உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 6

              

பகலும் இரவும் இங்கே மாறி மாறி வருகிறதை நீ அறிகிறாயா மோனா. இதென்ன பைத்தியக்காரத் தனம், இரவும் பகலும் தானே தொடர்ந்து நம்மை இயக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை மோனா.. பகலும் இரவும் வெறும் பகலும் இரவும் மட்டும் தானா என்ன?

கணக்கற்றவைகளை கண்காணிக்கப் பழகியிருக்கும் மனதின் கூச்சல் தனித்து வாழப் பழக்கியிருக்கிறதென்பதை எதிர்க்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் சொல்வதைப் போன்ற அபத்தத்தை நான் வெறுக்கிறேன். நீ எங்கு சென்றாய் மோனா? நிழலற்ற இந்த வெயில் புறமுதுகில் வியர்வையாகி கோடுகிழிக்கிறது எதார்த்தை. எவ்விடம் நான் நிற்பதென்ற நிலைகுலைவு அகழ்ந்தெடுக்கிறது வேரற்ற எனதிருப்பை..

இப்போதெல்லாம் திறப்பதில்லை உன் கதவு. மெய் விலாசங்கள் தேடித் திரிவதில் வெடிப்பு கண்டுவிட்ட மனம் தேங்குகிறது தற்காலிக பள்ளத்தின் ஈரத்தில்.. கையள்ளிப் பருக சித்தமாய் இல்லை கண்ணெட்டும் தொலைவில் இருக்கும் கானலை.. வாழத் தெரியாதவரென்றும் அதன் வகையில் பிழைக்கத் தெரியாதவரென்றும் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது மோனா..இருந்தும் நீ திறப்பதில்லை இக்கதவை..

தட்டப்படும் ஒலிச் சத்தம் செவியற்ற மனதிற்கு விழப்போவதில்லை தான். ஒரு குருட்டு யாசகியின் தட்டில் விழும் செல்லாக்காசென கிடக்கிற சலுசு விலையாகிவிட்ட பிரியத்தை யாரும் எண்ணிச் சேர்க்கப்போவதில்லை.. அவரவரக்கு அவரவர் கைமண். அவரவர் காரணம். மண்பாண்டமென மாறிவிட்ட புழக்கத்தில் இல்லாதவையை அருகில் சேர்ப்பதில்லை. என்பதை நீயும் அறிந்து தான் இருக்கிறாய் மோனா..

திரும்பப் போவதில்லை என் திசை..

கைக்காட்டி மரமாகிவிட்ட  இந்நிலையை ரசிக்கிறேன். பிஞ்சுவிரல் பகிர்ந்து கொடுக்கும் சின்னக் கையசைப்பில் முளைக்கிறது இவ்விருப்பு.. பத்துவிரல்கள் போதும் தான்.. மனதோடு கைகோத்து நடக்க.. எவர் பாத்திரத்தையும் களவாடும் எண்ணமில்லை... பசி, தீரா பசி இவை மட்டும் நிறைப்பதில்லை எதையும்.. தேடல், தொடர் தேடல் இவை மட்டும் கொடுப்பதில்லை தாகத்தை.. தாகம், தாகம், பெருந்தாகம் கொண்டு வந்து சேர்ப்பதில்லை நதியை. நதி, நதி ,அதன் அடியில் கூழாங்கல்லாவதை ரசிப்பதில்லை யாதொரு மனமும்..

க்டல் தேடுகிறேன். கைபற்றுகிறேன். அலை போதும், அது மட்டும் போதும்.. நெருங்குகிற ஆழம் இழுக்கிற வேகம் துடித்துத் துடித்து மூழ்கி மூச்சிரைத்துச் சாவ சித்தமாய் இருக்கிறேன்..

கடல் என்பது கடல் மட்டுமே இல்லை, சாவென்பது சாவது மட்டுமே அல்ல என்பதையும் விளக்கிச் சொல்கிறேன்..

இங்கே பகலும் இரவும் மாறி மாறி வருவதை நீ அறியப்போவதில்லை மோனா..

திறவா கதவில் ஒட்டிச்சென்றிருக்கும் ரேகைகள் பற்றி விரியும் என் சுவர் இனி அனுமதிப்பதில்லை யாதொரு மரத்தின் வேரையும்..

போதும் போதுமென்றிருக்கிறது மோனா...


-ரேவா

image : thanks to kavya Reddy


0 கருத்துகள்: