உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 2




நிறைய நிறைய அன்பு செய்த பின்னும் நிறையாத இந்த பேரன்பு கடலளவு விரிகிற போது, அலை தேடி ஓடி மணற் பாதம் புதைய, ஈரம் வாங்குகிற பேராவல் ஒவ்வொருமுறையும் கடல் தேடச் சொல்கிறது.

பேராவல் உன் பேச்சு.. பெருந்தீ என் கோபம்
கட்டுப்பட மறுக்கிற போதெல்லாம் சுட்டெரிக்கிற சூரியன் உன் சமாதானம்..
கொடுத்தனுப்ப முடியாத வாசங்களை தைத்து வைத்திருக்கும் இச்சுவாசம் சூறாவளி.. சுழன்றடிக்கிற போதும் அது இழுத்து வருகிற அத்தனையிலும் ஒட்டிக்கொண்டுவிடும் உன் முகம் ஒரு பெளர்ணமி..

அள்ள அள்ளத் தீராத முத்தங்கள் கடல் முத்துகள்.. ஆழம் போக அனுப்பும் படகு நம் வாழ்விற்கான துடுப்புகள்..கரை சேருதலுக்கு முன் நிறைகிற படகில் விலையாகும் நியாபகம் தீராத நம் உரையாடல்.
கொடுத்தனுப்பவோ, கொண்டு சேர்க்கவோ பிரியப்படாத வார்த்தைகள் அதில் நங்கூரங்கள்..

பார்வைக்கு தெரிகிற புள்ளி புரிபடாத அன்பின் சூட்சும விதை.. அது வளர வளர நிறையும் வானம் இன்னும் உயர்த்துகிற தூரம் எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்புகள்.

உன் பார்வை ஒரு நட்சத்திரம் அதில் நம் இரவுகள் ஒரு எரிகல். நீந்தும் நினைவில் பற்றிக் கொண்டுவிடும் வெப்பம் ஒளிர்விக்கிற பாதை பெரும் வனம்.

தடங்களற்ற பாதை, தடையங்களாகும் வார்த்தை.. திரும்புதல் தொலைத்து மூழ்கும் வனம் ஒளித்து வைத்திருக்கிற முகங்கள் நம் அந்நேரத்துக் குரல்கள்..

அது கடல் விட்டு கரை சேர வரும் அலையின் குரல்கள்.
மீண்டும் கடலுக்கே தன்னை ஒப்படைக்கும் அன்பின் குரல்.

நான் உன் அலை.. நீ என் குரல்..

முகங்களாகும் வரை தொடரும் இக்குரல் ஒரு பெருங்கடல்....


-ரேவா

0 கருத்துகள்: