உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 3

 

வருடங்கள் பலவற்றை சில வார்த்தைகளால் கடந்துவிட்டோம் மோனா.

உன் சிறு விழி வழியாய் நான் காண்கின்ற உலகம் கடலளவு விரிகிறது எனக்குள்ளே. ஏழு கடல் ஏழு மலை தாண்டிய உள்ளம் எனக்கொரு தீவு. நீ மட்டுமான நீயில் நிறைந்துகொள்கிற இருப்பை, கடல் தொடுவானமென வரைந்து பார்க்கிறேன்.
உன்னை உனக்குள்ளே தேடுவதில் பெரும் களிக்கொள்கிறேன்.

தோள்சாய்ந்து உனை வேறாய் காண்கிற நேரம், சிற்றலையென கால் நனைக்கிறது ஆவல். பெரும் ஆசைக் கொண்டு உன் காதுமடல் ஸ்பரிச்சிக்க நேரும் தருணத்தின் உப்புச்சுவை, கடல் சங்காய் ஒளித்துவைத்திருக்கிறது அடங்கா சுவாசத்தை..

மனக்காதுகள் பொத்தி உன்னை அறிய நேருகின்ற பேராவல், என்னை ஒவ்வொருமுறையும் துடுப்பசைக்கச் சொல்கிறது. காற்றின் போக்கில் அலைவுறும் படகென தனிமை உன் கரை நோக்கி இழுக்கிறது.

சுடுமணல் தன்னில் பதிய நேர்கிற காலடி உன் முத்தம்.
அது ஈரங்களோடு ஒட்டிக்கொண்ட பின்னும் உரைக்கும் சூடு அடைகாக்கிறது அதே முத்தத்தை.

ஆழப்பதியும் முத்தம் உன் உதடுகளின் தீர்க்க ரேகை. நாம்  நம் கரைகளுக்கு திரும்புவதில்லை..அதற்கு கரை ஒரு போதும் நம்மை அனுமதிப்பதில்லை. நடுக்கடலில் குடிகொள்ளும் பெருந்தனிமையை நீயும் நானுமாய் குடித்துக் கடப்போம்..
கடல் சிப்பியின் பொறுமையென அதன் ஆழத்துள் லயித்து மிதக்கட்டும் படகு. 

மனிதரற்ற மனம், பறவையின் குணம் கொண்டு பறப்போம், சிறகுகளென்ற குறியீடு வேண்டாம், துக்கிக்கச் செய்யும் பிரிவுகள் வேண்டாம், நம் வானம், நம் கடல், நம் பறவைகள், நமதான ஆழம், தூரப் பார்வைக்கு புள்ளிகளாவோம். தொலைந்து தொலைந்தே இந்த காதலை மீட்போம்..தொடுவானமொன்றின் தூரத்திற்கே இந்த உணர்வைக் கூட்டிப் போவோம்..


நீ என் சிற்றலை
கடல் நம் இலக்கு..
மிதக்கிறேன் உனக்குள்ளே..

நாம் கரை சேர்வதில்லை. கரை அதற்கு நம்மை அனுமதிப்பதும் இல்லை.. வா 

வருடங்கள் பலவற்றை சில வார்த்தைகளால் ஏற்கனவே நாம் கடந்துவிட்டோம் மோனா.


 -ரேவா

0 கருத்துகள்: