உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரியாக்காலமது



இன்றோடு வருடம் ஆறாக, என் நினைவுதனில் வற்றாது ஓடும் ஒரு பிரவாகமாய்  நீ உருவெடுத்திருக்கிறாய், இன்னும் இன்னும் ஆழமாய்.
ஒரே பார்வையில் பருகிவிட முடியா ஆழத்தில்  நீ இருக்கிறாய் என்பது மட்டும் திண்ணம்..எப்படி ஆரம்பம் என்ற புள்ளியில் தெளிவில்லையென்றாலும் அமர்களமாய் நீ மனதமர்ந்த காலம் என்றும் எனக்கு விழாக்காலம் தான்..

 மழைக்கு ஒளிந்து கொள்வதின் பொருட்டு, என் துப்பட்டா தூரலில் பதியமிட்ட அந்த பார்வைக்குப்பின் பல மழையை சந்தித்தாகிவிட்டது, ஒன்றிலும் உன்னை சந்தித்த உற்சாகமில்லை என்பதே உண்மை..பிரிதொரு நாள் என் இருக்கை அருகில் வந்தமர்ந்த தினம் யுத்தம் செய்யும் எந்தன் உள்ளத்தின் ஓசை நீ அறிந்திருப்பாயா என்று நான் அறியேன்.. 
ஆர்பாட்டமில்லா உன் புன்னகை, கர்வத்தை மறைக்கும்  உன் குறும்பு மீசை, திருத்தம் செய்த உன் புருவம், பாங்காய் எடுத்த வகிடு, கையோடு இட்டிருந்த அந்த மஞ்சள் கயிறு, நெற்றி நடுவில் சின்னதாய்  குங்குமம் இவையெல்லாம் உனக்கு கூடுதல் அழகை கொடுக்கத்தான் செய்தது..

ஹாய் மேம், இப்படித்தான் ஆரம்பித்தாய்..

உங்கள எங்கையோ பார்த்திருக்கேனே என்பதைப்போல் நான் ஆரம்பமானேன்..

கிட்டதட்ட குட்டி மழையொன்று சில்லென்று என் நெஞ்சம் நனைக்க, மழைவிட்டதும் வெரித்திருக்கும் வானத்தை போல் அழகு நிறைந்ததாய் இருந்தது அன்றைய தினம்..பரஸ்பரம் அறிமுகம் முடிந்தாகிற்று, தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து கொண்டு குறும்பு செய்தது என் நெஞ்சம்..அதை உணர்ந்தவனாய் உடன் கொடுத்தாய் உன் எண்ணை..
வீடு வந்தாகிற்று விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.. ஏதே ஏதோ குழப்பம் கொண்டு அனுப்ப நினைத்து அழித்த குறும்செய்திகள் எண்ணிக்கையில் 100த்தொட, என்னை நான் திட்டிக்கொண்டே தூக்கிப்போனேன்...

காலை 6 மணி இப்போதெல்லாம் என் மூன்றாம் கைகளாய் மாறிப்போன கைப்பேசியை எடுத்து பார்த்துத்தான் ஆரம்பமாகும் என் அத்தனை நாளும், இன்று மட்டும் ஒரு ஆனந்தவிருட்சத்தை விழிக்கு தந்தது, குட் நைட் என்னும் குறும் செய்தியில் தொடங்கி அன்பு தாங்கி அனுப்பட்ட அத்தனை குறும்செய்திகளாலும் நிறைந்து வழிந்தது என் கைப்பேசி..என்ன நினைப்பான் என்னை என்ற எண்ணம் மேலிட, சின்னதாய் மன்னிப்பில் தொடங்கி வைத்தேன் அன்றைய நாளை..அதன் பின் பதிலேதுமில்லாது போனது, அதைப்பற்றி நினைப்பேதுமில்லாமல் மூழ்கிப்போனேன் எந்தன் வேலையில்..

ஏதோ புரியாத உணர்வு தொண்டை நெருக்கி, புலப்படா வலிவந்து கண்ணீரில் முடிக்க, விதி அமைத்துகொடுத்த பயனாய் வந்து நிறைத்தது அவன் அழைப்பு
பரஸ்பர பேச்சிலும் பிடிபடா ஏதோ ஒரு உணர்வை அவனோடு பேசையில் உணர்ந்தேன்... பின்னும் இரவும் பகலுமென எங்கள் நேரத்தை தின்று தீர்த்தது எங்கள் இரவுக்குமான பிடிபடா ஏதோ உணர்வு...

உடைத்து பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டிருந்த மனஒத்திகைகளை இனம் கண்டவனைப்போல் என் அருகில் வந்தான்

இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபிஸ் பக்கத்தில இருக்கிற காபிடேக்கு போவோம் வர்ஸிதா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

ம்ம்ம்ம் ஒகே பார்க்கலாம் ப்ரியன்...

உள்ளுக்குள் உற்சாகக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாலும் வெளியே எதுவும் நடக்காதைப்போல் காட்டிக்கொள்வது எத்தனை பெரிய சங்கடமென்பதை அன்றே உணர்ந்தறிந்தேன்... 6 மணிக்கு இதோடு 6000 முறை கடிகாரம் பார்த்தாகிவிட்டது, நகராத கடிகாரம் உலக அழிவை கண்முன்னே நிறுத்துவதைப்போலொரு மாயையைக்கொடுக்க, நிறுத்திக்கொள் உன் கற்பனையை என்பது போல் 6 மணியை நெருங்கியது...

இதோ கண்முன் திரையிட்டு நாடகம் நடத்தும் எங்கள் உணர்வுகளுக்கு காதலெனும் பெயர் சூட்டுவிழா நடந்தேறிக்கொண்டிருக்கிறது...

இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடிய காதல் பிள்ளையை கண்டெடுத்து இதோ வருடம்  6 ஆக, காதலியலை முழுதாய் படிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....
நினைவுகளில் எப்போதும் சூல் கொண்டு எங்களை சுமங்கும் அஸ்திவார நியாபங்களே எங்களின் அந்த புரியாக காலங்கள் தான்.....

ஒவ்வொரு சமாதானங்களுக்கு 
பின்னும் 
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும் 
காதலே.....

  - ரே

7 கருத்துகள்:

சித்தாரா மகேஷ். சொன்னது…

//விற்றுத்தீர்த்த பலாப்பழத்தின் வாசம் போல விடாது துரத்தியது உன் வாசம்.//
அருமையான உவமை வரிகள் அக்கா.நினைவுகள் நெருட கனத்த மனதோடு செல்கிறேன் அக்கா.மனதார வாழ்த்துகிறேன் அக்கா.வாழ்க தங்கள் காதல்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நினைவுகள் நெருட மனம் கனக்கிறது.
அருமை...

வாழட்டும் உங்கள் காதல்.

Vijayan Durai சொன்னது…

கவிதை கதை கலவை....காதலின் உணர்வலைகளை உள்ளடக்கி கதை செய்த அக்காவிற்கு பாராட்டுக்கள்!

Unknown சொன்னது…

காதலும் காதில் மட்டுமே சார்ந்த கதையும் கவிதையும் அற்புதம்..

Unknown சொன்னது…

:)good

இராஜ முகுந்தன் சொன்னது…

///ஒவ்வொரு சமாதானங்களுக்கு
பின்னும்
முளைத்து வரும்
அத்தனை விருட்சமும்
காதலே..... ///

அழகிய வரிகள்.

பால கணேஷ் சொன்னது…

கவிதை நடையில் கதையா? கதையில் கவிதையா? ஆனந்தமான குழப்பமெனக்கு! எககாலமும் ரசித்துப் படிக்க வைக்கும் ஓர் ரஸவாதம் காதலுக்கு மட்டுமே சாத்தியம் வெகுவாக ரசித்தேன். வலைச்சரம் மூலம் எனக்கு இங்கு பாதை போட்டுத் தந்த நண்பன் மனோ வாழ்க!