உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 4

 

தீர்மானங்களற்ற நெடும் பயணத்தின் ஜன்னல் ஆகிறாய். உன் வழியே வேடிக்கை பார்க்க பழகிவிட்ட விழிகளுக்கு திடீர் கதவடைப்பாய் திரள்கிறது மெளனிக்க விரும்பும் சொற்கள். கலைக்கக் காத்திருக்கிற காற்றென இத்தென்றல்
உன் சுவாசமென்று சொன்னால் தப்பா?

நான் மொழிகிறேன் மழையாக
நிறைகிறேன் நீயாக
விரிகிற ஈரம் விரிக்கிறது வானத்தை

தென்னையின் கீற்றில் விழுகிற சூரியன் வெட்டித் தருகிற இளநீர் உன் வெயில் முத்தம்
நா வறட்சியற்று பருகிகுறேன். இனிக்கின்ற ஆழம் சுவைக்கிறது சத்தத்தை. மொழி வழுக்குகிறது இளநீர் வழுக்கையென
லாகவப்படுத்தி வழித்தெடுக்கிறாய் நாணத்தை. உண்ணத் தொடங்கையில் பெரும் பசி கைப்பற்றுகிறது சிம்மாசனத்தை.
கோலோச்சுகிறாய் அதிகாரத்தால்,பிரகடனப்படுத்துகிறாய் ப்ரியத்தால்.

பூனைக்குட்டியின் காதுகளென படபடக்கிறது இரவு. பைத்தியக்காரீயின் பட்டாம்பூச்சிக் கனவுகளாகிறது பிடித்து வைத்த வண்ணங்கள். சிறகடிக்கிறேன் வண்ணத்தில், சிறைபிடிக்கிறாய் வானத்தில்.

சுதந்திரவெளி உன் பால் முத்தம். அது வளர்கிறது.
உச்சி வருகையில் பருவப்பெண்ணின் வனப்பென என் பார்வை நிறைகிறது.

மடியெனும் கடல் கொடு, உன் முத்தப் படகில் இன்னொரு கடல் நாம் வார்ப்போம். நம் கடலை நாமே மீட்டுவோம்.
அதுவரை இந்த உலகம் வேண்டாம். உனது எனதென்ற பிரிவினை வேண்டாம். சத்தங்களை மட்டும் சாட்சியமாக்குவோம்.
மீறும் வாய்ப்பை அதற்கு நாமே தருவோம்.

கறைகள் கரைகளுக்கு இல்லை.
திரும்பும் வரை காத்திருக்க மட்டுமே தெரிந்த இந்த நேசத்தை நங்கூரமாக்குவோம் கரைகளுக்கு.
ஆழம் போவோம் கடலுக்கு.

உன் மடி என் கடல்.
மடிகொடு பெளர்ணமியென வளர்த்துப் பார்ப்போம் இந்தப் பிரியத்தை.


-ரேவா

0 கருத்துகள்: