என்னை சுதாரிப்பதற்கான காலம் வாய்த்தது. 

ஆக, மொத்த தொகுப்பும் பிடித்த குரல் வழி காலத்திற்கு ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பாகியிருக்கிறது. தலைப்புகளில் இளைப்பாறினேன் என்று கூறியிருக்கிறேன் அல்லவா அவற்றில் ஒரு சில தலைப்புகள்...! 

இருப்பதின் பிரதானம்
புதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்.
தீராக் கடலில் அலை விளையாட்டு
பொய்மான்
இலக்கமிடப்பட்ட இலக்குகளின் இலக்கணம்
இரவு நேரப்பாடல்
அசைவுகளின் அறியா கண்
(இதை கணம் என்று வேறு மாற்றி வைத்திருக்கிறேன்)

பெயர்களற்றவன்
நீயூரான் மரத்தின் இலை ஆடை
புன்னகையில் மறையும் பனிக்கூழ் மௌனம்.
சுழற்சியின் மாதாந்திரம் பிரசவிக்கும் நிறம். 

60 நாட் தூரத்தில் தெரிகிற கடலில் கரைக்கு வெகு அருகாமையிலான 10 நாட் தூரம் வரை வீசும் கலங்கரை விளக்கின் ஒளியை மட்டுமே 

சுட்டிக்காட்டியிருக்கிறேன் மீதத்தை நீங்களும் நீந்திப் பார்க்க வேண்டி.
வாசிக்க வாசிக்க மிக இலகுவாக ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடிய ஒரு தொகுப்பாக (என்னளவில் மட்டும்) இருக்கிறது.ஆனால் அதன் அதிர்வு என்பது என்றைக்குமானது. மறுவாசிப்பு எப்போதும் அதே கடலின் வேறு வேறு பாதைகளை காட்டிக் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறேன். சரியான தேர்வுக்கு துணை நிற்கிற காலத்தை மழை விரல்களால் அணைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் க்கா...

 
ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு புத்தகம் முடிந்த பிறகான மனநிலை வாய்த்து...😍
 
கவனிக்க மறந்த சொல் 

ரேவா
  யாவரும் வெளியீடு.

-மனோ அரசு 

 

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

வாசிப்பும் கண்டுணர்தலும்

 நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 



துயரம் ஒரு குற்றம், ஒரு சிறை. ஒரு வினோத மனப்பதிவு. நான் அந்த சாம்பல் கித்தானிலிருந்து எழுந்தாகிவிட்டது ஒரு தாளைப் போல.
                                                         -அன்னா அக்மதோவா 

நான் வாழ்வேன் கனவு ஒன்றில், மீண்டுமொரு தடவை நீ என்னுடன் இருக்கப்போகிறாய் - உமா பார்வதி 


சரியாய் இந்த தொகுப்பு இந்த இரண்டு விதமான மனநிலையைக் கொண்டாதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் இது. என் மனம் சமனின்மையில் இருக்கும் போது எதையும் தொடாது, அதன் போக்கிற்கு தீனிபோட பழகிக்கொண்ட பொழுதில்  அகத்தோடு நடக்கிற உரையாடல்களை கவனிப்பதும் கேள்வி கேட்காது அதன் முன் உட்காரப் பழகியதும் ஒரு தவம் போன்று எனக்குத் தோன்றும். 

இதை இங்கு சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது இந்த குறுநாவலில் வருகிற ஆராதனா புறத்திற்கும் அகத்திற்குமான நெருக்கடியில், அவள் மனிதர்கள் கொடுக்கும் அனுபவங்களை, அதனூடாக அகம் தொடுக்கும் பார்வைகளை, அவள் பொருத்திப்பார்த்து ஒரு கசப்பிலிருந்து அதைக் கண்டடைவதற்கான பயணத்தை இத்தொகுப்புக் கொண்டிருக்கிறது. 

பெண், பெண் வாழ்வு, பெண் சுதந்திரம்,  இதில் ஒன்றென கலந்திருக்கும் ஆண்
அவர்கள் பெண்ணுக்குத் தருகிற அனுபவம், அதை அவர்களிடமே பகிர்தலுக்காக கிடைக்கும் வெளி, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கான நீட்சி  இதைப் பொறுத்தே அத்தனை மனமாற்றங்களும் நிகழ்கிறது.அப்படியே இது ஆணுக்கும் பொருந்தும். 

சுயமாய் சிந்திக்கத் தெரிந்த பெண்ணும், இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் தேடும் அடையாளமும் தான் நேசிப்பவர்களால் ஒவ்வொரு பருவத்திலும் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைக் கவனிப்பதே ஒரு காட்டுவழிக்கான பயணம். 

முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, சௌகர்யமற்ற பொழுதொன்றில் குத்திக்காட்டப்படும் ஒன்றாய் மாறுகிற வாழ்வில் உள்ளுக்குள் நடக்கிற குமுறல்களை அடைத்துவைத்து பின்னொருநாளில் வெடித்துக்கிளம்பும் சத்தம் சத்தமட்டுமா என்ன?

கதையில் வரும் ஆராதனாவின் வாழ்வில் அப்பாவாக,தம்பி அருணாக,  பிரிந்த கணவனாக, அந்த கணவன் வழியில் கிடைத்த ஆண் குழந்தை சஞ்சுவாக, பின்வரும் காதலில் கிடைத்த வருணாக அவர்கள் உறவில் கிடைத்த நந்திதாவாக சொற்ப மனிதர்கள் தரும் அனுபவம் இந்த பரந்தவெளியை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கிறதா?     
 
ஒரு வாழ்க்கை தோல்வியில் முடியும்போது வீட்டில் கிடைத்த நிழலும், பின் தானே தேடிக்கொண்ட காதலால் ஆராதனா சந்திக்கும் நெருக்கடியும், அதிலிருந்து அவள் வெளியேறுவதற்கு அவள் கையிலிருக்கிற சிந்தனையும் அதன் வழி பெற்ற அனுபவப்பார்வையும் அவளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை  இந்த நாவல் பேசுகிறதாய் என் வாசிப்பில் எனக்குத் தோன்றியது.

ஆராதனாவுக்கு தன்னை அழுத்தும் துயரங்களுக்கு மத்தியில் கனவுகள் பிடித்திருக்கிறது. அந்த கனவு, தான் விரும்பியதை அப்படியே உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதாய் அவள் நம்பவும் செய்கிறாள். அந்த கனவும் நிஜமுமாய் அவள் தேடிப்பார்க்கும் வாழ்வில் நம்மையும் ஒன்ற வைப்பது இந்த தொகுப்பில் கையாளப்பட்ட மொழியின் அழகும் கூட.  

தொகுப்பில் துயரத்தை மீறி நம்மை ரசிக்கவைப்பது அதில் கையாளபட்டிருக்கும் மொழி. அது அத்தனை ரம்மியமாய் நம்மை கதையோடு ஒன்றவைக்கிறது. 

உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில் 

துயரமான மனதை வெல்வது, அதை மறக்கவோ அதனை விட்டு ஓடி ஒளிவதோ அல்லது அவற்றை நினைக்காமலிருக்க பயிற்சி எடுப்பதோ இல்லை. கொதிக்க கொதிக்க அந்நினைவுகளை மனதிற்குள் இறுக்கி வைத்து பின் மெல்ல இளகுவதற்கு விட வேண்டும். கொதி நிலையிலிருந்து மெல்ல மெல்ல அது குளிர்நிலைக்கு வந்து, ஓரிடத்தில் உறைந்துவிடும். உறைந்த அந்நினைவுகளை எப்போது வேண்டுமெனினும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அது பெரும்பாலும் தேவையிருக்காது , ஆழமானவை தாமாகவே அவ்வப்போது மேலெம்பி வந்து நம்மை உள்ளிழுக்க முயற்சி செய்யும், அதனுடான சமரே இந்த வாழ்வில் பெரும் சவால்.      

இப்படி ஆழமான அனுபவங்களை, ஆராதனா நிகழ்வுக்கும், நினைவுக்கும் இடையே பயணப்படும் அனுபவத்தை குறுநாவலாய் ஆக்கியிருக்கிறார் உமா பார்வதி.. 

கதையை ,கதையின் போக்கை அப்படியே சொல்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்திடப்போகிறது. வாசித்து உங்களுக்கான அனுபவங்களை நீங்களும் பெறலாம். 

எனக்கு இந்த குறு நாவல் ரொம்ப பிடித்திருக்கிறது. 


நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 
பதிப்பகம் : யாவரும் 
ஆசிரியர் : உமா பார்வதி 
     

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மீண்டும் தொடர்கிறேன்




சரியாக ஒரு வருடம் பிளாக்கரில் எந்த பதிவும் இடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு மனநிலை எதையோ கடத்திக்கொண்டு வந்திருக்கிறது என்பதைவிட ஓர் உழைப்பிற்கு கொடுக்கமுடிந்த இடைவெளியாகவும் இதைக் கருதிக்கொள்கிறேன்.

கவனிப்பற்ற பொழுதுகளில் எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல் இலக்கிய உலகம் குறித்த எந்த புரிதலும் இல்லாத போதும் எந்த சத்தமும் இல்லாமல் இங்கே எழுதிச் சேர்த்த கவிதைகளை அது உருவாக்கிய வெப்பத்தை நினைத்துக்கொள்கிறேன். 

இனி வாசிப்பு எழுத்து பகிர்தல் என மீண்டும் இங்கே அதிகம் பதியவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளுகிறது. 

அதற்கு முதலாய் போன வருட இறுதியில் வெளியான என் கவிதைத் தொகுப்பான கவனிக்க மறந்த சொல்லோடு வந்திருக்கிறேன். 

எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட சுவர்களைப் போல் இந்த இடம் எனக்கு அத்தனை வரம்.. 

தொடர்கிறேன் 

-ரேவா   



வியாழன், 19 ஜனவரி, 2017

அதுவரை இது நிகழாதிருக்கட்டும்




வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது  
புறச்சூழலை


நாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்  

செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை  
ஓர் அட்டைப் பூச்சி
இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்

நமக்கு கவலைகள் இல்லை  

வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது  
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்

 தனித்த செய்தியில் உரையாடுகிற 
கைகள் கொண்டிருக்கிற பழக்கம்
ரோட்டோர ஓவியக் கைகளுக்குக் கிடைப்பதில்லை
ஆனாலும் யாம் தெரிந்தே செய்கிறோம்


இச்சில்லறைகள்
தரையில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தின் கண்களைக்  
குருடாக்கப் போவதில்லை

விழுந்து கிடக்கிற ஒன்றின் தெளிவு
வானத்தை பார்க்கையில்  
வசப்படுவதும் வானமாகவே இருக்கிறது


ஆனவரை அழிக்கிற உரிமையை மழைக்கே கொடுக்கிறோம்

 சிறுதூரல் கிளப்புவது உஷ்ணத்தையென்றாலும்
 உள்ளிருப்பது வெளியேறுதல்
 பெருமழைக்குச் சமமே

அட்லீஸ்ட்  
இந்த மழை 
 மனதின் வெயிலை புறச்சூழலின் வழியாவது குறைக்கட்டும்  
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்


நிழல் வளர்த்த நிஜத்தின் தோற்றப் பிழை



கடைசி பார்வையாய் சுடர்விடுகிறது  
சந்திப்பு

பருகிய கோப்பைகளின் பிசுபிசுப்பை 
மொய்க்கும் ஈக்களின் பறத்தலைப் போல்  
கவனம் கலைக்கிற வார்த்தைகளைத் தட்டிவிட்டு  
நகரும் கால்கள் வாய்க்கா உரையாடல் அமர்ந்திருக்கிறது  
எளிய உயிர்மெய்யில்

விட்டில் பூச்சி நம் சொற்கள்  
பறக்கையில் பெரிதான நிழல்  
பதிகிறது சுவற்றில்

இருள் வெளிச்சம் குடிக்கப் பழகிய  
ஒயின் கோப்பைகளை  
பார்வையாக்கி பருகுவதின் அடர்த்தி  
அடிமடியின் நினைவென கசக்கிறது

பிரிவின் போதை ஆட்கொள்ளத் தொடங்கும்  
சூழலின் அமைதி உடைத்து
முதல் ச்சியர்ஸ் சொல்லித் தொடங்கப் போகும் வார்த்தை  
உன்னிடம் இருந்தே வரட்டும்

கடைசி சந்திப்பாய் சுடர்விடுகிறது வெளிச்சம்  
அத்தனை இருளையும் மறைத்து

நீ உன் கோப்பையை உயர்த்து
ச்சியர்ஸ்..

வழியற்ற தடங்களில் விரிகிற மீள்தலின் அடர்வனம்




*
 
மீண்ட கணத்திலிருக்கும் வாழ்தலைப் போல்  
வரமாகிற எதுவொன்றையும்  
சாபத்திற்கு நிகராய் பத்திரப்படுத்துகிறோம்

பக்குவங்கள் மண்டியிடும் திருச்சபைக்குள்
பாவங்களை மழுங்கடிக்கும் மன்னிப்புகள் உண்டு
 
தெரிந்தே செய்கிறோம்

மன்றாடல் 
கூப்பாட்டுக் குரலாகிடும் போது  
கூரையொழுகும் சமாதானம் கொண்டுவருகிறது  
பாத்திரங்கள் கொள்ளத்தக்க பெரு மழையை

நிரம்புதலும்  
நிரம்பி வழிதலும் நிராயுதமாக்க  
வழித்தடங்கள் சாபத்திலிருக்கும் வரத்தை பிரித்தெடுக்கிற  
அன்னப் பறவையாகிவிடுகிறது
 
நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விரிகிற  
வழியற்ற தடங்களின் பாதை  
அடர்வனமாக்குகிறது மீண்ட கணங்களை

மெளனம் சரணம் கச்சாமீ



*
குறியீடுகளால் நிரம்பியிருக்கும் நீர்த்தேக்கத்தில்  
நீயாகவே பிரதிபலிக்கிறாய்

இம்மை  
ஒரு கரை  
பிரமை  
மறுகரை  
கடலெனும் மாயை  
மழையாய் பொழிகிறது நிலத்தில்


காதைப் பிளக்கும் இடிச்சத்தம்
கண்கூசச் செய்கிற மின்னலொளி
அலைக்கற்றை வழியாய்த் துண்டிக்கச் செய்கிற
அறிவு
தொடர்பற்றதின் மோனநிலை

சூரியன் பார்க்க நிற்கிற நிமிடம்
இருட்டுகிற அறை
வெளிச்சமேற்றுகிறது படிமத்தின் மாடத்தில்


புரிவதில்லை
சொல்லின் முதல் தோள்  
ஊடுருவுகிற மடிப்புகள்
விளங்காத கிரணக் குறைபாடு

வளர்கிறாய்
இருள் குடித்து
ஆடுகிறாய்
காற்றை இசைத்து


அனைத்தையும் துறந்து ஆட்கொள்கிறாய்
விழி மூடிய புத்தனின் புன்னகை கொண்டு
விளங்காதிருக்கிறாய்

ஆசை துறக்கும் ஒப்பீடு
உவமைக்குப் பொருந்துவதில்லை
உவமேயப் பார்வையில் பிரதிபலிக்கிற நீர்த்தேக்கம்
மடை திறக்கிற சொல்
இக்குறியீடு