உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 5 ஜனவரி, 2016

டைரி

        

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் வருகையால் ஏற்படுகிற சந்தோஷமும், நம்பிக்கையும், அந்த நாள் முழுதும் நிரம்பி வழிகிற இனிப்புகள் கொடுக்கும் கொண்டாட்டமும் அந்த வருடத்தில் நாம் முன்பிலும் விட புதிதாய் பிறந்ததாய் எண்ணவைக்கும். 


ஒவ்வொரு வருடத்திலும் நண்பர்களிடமிருந்தோ அல்லது தங்கையிடமிருந்தோ வந்துவிடும் அந்த வருடத்திற்கான டைரி எனக்கு கொடுக்கிற உற்சாகம் அளவில்லாதது..

அந்த புத்தம் புதிய டைரியில் புதைந்திருக்கும் வாசம் மழை வாசத்தைப் போல் கிறக்கத்தைத் தருவது.. அதை பிரித்து நினைவில் இருக்கிற நாட்களைத் திறந்து பார்ப்பது, கடந்த வருடத்திற்கு கொடுக்கிற மரியாதையாகவும், கான்சியஸ் மைண்ட் செலுத்துகிற தூரத்தை, கடக்க முடிந்த தொலைவை நினைத்துப் பார்ப்பதற்கும், அதே லாகவத்தை அல்லது பிசகியதால் தவறானதை, நேர்த்தி செய்துகொள்ள இந்த வருடம் அனுமதிப்பதாகவும் தோன்றும்..

அதோடு அந்த 365 இந்த வருடம் 366 நாளெனும் புதிர்க்குள் இருக்கும் சுவாரஸ்யத்தை அவிழ்ப்பதில், நமக்குள் நாமே போட்டி போடுகிற, குமைந்து கொள்கிற, உற்சாகமேற்றுகிற, அன்பை, துரோகத்தை, நிராகரிப்பை எல்லாம் அந்த அந்த நாட்களில் எழுதுவதில் இருக்கும் மனத்தேர்ச்சி நம்மை என்னவாய் செய்கிறது என்பதை அறிவது எனக்கு பிடித்த கலை. 

தனிமையை மையிட்டு நிரப்புவதில் இருக்கும் அழகு அனுபவித்த, அனுபவிக்கக் கொடுத்த எழுத்தும், காலமும் மட்டுமே அறிந்த உண்மை.
அந்த வகையில், 

இந்த ஆண்டின் முதல் நாளே தாத்தாவின் மரணத்தில் தொடங்கியதால், முதல் நாளை டைரியில் எழுதும் வாய்ப்பு இல்லாமல் போனது, அதைத் தாண்டி இந்த வருடத்திற்கான டைரி கையில் கிடைக்காததும் ஒரு காரணம். 

காலையில் எதையாவது எழுதிப் பழகிய இந்த பழக்கம் 2015 டைரிகளை நோட்டம் விடுகிறது.. ஆரம்பம் தன்னை என்னவாய் அலங்கரித்துக் கொள்கிறது என்பதைத் தாண்டி, அது எதையெல்லாம் பார்வைக்குக் காட்டுகிறது என்பதை, அந்த வருடத்தில் இறுதியில் பார்க்கும் போது, நம்மில் நாம் ஒரு நேர்மையான ஆளாய் நின்றுகொள்ள முடிகிறதா என்பதை கவனிக்கத் தரும்.. சில சமயம் அதீத நேர்மையால், நம்மீது நாமே கல்லெறிகிற நியாயத் தண்டனையை நமக்குக் கொடுக்கவே செய்யும்..

பிசகியிருக்கிறேன்..

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு எந்த மாதத்திலும் எந்தவொரு பயிற்சியும் ஒழுங்காய் செய்ததாய் அந்த டைரிகள் காட்டவில்லை.. 

கவிதைகள் ஒழுங்கான முறையில் அதில் எழுதப்படவில்லை..அத்தனையும் கணினியின் வழியாய் எழுதியாயிற்று. Personal டைரியும் இதில் அடக்கம்..

2015-ல் கைக்கு வந்த நிறைய டைரிகளால் சில டைரி பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. அண்ணனிடமிருந்து என் தங்கைக்கு வந்த டைரி உட்பட..அதை எதையாவது எடுத்துக்கொள்ளவதில் மனம் உடன்பட மறுக்கிறது.. அது கடந்த காலத்தின் மீது எழுதிப் பார்ப்பதை ஒரு தேக்கம் போலவே அறிவும் ஏற்கிறது.. 

எல்லாம் எழுதாத வெள்ளைக் காகிதங்கள் தான்.. ஆனால் அதில் நிரம்பியிருக்கிற விசயங்கள் ஏராளம் தானே. அதை மதிக்கிறேன்.
இருந்தும் 

இருந்ததில், 

இருப்பதை எழுதுவதால் கிடைப்பது எதுவாய் இருக்கும்?

இன்று எப்படியும் கடைவீதிகளுக்குச் சென்று டைரிகளை வாங்கிவிட வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்..டைரிகள் இல்லாமல் இந்த வருடம் பிறந்ததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை..

எழுதுவதில் இருக்கும் பலன், நினைவின் துணையோடு கடந்த நாட்களை, எழுதித் திருப்பிக் கொண்டுவந்துவிட முடியுமென்ற உற்சாகத்தை, நம்பிக்கையை, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ள் முடியுமென்ற பலம் இருந்திடும் போது, வேறென்ன வேண்டும் எழுதிக் கடக்கும் எதுவொன்றுக்கும்..

டைரிகள் வெறும் டைரிகள் மட்டும் அல்ல, அவை காலத்தின் தூதுவன்..
என்னளவில்..



-ரேவா




0 கருத்துகள்: