ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்
பாரதியும், ஷெல்லியும்
கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு
இடையே
கூடவே இருக்கும்..
பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை
பேசிய கவிகளென
ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில்
அத்தனையும்
மூச்சிரையாகிக் கிடக்கும்
தொடர்பற்ற எந்தன் எல்லைக்குள்
எல்லைத்தாண்டா பயங்கரவாதம்
தாலியின் வேலியால் கிடைக்கும்
அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்
அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்.
-ரேவா