உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 3 மே, 2013

சரிபாதியானவளுக்காய் என் வாழ்த்து




வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும் வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில் பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு வரும் வித்தையை கற்றுத்தான் வைத்திருக்கிறது நட்பு..அதனால் தான் என்னவோ நட்பு  அதன் கோட்டையை இன்னும் இன்னுமென  நீட்டித்து தேசமெங்கும் தன்னை வியாபித்திருக்கிறது...

எதையோ தேடச்சொல்லி கட்டளையிட்ட இருள் தேடியெடுக்கையில் நட்பெனும் வெளிச்சத்தை கையில் கொடுத்துப் பயணிக்கச்சொன்ன நாள் இன்னுமென் மனக்கண்ணில் விரிய, பெண்ணாய் பிறந்ததாலே தவறவிட்டவை பல இருக்கையில், உன் அருகாமை தானே எனக்கு அத்தனையும் கொடுத்தது... கூடிக்களித்த பொழுதுகள் ஒன்றா இரண்டாவென கூட்டிக்கழிக்க நினைத்தால் கூடிடும் நரையென்பது சுற்றிய சுற்றம் அத்தனையும் அறியும்,,,
பெண்களுக்கு வீட்டின் கட்டுப்பாடுகள் கால் சிலம்புகளனென   நாம் அறிந்தே இருந்தாலும், முகவரி தொலைத்த கடிதமொன்றின் உள்ளிருக்கும் செய்தியென அது நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்க, இருவருக்குமான அலைவரிசை ஒத்தேயிருத்தா ஒத்துழைத்ததால் கிடைத்ததா இந்த உறவென்று இதுவரை  தெரியவில்லை..ஆனாலும் இவ்வலைவரிசையை தெரிந்தே வைத்திருக்கிறது உன் பண்பலை..அதனால்தானென்வோ ஆட்டோகிராப் நோட்டைத்தாண்டி ஓட்டமெடுத்திருக்கிறது நம் நட்பு...

 நொடிக்கொரு முறை தொலைபேசவோ, அன்பை குறிப்பிட்ட பரிசாக்கவோ தெரியாத வக்கற்றவளின் வரிகளிது வாஞ்சையாய் உனைத்தேடிவருகிறது.. உன் அணைப்பின் சூட்டையும், அருகாமையின் தவிப்பையும் இழந்த இவ்வரிகளுக்குள் நீயிருக்கிறாய் என்பதாலே என்னை மறந்து உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன்..இப்போதும் கூட உன் நேசத்திற்குரியவரோடு காதல் பாடியபடி நீயிருக்கலாம்..வாழ்த்த வார்த்தைகளை தேடி நட்பின் வெளிகளில் ஒரு பட்டாம்பூச்சியென பறந்து திரிகிறேன்  நான்...உன் நேச சிறகெடுத்து சுற்றி வருகிறேன்..பல வண்ணம் கொடுத்து என்னை  பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன் வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்.. நேசத்தை எத்தனை முறை வலிக்க அடித்தாலும்  அதன் நிழலென்பதே நேசிப்பது தானே.. ஆனாலும் உன் விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன் நேசத்திற்குரியவர்...

 நாளை உன் முதலாம் ஆண்டு திருமண நாள். வாழ்த்துவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது... உனக்கான இந்த நாள் மட்டும் என்னோடு இருக்கிறது..முதல் வாழ்த்தாய் என் வார்த்தைகளிருக்கட்டுமென பிழையோடே பிழைசெய்கிறேன்... அடுத்துச்சந்திப்பில் பேசிச்சிரிக்க இவ்வரிகள் இருக்குமென உதட்டோர சிரிப்பில் உறுதிசெய்துகொள்கிறேன் என் நட்பின் சரிபாதிக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்... நல்லவைகள் உங்களை வந்து சேரவே நான் பெற்ற இம் முகநூல் உறவுகளோடு வாழ்ந்துகிறேன் உங்களை...வளங்கள் வரட்டும்... வாழ்த்துகள் கல்பனா, வாழ்த்துகள் .முரளி...








4 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

நட்பு எனும் உறவு
வாழ்வின் உறுதியை
மேம்படுத்த
அமைக்கப்பெற்ற
மிக உறுதியான பாலம்..
அப்படியொரு நட்புறவு உங்களுக்கு
அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி சகோதரி...
==
உங்கள் வாழ்த்துடன்
என் இனிய மனம் கனிந்த
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
சகோதரிக்கு...
வாழ்க பல்லாண்டு...

கீதமஞ்சரி சொன்னது…

\\பல வண்ணம் கொடுத்து என்னை பயணப்பட வைத்த பல நட்பு அவரவர் திருமணத்திற்கு பின் இல்லாமல் போனதன் வலியொன்று போன வருடத்தின் இதே நாளிலும் கிடைக்கப்பெற்றேன்..\\

அந்த வலியை உணர்கிறேன். ஏனெனில் இருபது வருடங்களாய் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே.

\\ உன் விசயத்தில் மட்டும் வரம் வாய்த்தவள் நான்... வாய்ப்பு கொடுத்தவர் உன் நேசத்திற்குரியவர்...\\

இந்த விஷயத்தில் எனக்கு வரமும் கிடைக்கவில்லை. வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.

நட்பின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகள் எளிதில் அகப்படாது. ஆனால் இங்கு உங்களுக்கு அகப்பட்ட வார்த்தைகளிலெல்லாம் அழகாய் இழைந்து இடைவெளிகளிலும் நுழைந்து அற்புதமாய்த் தன்னை
வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது ஒரு அழகான நட்பு.

இந்த நேசமும் தோழமையும் என்றும் தொடரட்டும் என அன்போடு வாழ்த்துகிறேன் ரேவா.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தலைப்பை பார்த்தவுடனேயே இது தங்கச்சிக்கான பதிவேன சட்டென்று புரிந்து கொண்டேன்.

பாழாய்ப்போன நினைவுகள் இந்த அண்ணனுக்கு தங்கச்சியியின் கல்யாணநாள் மறந்து போச்சென்று மனசொடிந்து போனேன்.

நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி"ம்மா தங்கச்சி...!

உங்கள் நட்புக்கு அண்ணனின் ஆசீர்வாதங்கள் என்றும் உண்டு....

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என் செல்ல தங்கச்சிக்கும் அன்பு மச்சானுக்கும்....

Unknown சொன்னது…

Nalla erukku Revaa,

Great Feelings..

MY wishess too