வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும்
வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில்
பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி
சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு
வரும் வித்தையை கற்றுத்தான் வைத்திருக்கிறது நட்பு..அதனால் தான் என்னவோ
நட்பு அதன் கோட்டையை இன்னும் இன்னுமென நீட்டித்து தேசமெங்கும் தன்னை
வியாபித்திருக்கிறது...
எதையோ தேடச்சொல்லி கட்டளையிட்ட இருள்
தேடியெடுக்கையில் நட்பெனும் வெளிச்சத்தை கையில் கொடுத்துப் பயணிக்கச்சொன்ன
நாள் இன்னுமென் மனக்கண்ணில் விரிய, பெண்ணாய் பிறந்ததாலே தவறவிட்டவை பல
இருக்கையில், உன் அருகாமை தானே எனக்கு அத்தனையும் கொடுத்தது...
கூடிக்களித்த பொழுதுகள் ஒன்றா இரண்டாவென கூட்டிக்கழிக்க நினைத்தால்
கூடிடும் நரையென்பது சுற்றிய சுற்றம் அத்தனையும் அறியும்,,,
பெண்களுக்கு
வீட்டின் கட்டுப்பாடுகள் கால் சிலம்புகளனென நாம் அறிந்தே இருந்தாலும்,
முகவரி தொலைத்த கடிதமொன்றின் உள்ளிருக்கும் செய்தியென அது நம்மை
அலைக்கழித்துக்கொண்டே இருக்க, இருவருக்குமான அலைவரிசை ஒத்தேயிருத்தா
ஒத்துழைத்ததால் கிடைத்ததா இந்த உறவென்று இதுவரை தெரியவில்லை..ஆனாலும்
இவ்வலைவரிசையை தெரிந்தே வைத்திருக்கிறது உன் பண்பலை..அதனால்தானென்வோ
ஆட்டோகிராப் நோட்டைத்தாண்டி ஓட்டமெடுத்திருக்கிறது நம் நட்பு...
நொடிக்கொரு
முறை தொலைபேசவோ, அன்பை குறிப்பிட்ட பரிசாக்கவோ தெரியாத வக்கற்றவளின்
வரிகளிது வாஞ்சையாய் உனைத்தேடிவருகிறது.. உன் அணைப்பின் சூட்டையும்,
அருகாமையின் தவிப்பையும் இழந்த இவ்வரிகளுக்குள் நீயிருக்கிறாய் என்பதாலே
என்னை மறந்து உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன்..இப்போதும் கூட உன்
நேசத்திற்குரியவரோடு காதல் பாடியபடி நீயிருக்கலாம்..வாழ்த்த வார்த்தைகளை
தேடி நட்பின் வெளிகளில் ஒரு பட்டாம்பூச்சியென பறந்து திரிகிறேன்
நான்...உன் நேச சிறகெடுத்து சுற்றி வருகிறேன்..பல வண்ணம் கொடுத்து என்னை
பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன்
வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்.. நேசத்தை எத்தனை
முறை வலிக்க அடித்தாலும் அதன் நிழலென்பதே நேசிப்பது தானே.. ஆனாலும் உன்
விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன்
நேசத்திற்குரியவர்...
நாளை உன் முதலாம் ஆண்டு திருமண நாள்.
வாழ்த்துவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது... உனக்கான இந்த நாள் மட்டும்
என்னோடு இருக்கிறது..முதல் வாழ்த்தாய் என் வார்த்தைகளிருக்கட்டுமென
பிழையோடே பிழைசெய்கிறேன்... அடுத்துச்சந்திப்பில் பேசிச்சிரிக்க இவ்வரிகள்
இருக்குமென உதட்டோர சிரிப்பில் உறுதிசெய்துகொள்கிறேன் என் நட்பின்
சரிபாதிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்... நல்லவைகள் உங்களை வந்து
சேரவே நான் பெற்ற இம் முகநூல் உறவுகளோடு வாழ்ந்துகிறேன் உங்களை...வளங்கள்
வரட்டும்... வாழ்த்துகள் கல்பனா, வாழ்த்துகள் .முரளி...
வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய்
ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை
எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை
கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு
கவிதையில்லாம வலைப்பக்கம் வந்திருக்காளேன்னு தானே யோசிக்கிறேங்கிற ஆமாம்
இந்த பதிவு முழுக்க முழுக்க நன்றிக்கான பதிவு... விளையாட்டுத்தனமாகவும்,
அதே நேரத்தில் என் மன அழுத்தங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதின்
நிமித்தமாயும் இவ்வலைப்பக்கம் வந்தேன்.. எண்ணிச்சரியாய் மூன்றாடுகளை
தொடவிருக்கும் இந் நேரத்தில் இதுவரை என்பக்கம் வந்து சென்ற பார்வையாளர்கள்
இரண்டு லட்சத்தி சொஞ்சம் பேருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இப்பதிவை
எழுதுகின்றேன்... இனி எழுத்தை சரியாய் செய்வேனென்கிற உறுதியோடு
பயணப்படுகின்றேன்...
2010ல் பதிவுலகம் ஒன்றை அறியாத காலம், எங்கோ ஒரு தேடலில் நிமித்தம் நண்பன் ப்ரியமுடன் வசந்தின் தங்கைக்கான கடிதத்தை வலைப்பதிவில் படித்ததும், தூசி தட்டு எடுக்கப்பட்ட கவிதைகளைத்தான் ஆரம்பங்களில் பகிர்ந்தது. அதற்கு முன்பே ஒரு வலைப்பதிவை தொடங்கி வேலையின் பொருட்டு அதில் பதிவுகளை தொடராதது ஒருபுறமிருக்க, அந்த கடிதத்தின் ஆவலில் துளிர்த்தது தான் என் எழுத்து..2011ல் பிற்பகுதியில் தான் வலையுலகத்தின் பின்னனிகள் சரியாய் புலப்பட்ட காலம்.. நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்.. இன்னும் எழுத்தை சரியாய் எசெய்யவில்லை என்பது எனக்கு நன்றாய் தெரிந்தாலும், ஆரம்ப காலங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறேன்,அது உங்களால் தான் சாத்தியம் என்பதை சொல்வதில் பெருமையே எனக்கு.. இந்த வெற்றி இங்கிருந்து தான் சாத்தியமெனக்கு..படிப்பேதுமில்லா, இன்னும் சரியாய்ச்சொல்வதானால் என் கவிதைகளை சரிவர புரிந்துகொள்ள இயலா பின்னனி என்னுடையதென்றாலும், உங்களின் பாராட்டுகளும், பாசமும் தான் என்னை இத்தனை தூரம் உந்தித்தள்ளியது..
இதுவரை என் பதிவுகளுக்கு திரட்டிகளின் வாயிலாயும், என் பதிவுகளின் வாயிலாகவும் வாக்கிட்டு, மறுமொழியிட்டு சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றி சொல்லி அன்னியப்படுத்த விரும்பாத போதிலும், என் ஆணிவேருக்கு பலம் கொடுத்த உங்களுக்கு என்னிடம் கொடுக்க நன்றியைத்தவிர வேறில்லை
இதுவரை பதிந்த கவிதைகள் 253
பெற்ற மறுமொழிகள் 4150
மொத்த பார்வையாளர்கள் 2002150
இக்குழந்தையின் கிறுக்கலையும் ரசித்து, எனக்கும் எழுத்தில் பொறுப்புணர்ச்சியை எடுத்துக்கொடுத்த என் வலையுலகில் நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற என் அத்தனை நட்புறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி..
குறிப்பாய் இங்கு சில நட்புறவுகளுக்கு மனமார நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்
நண்பன் வசந்த், மழைக்காதலன், ரசிகன்,ஜோ, இந்திரா கிறுக்கல்கள், நித்தி மேகா
சகோதரன் கவிதைக்காரன் டைரி
தம்பி ரமேஷ் ராக்ஷன்,பிரபா, முக நூலில் என் பதிவுதனை பகிர்ந்து இன்னும் இன்னுமென எழுதுவதற்கான உற்சாகமேற்படுத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் சகோதரன் மெல்வின், இன்னும் என் பின்புலத்தில் என்னை உந்தித்தள்ளும் என் ஆகச்சிறந்த நட்பானவளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்...
என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,
இதுவரை எழுதியவை
கூட்டிச்சென்ற தூரமிது புரிந்தாலும்
போகவேண்டிய தூரமின்னும்
வெகுதொலையிலிருப்பது புலப்பட
இணைந்தே இருங்கள் இச்சிறுபிள்ளை கிறுக்கலோடு... குறைகளையும் என் நிறைகளுக்கு காரணமாய் சுட்டிக்காட்டிய என் அன்பு நட்புக்களுக்கு நன்றி...
இனியும் என் ஆக்கசக்தியாய் இருக்கப்போகின்ற இவ்வலையுலக உறவுகளின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி நன்றி நன்றி.....
ஒன்று
இரண்டாக
இரண்டு
நூறாக
கூடிக்கொண்டே போகிறது
உன்னைக் குறித்த
என் கேள்விகள்,
எல்லாக் கேள்விக்கும்
ஒற்றைப் புன்னகையை
பதிலெனக் கொடுத்தாலும்
போதுமானதாய் இல்லை
கேள்வியின் கோரப்பசிக்கு.
கொஞ்சமாய் அதை -நீ
மென்று விழுங்க
பதில்
தொண்டை நெறிக்கும் முன்
துடித்து விழிக்குதுன்
சுயமுகம்
இதுவரை காட்டியவை
கூட்டிச்சென்ற தூரத்திலிருந்து
திரும்புதல் முடியாதென்பதை
தொடர் மெளனமும்
சில கண்ணீர் துளிகளும்
சிறு தடுமாற்றமும்
எடுத்துரைக்க
மிச்சமிருக்கும் ப்ரியங்களை
எச்சமென
நீ புசிக்கையில்
இரவை புணர்ந்து
முடிக்கிறது
இன்னுமொரு பகல்..
இலக்கணங்கள் புரிந்தாலும்
நீ இன்னுமொரு
ஆண்
அவ்வளவே...
பெரும் காத்திருப்பில்
சேர்ந்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான
காரணங்களையும்..
பதற்றமிக்க
இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உனை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று...
இல்லா உருவமொன்றை
அருவமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு
தவிக்கின்ற இளமைக்குள்
விலை வைக்கா
கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்
வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை
நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்ககிடைக்கின்ற
சிறுதுளியில்
சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உனைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை...
யாருக்கும் கேட்காதபடி
தனக்கானதொரு மொழியெடுத்து
விழியறுக்கிறது
உனதிந்த மெளனம்
பிடித்த அத்தனையிலும்
பிடித்தமற்று
நீள்கிறது
எனதிந்த நாட்கள்
ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த
சொற்களின் நகர்வுக்கான
இக்காத்திருப்பென்பது
காட்சிபடுத்தமுடியா
ஏதோ ஒரு அழிவை கண்முன்னே
நிறுத்துகிறது
பார்வைகளில்
கடந்து போவது மட்டுமே
இனி
சாத்தியமென்றான பின்
நீ உடைத்தெரிந்த சொல்லில்
இங்குமங்குமாய் சிதறிக்கிடக்கும்
ஞாபகவேர்கள்
ஒவ்வொன்றாய் துளிர்த்து
சுவாசம் நெறிக்க
கணத்ததொரு நிராகரிப்பை
சலனமே இல்லாமல்
ஏற்றிவருகிறது
நீ உடைத்த ஒரு சொல்...
- ரேவா