படம் : நன்றி கூகிள் |
கசங்கிய ரேகைகளுக்குப் பின்
களவு போன என் வாழ்க்கை,
இன்னொரு ஆணிடம்
கவனமாய் இருக்கச் சொல்கிறது...
மீண்டும்
முதலில் இருந்து தொடக்கமா?
என்று நினைக்கையில்
தொண்டைக்குழியில் ஈரம்
விஷமாய் கசக்கிறது...
சலனமே இல்லாமல்
நடக்கும் ஒவ்வொரு
பெண்பார்க்கும் படலத்திலும்,
ஏளனப் பார்வைக்கு மத்தியில்
உடலெங்கும் உணர்ச்சி தீ
கட்டுக் கடங்காமல் எரிகிறது..
சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது
சுற்றியுள்ள கூட்டம்...
தனக்குப் பிடித்தவைகளை
பட்டியல் இட்டு,
பட்டியலின் கடைசியில்
என் பெயரையும் எழுதிச் செல்கிறது
ஆணைப் பெற்ற கூட்டம்..
வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும்
எனைப் பார்த்து சிரிக்கிறது....
இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது..
அப்பாவின் பென்சன் பணத்தின் பாதியிலும்,
அண்ணனின் அலுவலக லோனின் மீதியிலும்,
எடை போடப்படுகிறது
என் வாழ்க்கை...
இல்லை எனும் வார்த்தை
மீண்டும் ஒரு முறை தன்
கோரமுகம் காட்டி
என்னைப் பார்த்து சிரிக்கிறது..
மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...
இறுதியில் ராசியற்றவள்
என்ற முத்திரைகுத்தி
தன் இயலாமைக்கு முகத்திரை
சூடிக்கொள்கிறது சொந்தம்...
இளமையின் ரணம் கணக்க,
இந்த இளமையை சபிக்கிறேன்..
கனவில் மட்டுமே காதல் பேசும்
அந்த ஆண்மையைச் சபிக்கிறேன்...
மீண்டும் ஒரு மழைநாளில்,
தேநீர்க் குவளைக்கு மத்தியில்
அடுக்கப்படுகிறது என் வாழ்க்கை
புதியக் கதை ஒன்று எழுத....