உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 5

 

மழை மேகம் இங்கே கூடத்தொடங்கியிருக்கிறது மோனா.
எங்கிருக்கிறாய் நீ, எதிலும் குளிரற்ற சொல் வாட்டுகிற வெயிலின் தனிமைக்குள், சிறு ஆறுதலாவது கடல் பார்க்கிற மெளனம் தான் மோனா.. ஒரு  நீண்ட மெளனம் உன்னை துணைக்கழைக்கிறது என் பேசா சொற்களின் ஊடே. பெண்டுல மனதில் ஆடிப்பார்க்கிற இடவல நகர்வுகள் எனக்கு ஏற்பதில்லை என்ற போதும் விருப்பமற்றதை விரும்பிச் செய்கிறதைப் போன்ற காலம், சிறை விட்டுப் பிரிந்த தனிமையின் ஒற்றை இறகு தான்..

விளையாட்டுப் பொருளாகிவிட்ட பிரியங்களை, குழந்தையின் செப்புப் பானைகளைப் போல் பழக்கப்படுத்திவைத்திருக்கும் விரல்கள் என்னை பயங்கொள்ளச் செய்கிறது மோனா. தவிப்படங்கா ஒரு தவமொன்றை யாரும் கலைக்காதிருக்க வேண்டுகிறேன். பரிமாறப்பட்ட ஈர நெஞ்சின் நினைவுகள் பசிதூண்டும் ஆவலை அதிகரிக்கிறது மோனா.. ஓர் உச்சி வெயிலில் இரு மதில்களுக்கு இடையே  கம்பிகள் செருகி அதன் இடைவெளியில் போர்வை போர்த்தி, வீடென உருவகித்து விளையாண்ட காலங்கள் இனி திரும்பப் போவதில்லை என்ற நிஜத்தை கண்ணாடியின் பிழைக்கண் வழியாய் தரிசிக்கிறேன்.

நெஞ்சு முட்டும் விம்மல்கள் எரிகல்லென வீழ்கிறது கனவின் நிலத்தில். நம் நிலா வளர்வதில்லை, என்ற ஏக்கம் உனக்கும் இருக்கும் தானே.. பெளர்ணமிக் கடல்  நம் நினைவின் கரைக்கு ஏன் வருவதில்லை மோனா. கைகள் பற்றி நடந்த கடல் மண், கண்களில் உவர்ப்பை உகுக்குகிறது. அதன் ஆழம் யாரும் அறிவதில்லை. சிரிப்பதைப் போன்று நடிப்பதின் கலை எனக்கு கைவருவதில்லை அதனாலே தனிமை வனம் புகுகிறேன். யாரையும் என்னுள் அனுமதிக்கா குணம் அடர்த்தியாக்குகிறது என்னை எல்லாவற்றிலிருந்தும். நான் திரும்பவதில்லை திசைகாட்டி முட்களின் திசைகளுக்கு.. கழன்று விழுந்த திசைகாட்டி முட்கள், கடல் கோர்த்து வைத்திருக்கும் முத்துகள் தான் மோனா

அலை திருப்பிவிடுகிறது உன்னை என் கரைக்கே. நான் ஏற்பதில்லை எதையும்,  பாதம் நகர்வதில்லை, அலை மோதிப் பிரியும் விளையாட்டிற்கு. மெளனம் வேண்டும், கடல் குடிக்கும் அளவில் அதுவும் இருக்கவேண்டும்.

பெளர்ணமி பார்த்த கடலின் வசீகரம் தான் இந்த வாழ்வென்பதை, உச்சியேறும் வரை நாம் பொறுத்திருந்து உணரத்தான் வேண்டுமா?. வளர்வதும், வளர்ந்து தேய்வதும் இயல்பின் மயக்கமென்ற உண்மை எப்போது புரியும் மோனா.

இயல்பாய் இருக்கவிடாத கண்மூடித் தனங்களை, அதன் கட்டுப்பாட்டு அறைகளை துவம்சம் செய்ய நினைக்கிற கோபத்தின் உஷ்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் உருக்குகிறது நிழலை. கரையும் நிழல் ஏன் கூடு திரும்புவதில்லை என்ற அந்தியின் கேள்வியில் முட்டையிட்டு காத்திருக்கிற தவிப்பை, வலி பிரசவிக்கிற எதுவும் உணரும் மோனா..

இங்கே மழை மேகம் கூடத் தொடங்கியிருக்கிறது, இடிச் சத்தங்களினுடே வெடித் தழக்காத்திருக்கும் அந்த மழையின் தாகம் கடல் சேர்வது தானே மோனா.. மழை கடலின் தவிப்பா, இல்லை கடலை சேர நினைக்கும் மழையின் தவிப்பா? மழை என்பது மழை மட்டுமே இல்லை தானே? 

இங்கே மழை மேகம் கூடத் தொடங்கியிருக்கிறது மோனா.. நாம் மழையினூடே கடல் பார்ப்போம் வெவ்வேறு திசைகளின் வழியாய்..

நான் திரும்புவதில்லை மழையற்ற தேசத்திற்கு..

நீ அனுமதிப்பதில்லை கடலை உன் வானத்திற்குள்..

ஆவியாகி பொழியக் காத்திருக்கிற ஒவ்வொரு சொல்லும் மழை.. மழை ஒவ்வொன்றின் பரிமாணமும் இறுதியில் சங்கமிப்பதைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம்..

காரணம் இங்கே மழை மேகம் கூடத் தொடங்கி புள்ளிகளிட்டு தன்னை வனமென வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துளி விதையும் முளைக்கிறது பிரம்மாண்டமாய்..


- ரேவா


0 கருத்துகள்: