உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 மே, 2012

எனக்குள் தான் நீ...



இதுவரை
உன் பெயர்  நான் அறிந்ததில்லை,
வாய்வலிக்க உன்னோடு
வாயாடிப் பார்த்ததில்லை..
அணு அணுவாய் எனை இம்சிக்கும் 
சிணுங்கலின் இனிமை அறிந்ததில்லை..
எப்போது உன் அழைப்புவரும்
என்ற சிந்தனையில்  சிக்கவில்லை...
அன்பு வைத்து பின் அழுதுவடிக்கும்
அனுபவம்  வாய்க்கவில்லை.
சம்பிராதாய குறும்செய்திகளில்
என் கைப்பேசி  நிறையவில்லை..
எனக்கு மட்டும் என்ற சாட்டையடிகளின்
வலி கொஞ்சமும் உணர்ந்ததில்லை..
உனக்காய் என் சுயம் மறைக்க
இதுவரை நானும் பழகவில்லை
பொய் சொல்லி பின் சிக்கும்
செல்லச்சித்திரவதைகளில் சிக்கவில்லை..
உன் முகவரி தெரியாது
முகவுரையும் அறியாது
கேட்டு தெரிந்துகொண்ட
விக்கிரமாதித்தன் கதை வேதாளமாய்
கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”
எனக்குள் தான் இருக்கிறாய்...






வியாழன், 17 மே, 2012

புரியாத செயல்


கர்ணகொடூரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இதுபோன்றதொரு
சம்பவம்.......

எவ்வளவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளிவிடுகின்றது
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்...

இந்த செயலுக்குப் பின்
எதோ ஒரு வலியும்
மூர்க்கத்தனமும்
மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது...

ஏமாற்றபட்டதன் வலியும்,
ஏமாந்துபோனதன் கோவமும்,
நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது..

முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்,
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரிந்துப்போடுகின்றது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.



திங்கள், 14 மே, 2012

இங்கே மாப்பிள்ளை வாங்கப்படும்.....



                  இணையத்தில் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு கணவன்கள் விற்க்கப்படும்ங்கிற நகைச்சுவை தாங்கிய ஒரு பதிவ படிக்க முடிஞ்சது... பெண்களை எப்பவும் திருப்தி படுத்தவே முடியாதுங்கிற ஒன்லைன் ஸ்டோரி....படிச்சதும் பெண்கள் மட்டும்தான் இப்படியான்னு எப்பவும் ஏற்படுற கோவத்தோட உதட்டோர புன்னகையுமா அந்த தளத்தை விட்டு வெளிய வந்தேன்..அதே இடத்தில ஆண்களை பொருத்தி பார்த்தேன், எதிர்பார்ப்பு ரெண்டு தரப்புக்குமே பொதுவான ஒன்னுதானே... அன்பான ஆண்களை பெண்கள் தேடுனா, அழகான அன்பான பெண்களை ஆண்கள் தேடுவாங்க... சோ இங்க யாரையும் எதுலையும் திருப்தி படுத்த முடியாது, அவங்க அவங்களா நமக்கு கிடைச்சத வச்சு திருப்தி பட்டுக்கிட்டா தான் உண்டு....

கணவன்கள் விற்கப்படும்...... ஹஹா தலைப்பு நல்லா இருக்கா... ஆண்கள் கல்யாணச்சந்தையில விற்கப்படும் கடைச்சந்தை பொருளா போயிட்டாங்களா? இல்லை பெண்கள் தான் தனக்கு வர்ற மனுசன கடைச்சந்தை பொருளா மாத்திட்டாங்களா? ஒன்னும் புரியல...

ஆனாலும் காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற விவாதம் தான் இந்த கல்யாணச்சந்தை...கடவுளே தன் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்கினார்ன்னு சில தகவல்களை நம்மளும் கேள்விப்பட்டுருப்போம்... நான் வரதட்சணை வாங்க மாட்டேன்னு ஒரு முற்போக்கான ஆணாளையும் சொல்ல முடியாது, வரதட்சணை கொடுக்க மாட்டோம்ன்னு ஒரு பொண்ணாலையும் சொல்ல முடியாது....... ஏனா சமூகம் எந்த ஒரு ஆரோக்கிய நகர்வுக்கு பின்னாலையும் ஒரு அதிபாதாள குழியத்தேண்டி போட்டு எவண்டா மாட்டுவான்னு ஒக்காந்திருக்கும்..... நான் இப்படி நடக்கனும்ன்னு சொன்னா ஏன் அப்படி நடக்கக்கூடாதான்னு கேள்விய சுருக்கு கயிறா நம்ம கழுத்துல கட்டிவிடும்...இப்படி அடுத்தவங்க கேள்விக்கு பயந்தோ இல்லை அந்த பயத்த நமக்கு சாதகமா எடுத்துக்கிட்டோ தான் இந்த சந்தை வியாபாரம் இன்னமும் களைகட்டிகிட்டுயிருக்கு.........

ஆண் பிள்ளைகள் பெற்றவங்க என்னமோ நாடாளும் அரசர்கள் மாதிரியும், பெண் பிள்ளைகளை பெற்றவங்க என்னமோ அவங்களுக்கு வரி கட்டி உயிர் வாழும் சிற்றரசர்கள் மாதிரியுமான அமைப்ப நாம பழக்கப்படுத்தி வழக்கப்பட்ட இந்த சமூகம் (முன்னோர்கள்) நமக்கு தந்திட்டு போயிடுச்சு....இன்னுமும் இந்த வழக்கம் நம்ம விட்டு போகலைன்னு தான் சொல்லலாம்...

இன்னைக்கு கல்யாண சந்தையில, ஒரு ஜோடி புதுசா இணைச்சாலும் காசு, புடிக்கலைன்னு பிரிஞ்சாலும் காசு...பணத்தை சுத்தியே இந்த பந்தத்தை நாம கட்டிப்போட்டுட்டோமா? இல்லை என்கிட்ட இருக்குங்கிறத காட்டி இல்லாதவங்களையும் இருக்கிறமாதிரி காட்டிக்க வைக்கிறோமா?

ஆனாலும், அர்த்தமுள்ள வாழ்க்கைங்கிறது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணத்தில தான் கிடைக்குது... இத கேலிக்கூத்தா ஆண்கள் எண்ணலாம், ஆனாலும் பெண் சரியில்லாத எந்த ஒரு இடமும் நரகம் தான், ஆனா பெண்ணுக்கு அப்படியில்லை ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அதோட எந்த பாதிப்பும் இல்லாம அவ சுத்தி இருக்கிற இடத்த பாத்துக்க முடியும்... (சில நேரங்களில் சில கருத்துகள் மாறுபடலாம்)..

எந்த வித ரத்த சம்மந்தமும் இல்லாம ஆத்மார்த்தமா உருவாகிற ஒரு உறவ இன்னைக்கு விலை பேசும் நிலைக்கு மாத்துனதுக்கு யார் தான் காரணம்...... 

இளைங்கலை படிச்சா ஒரு ரேட்டு, முதுகலை படிப்பு முடிச்சா ஒரு ரேட்டு, வசீகரமா இருந்தா ஒரு ரேட்டு, பையன் படிச்சு பாரின்ல இருந்தா டபுள் ரேட்டுன்னு ஆண்களை பெத்தவங்க அவங்களுக்கு கல்யாண் புரட்டி போராட்டம் மாதிரி பிரைஸ் டேக் போட,

பொண்ணுங்கள பெத்தவங்களும், பையன் தனியா இருங்காரா, கல்யாணம் முடிச்சதும் தனிக்குடித்தனம் வந்துருவாரா? ஒரு பையனா இருக்காரா? கம்பெனில இங்கிரிமென்ட் கிடைக்குமான்னு அவனையும் ஒரு பணம் பார்க்கும் மிஷனா தான் பார்க்குது..

இந்த நிலை என்னைக்கு மாறும், மாறனும்ன்னு நினைச்சா,  மாற்றம் முதலில் நம்மகிட்ட இருந்து வரனும் அப்போ தான் அது ஆரோக்கியமான மாற்றமா இருக்கும்... இன்னைக்கு வரதட்சணை வாங்குனா இவ்வளவு வாங்கிட்டான்னும் , வாங்கலைன்னா பையனுக்கு ஏதோ குறைன்னு நினைச்சுடுவாங்கன்னும் சொல்லுறாங்க அப்போ தன் தேவைக்கு சமூகத்தின் மேல பழி போடுற மனப்பாங்கு தான் நம்மில் பலருக்கும்... இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும்...

ஆனாலும் ஒரு வியாபார ரீதியில இந்த உறவுபாலத்தை நாம கட்டிபோட்டுக்க அனுமதிக்கக்கூடாதுங்கிறது மீ ஆசை...முடிஞ்சவரை மனிதர்களின் மனங்களுக்கு மதிப்பு கொடுக்க கத்துகிட்டு, இந்த பணத்தை ஒரு பெரிய அங்கமா கல்யாண உறவுக்குள்ள கொண்டுவராம இருப்போம்...

எது எப்படியோங்க, இன்னைக்கு இருக்கிற நிலை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...ஆண்களே எங்க கண்ண மூடிட்டு உங்களுக்கு என்ன விலைன்னு நீங்களே யோசிச்சு பாருங்க.. உங்க விலைக்கு எப்படி பொண்ணு மாட்டும்?....!?!!!!!!?? உங்க விலைக்கு தகுந்த பொண்ணு கிடைக்க இது வியாபாரம் இல்லை விபச்சாரமும் இல்லை........ வாழ்க்கை பாஸூ.... சோ?.... மீ டோன் டெல் அட்வெஸ்....


அம்மா அம்மிணிகளே எங்க அப்படியே கொஞ்சம் உள்ளுக்குள்ள இருக்கிற மனச கொஞ்சம் தூசி தட்டி கேட்டுப்பாருங்க, பையன பெத்த அம்மா அப்பா கூட இருக்கக்கூடாது, பையன் கூட பாரின்ல போய் செட்லாகி ராயலா ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறேங்களா? பையன் சைடு சொந்தம் மட்டும் ஆகவே ஆகாதுன்னு நினைக்கிறேங்களா?... அப்போ சீக்கிரம் ஜீவன் தாரா பாலிசி மாதிரி, ஒரு முதியோர் இல்லத்தையும் ஒரு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணிடுங்க....................

 
நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்.... 
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா.................



வெள்ளி, 11 மே, 2012

எனக்கு பிடித்தது தனிமை...



சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...

நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு 
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...

தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...

கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....

காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...

இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,

உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
 உதறித்தள்ளும்  உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...


                      முந்தைய பதிவு : என் பார்வையில் வழக்கு எண் 18/9


வியாழன், 10 மே, 2012

என் பார்வையில் வழக்கு எண் 18/9




வணக்கம் உறவுகளே, இதுவரை கவிதை பதிந்த என் தளத்தில் ஒரு ரசிகையாய் என் தளத்தில் வழக்கிற்க்கான தடத்தை பதிந்திட எண்ணியதன் விளைவே இந்த பதிவு...இது விமர்சனம் அல்ல, பல கோலோச்சும் சாம்ராட்கள் இருக்கும் இடத்தில் அது எனக்கு சாத்தியமும் இல்லை, ஆயினும் என்னை பாதித்த விடயங்களை ஒரு பெண் பார்வையில் பதிந்திட உந்திய விசயங்களை என் எழுத்தில் ஏற்றுகின்றேன்.........

காலையிலும், மாலையிலும், இல்லை நாம் நடந்து போகும் வீதிகளிலும் நாம் கேள்விபட்ட ஒரு செய்தியாய் கதைகளம் விரிகின்றது..... ஒரு பெண் முகத்தில் தீரவக வீச்சு.. அதன் காரணகர்த்தாக்களை தேடும் வேட்டையில் கதை நகர, ஒரளவு யூகித்தலை கதை உண்டு பண்ணிவிடிகின்றது, பின் நம் யுகம் தவறென்பதையும் கதைகளம் நிருபித்துவிடுகிறது...

சினிமா பற்றிய தொழிட்நுட்ப அறிவு எனக்கு இல்லை.. இருப்பினும் நம்மை எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் இருந்த இடத்திலே அறைந்து போடுகின்ற வித்தையை இயக்குனர் பாலாஜி சார் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்... புதுமுகங்கள் என்று சொல்ல முடியா நடிப்பை வேலு மற்றும், சின்னசாமியாய் வந்து போகும் சிறுவன் தந்துவிட்டு போகின்றனர்...

கதைபற்றி ஓரளவு கேட்டும் பார்த்தும் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அறிந்த கதையை இங்கு பகிர்ந்திடாது, என்னை பாதித்த இடத்தை பகிர்கின்றேன்... இன்றைய காலகட்டத்தில் இரண்டே வகை ஆண்கள் தான் காசுக்கும் காமத்திற்க்கும் ஆசைபட்டு காதல் என்ற பெயர் சொல்லி இளமையின் திமிரில் திரிபவர் ஒரு ரகம், இன்னொன்று தாயின் சாயலில் தனக்கான தேடலை கண்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்கின்றவர்கள் இன்னொரு ரகம் (இது பெண்ணுக்கும் பொருந்தும்...)

இந்த இரண்டு ரக ஆண்களையும் இயக்குனர் கண்முன் படைத்துவிடுகின்றார்... பக்கத்துவீட்டு சிறுவன் மீது காட்டுகின்ற அன்பை தன் தாய் தன் மீது காட்டும் அன்பு போல் பாவித்து தன் தாய்க்கு சமமாய் ஜோதியை எண்ணி அவளுக்காகவே வாழத்துணிகின்ற ஆண்....

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அத்தனையும் கண்முன்னே வந்துவிட்ட நிலையில், இந்த வளர்ச்சியை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா? என்ற கேள்விக்கு  இல்லை என்பதன் பதிலாய், பணக்கார கதாநாயகனாய் வந்து போகும் தினேஷ் என்ற நடிகரின் செயல் நம் கண்ணுக்கு கிடைக்கிறது..இதே இடத்தில் அந்த பெற்றோரின் அலட்சியமும், நாம் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணத்தை எடுத்துகாட்டிவிட்டு செல்கின்றன...

இன்று நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் தைரியம் அவ்வளவு சீக்கிரம் எவருக்கும் வந்துவிடுவதில்ல.. அப்படியே வந்தாலும் அது ஈரானிய படங்களோடு நின்றுவிடுகின்ற அவலம் இந்த படத்தில் தீர்ந்தது.. சினிமாவை பணம் பார்க்கும் தொழிற்சாலையாய் பார்த்து பழக்கப்பட்ட பலர் கண்ணுக்கு இந்த சமூதாயத்தை பற்றிய அக்கறை இருத்தாலும் பணம் என்ற மாயை அனைத்தையும் மறைத்துவிடும்..இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்ற பல ஆபாச பதிவுகள் இன்றைய இளைய தலைமுறையை எத்தளவுக்கு சீரளிக்கும் அதற்கு பெற்றவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று பாடம் சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9... புதிய பாணியில் யாரும் முயற்சி பண்ணாத கேமிரா அமைப்பு என்று கேள்விபட்டேன் அது என்னவோ உண்மைதான். கதை நடக்கும் இடத்திற்கு நாமும் சேர்ந்து பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது அந்த உணர்வை தந்த விஜய் மில்டன் சாருக்கு நன்றி... இசை கதையோடே இணைத்திருக்கின்றது..ஒரு குரல் கேட்குது, வானத்தையையே எட்டிப்பிடிப்பேன் இந்த இரு பாடல்களும் இன்னும் முனுமுனுக்க செய்கின்றன...

ஆர்த்தியாய் வந்து போகும் 12ம் வகுப்பு பெண் நாயகன் தினேஷ் வைத்திருக்கும் மொபைல்க்கு ஆசைப்படுவது சற்று நெருடலாய் தெரிந்தாலும் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் இன்னும் இருக்கின்ற நிலையில் இனக்கவர்ச்சி எந்த அளவுக்கு நம் வாழ்வை மாற்றிப்போட்டுவிடும் என்பதற்க்கான ஆர்த்தியின் கதாபாத்திரம், அதோடு இன்றைய தலைமுறைக்கே இருக்கும் அசாத்திய தைரியத்தால் தினேஷ்னின் மெமரிகார்டை எடுத்துவிட்டு அவன் நட்பை தவர்ப்பது போன்ற இடங்கள் இன்னும் பெண்கள் எவ்வள்வு பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதை காட்டுகின்றது...

அடுத்து வேலு என்ன நடிப்புடா சாமி, போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியாகட்டும், மற்ற அதிகாரிகளால் அடிக்கப்பட்டு, உயர் அதிகாரியாய் வரும் அந்த பாம்பின் பேச்சுக்கு மயங்கும் இடமாகட்டும், ஜோதியின் முகமாற்று சிகிச்சைக்காய் தன் 10வருட வாழ்வை இழக்க தயாராய் இருந்த இடமாகட்டும், உணர்வுகளில் ஒன்றாகி அவரின் தனிமையின் வலியை  நமக்கு தந்து விட்டு செல்கிறார்... எதார்த்தமாய் சென்ற கதைக்களம் முடிவில் சற்று சினிமாத்தனம் திணிக்கப்பட்டது என்று தான் சொல்லவேண்டும்.....

அரசியல்வாதியாய் வரும் அந்த முகம் தெரியாத நபர் எப்போதும் பெண்களோடு சல்லாபம் செய்யும் காட்சியும் சினிமாத்தனமா தான் எனக்கு தெரிந்தது....பழிக்கு பழி தீர்வாகது என்ற போதிலும் ஜோதி அந்த போலிஸ் அதிகாரி மீது தீராவகம் வீசியது கண்டு ஏனோ என்னை அறியாமல் கைதட்டிவிட்ட இடம்... ஜோதியின் மீதும் அவர் கதாபாத்திரம் மீதும் அப்போது தான் எனக்கு மதிப்பு வந்தது...

இறுதியாய் இந்த படம் பார்வையாளருக்கு செல்லவேண்டிய விஷயங்களை சரியாய் சொல்லியதா என்றால் ஆம் என்றே சொல்வேன்... நம் இளைய தலைமுறை பயணப்பட வேண்டிய தூரம் அதிகம், அதற்கு பெற்றோர்களின் பங்கும், இந்த இணையத்தின் பங்கும் அதிகம்... இன்றைய தலைமுறைக்கு நல்லதை சொல்லித்தருவதை முன் கெட்டதின் தாக்கத்தை முதலில் செல்லித்தந்துவிட வேண்டும், பெண் பிள்ளையை பெற்றவரும், பெண் பிள்ளைகளும் இன்றைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு தீர்வு சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9...இன்றைய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு தூக்கி நிறுத்திய படம் இது என்று சொல்வதில் பெருமையே...

கதை வழக்கிற்க்கு தீர்வு சொல்லியாகிவிட்டது, வாழும் காலத்திற்க்கான் தீர்ப்பை நாம் தான் வழங்க வேண்டும்...வாகை சூடவா படத்திற்கு அடுத்தாற் போன்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்............... நன்றி உறவுகளே.


செவ்வாய், 8 மே, 2012

நன்றி மட்டும் சொல்லிட முடியுமா?!?



தொட தயங்கிய நிமிடங்கள்,
தொட்டுவிட்ட நாழிகைகள்...
கூண்டுக்குள் சிறைபட்ட வேளைகள்,
விடைதெரிந்து விடுபட்ட காலங்கள்,
ஓங்கிய கையை கண்டு பயந்த நேரங்கள்,
மீறுதல் மூலம்
வெல்லத்துணிந்த தருணங்கள்,
இப்படியா? அப்படியா?வென
குழம்பித்தவித்த தருணங்கள்,
எப்படியும் என்ற விருட்சத்தில்
வேர் விட்ட பொழுதுகள்..

பாதை அறியேன்
பயணம் புரியேன்,
எழுத்தின் மூலம் அதையும் அறிந்தேன்...

எதுவும் தெரியாது,
இதுவும் புரியாது,
எவையும் இங்கு லேசில் கிட்டாது...

வெல்லத்துணிந்தேன்,
வேட்கை கிடையாது,
சொல்லத்துணிந்தேன்
வார்த்தை அறியாது...

எடுத்துவந்தேன்
சில உணர்வுகளையும்
சில வார்த்தைகளையும்,
தொட நினைத்தேனோ?
தொட்டுவிட்டேனோ?
எவையும் அறிந்திட முயலாது
நடைபயில்கின்றேன்
இந்த மாயவுலகில்...

கவிதையென்றேன்
கைதட்டுகிறவர் பலர்
பெண் கவிதையில் காமமென்று
காரி உமிழ்கின்றனர் சிலர்..

பலரில் சிலரை வென்றிடும்
வேட்கையில்,
வில்லெடுத்தேன்,
சொல்லெடுத்தேன்
கவிதை கொண்டே
கணை தொடுத்தேன்...

பெண்ணெனும் வட்டத்தில்
என்னை அடைத்திட முடியாது,
அடைத்திடும் பலம்
அவ்வளவு எளிதில்
எவருக்கும் கிட்டாது..

காதல் கொண்டே
கவிதை தொடுத்தேன்
அந்த காதலையும்
கற்பனையில் நிறைத்தேன்...

அனுபவமா என்று ஆராய்ச்சியில்
ஆளுமைகள் இறங்க,
என்னையும் எழுத்தையும்
கண்ணெனத் தொடரும் நட்பாலே
ஏற்றம் கண்டேன்
இதோ என் பாதை விரிகிறது,
என் பயணம் தொடர்கிறது,
சிறை பட்ட சிறகுகள்
சீற்றம் கொண்டே உயரப்பறக்கிறது...
ஊர் குருவியென்றுயெமை
நினைத்திருந்தால்...?.....!!!!!,,,,,,?
இந்த வெற்றி கிட்டிடாது.................

இதை வெற்றியென்று
எம் சிந்தையில் ஏற்றாது,
இனி எதையும் சிறப்பாய் செய்ய
சித்தமாயிருக்க,
எமக்கு தெளிவுதந்த இவ்வுலகிற்க்கு
 நன்றிக்கடனாய்
என் உணர்வுகள் தைத்த
வார்தையை கொண்டு
கவிதையென்று வைக்கின்றேன்...

எப்போதும் போல
வாழ்த்துபவர்களை வணங்கி,
தூற்றுவோரை துதித்து,
இதோ பயணத்தை
ஆரம்பிக்கின்றேன்
நானாய்..........................


வணக்கம் பதிவுலக சகோக்களே, நன்றி சொல்லி இந்த பதிவை ஆரம்பிப்பதற்க்கான நோக்கம் இந்த பதிவு எண்ணிக்கையில் 200 தொட்டாலும், இப்போதே நடைபயில ஆரம்பித்திருக்கும் என் எழுத்துகளுக்கான களம் தான் இந்த தளம் என்பது மறுப்பதற்கில்லை....இதுவரை என்னை பின் தொடர்ந்தும் வாக்குகளிட்டும், கருத்துரையிட்டும் என்னை உற்சாகப்படுத்திய அத்தணை இதயங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்லிட முடியாவிடுனும், என் மனமார்ந்த நன்றிகள்....

எனக்கான பாதை தெரியாமல் பயணித்த வேளைகளில் வலைச்சரம் மூலம்  முதல் முதலாய் என் தளத்தை அறிமுகப்படுத்தி என் வேரூன்றுதலுக்கு காரணமாய் இருந்த பன்னிகுட்டி ராமசாமி அண்ணனுக்கு இவ்விடம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்...

எல்லாரும் எழுத்தின் மீதான காதலால் இவ்வுலகம் வந்தார்கள் என்றால், எனக்கு என்னை மறைத்துவைத்துக்கொள்ள ஒரு இடம் தேவைப்பட்டது அதுதான் என் தளம், நாள் செல்ல செல்ல எனக்கான தேடலுக்கான பதிலை இந்த பதிவுலகத்தில் பெற்றேன்..ஆரம்ப கால என் எழுத்துகளுக்கும் இப்போது இருக்கும் என் எழுத்துகளுக்கும் இங்கு நான் கற்றுக்கொண்டவைகள் ஏராளம் என்பதற்கு சாட்சி............

என் தவறுகளை சுட்டியும் கொட்டியும் என்னை திருத்திய என் நட்புகளுக்கு நன்றி......... என் பதிவுகள் அத்தனையும் படித்து தனிபட்ட முறையில் தகவல் சொன்ன சகோதரர்களுக்கு நன்றி..........என்னை பின் தொடரும் 201 இதயங்களுக்கும் நன்றி......... இதுவரை என் தளத்தில் 103484 பார்வை பதித்த பார்வையாளர்களுக்கு நன்றி........பாராட்டுகளே தனி ஒரு கலைஞனை உற்சாகப்படுத்தும் என்பதன் விதமாக எனக்கு இதுவரை மறுமொழியிட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி................உங்களாலே இது சாத்தியமாயிற்று.....

இன்னும் சிறந்த பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில்
உங்கள் ஆதரவை நோக்கி இந்த பதிவுடன் ஆரம்பமாகிறேன்..................



செவ்வாய், 1 மே, 2012

சிந்துவாகிய நான்............



                மை இருட்டு கேள்வி பட்டிருக்கின்றேன், இது என்ன மையிட்ட என் கண்களை கூசச்செய்யும் இருட்டு... இந்த எகத்தாள வார்த்தைகளை உதிர்த்த படி நானிருக்க, அங்கு தான் அவன் முதல் காட்சி காணக்கிடைத்தது..பள்ளி பருவத்தேர்வு ஒன்றில், என் பள்ளிக்கு தேர்வெழுதவந்த அவன் நிறத்தை பரிகாசித்து, பிள்ளைகுறும்பை அவனிடம் கொட்ட, சிறுபிள்ளை மனம் கொண்ட அவன் கூனிகுறுகி நின்ற இடம் இன்னும் மனக்கண்ணில் திரையிட, மன்னிப்பு என்னும் வார்த்தை மூலம் நண்பனாய் அறிமுகமானான்.. 

பள்ளி தேர்வுகள் முடியும் தருவாயில், பிள்ளை மனம் கொண்ட அவனின் நட்பும் ஆட்டோகிராப் நோட்டில் தஞ்சம் புகுந்தது.காலப்போக்கில் கரையான் அரிக்கும் பக்கமாய் நட்பின் நினைவுகள் ஒவ்வொன்றையும் காலக்கரையான் அரிந்து தின்றுகொண்டிருந்த காலமது. கல்லூரி வளாகத்தில் சேர்க்கை விவரம் அறிய நின்றிருந்த இடத்தில் மீண்டும் துளிர்ந்தது எங்கள் நட்பு,, மோகன் இதுதான் அவன் பெயர். இந்த பெயரை தன் அம்மாவிற்க்கு அடுத்து நானே அழைப்பதாய் அடிக்கடி சொல்லிக்கொள்வான். கல்லூரியில் எல்லாருக்கும் மோகன் என்றால் கரிச்சட்டி என்று தான் அறிமுகமாகியிருந்தான். இவன் அதிர்ந்து பேசி ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. அன்று அந்த சம்பவம் நடக்கும் வரை....உனக்கும் சிந்துக்கும் காதலாமே, உனக்கு எங்கயோ மச்சமிருக்குடா? உன் கலருக்கு அவளா என்னால நினைச்சே பார்க்கமுடியலடா? என்னத்த காட்டி அவள மயக்கின சொன்னா நாங்களும் முயற்சி பண்ணுவோம்ல இந்த வார்த்தை கேட்கும் வரை பொறுமையாய் இருந்த மோகன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு அவர்களுடன் சண்டையிட என் தோழிகளின் வாயிலாய் இந்த பிரச்சனையை அறிய கல்லூரி வளாகத்திற்க்கு செல்லுவதற்க்குள் தலைமை நிர்வாகிகளால் மோகனும் பிற நண்பர்களும் இடை நீக்கம் செய்ய பெற்றனர்..

 இதுவரை உணராத அவன் இருப்பை அவன் இல்லாத இந்த பத்து நாட்களில் உணர்ந்தேன்..அவன் அன்பு என்னை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதை எனக்கே அடையாளம் காட்டியது அவன் இல்லாத அந்த நாட்கள்... அன்று மாலை கல்லூரி முடித்து வரும் தருவாயில் எனக்காய் காத்துக்கொண்டிருந்தான் மோகன்.

சிந்து கொஞ்சம் இரு நானும் வரேன்..
அட மோகன் இங்க எங்கே  நீ உன்னை தான் காலேஜ் ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்கள்ல அப்பறம் எங்க இங்கே..
சிந்து நீ இன்னும் மாறவே இல்லை, ஸ்கூல்ல பாத்த அதே சிந்து தான், இன்னுமும் என்னை கேலி பண்ணுற சிந்துவா தான் இருக்க.
சாரி டா எதோ விளையாட்டுக்கு சொன்னேன், சரி எதுக்கு இங்க வெயிட் பண்ணுற மோகன்..
ஒன்னுமில்லை உன்னை பார்க்கனும்போல இருந்தது அதான் வந்தேன் சிந்து.
சரி பாத்துட்டையா கிளம்பு மோகன் எனக்கும் டைம் ஆச்சு...

           இப்படி வெறும் நலம் விசாரிப்புகளில் தான் எங்களில் பெரும்பாலனா நாட்கள் கழிந்தது, ஆனாலும் மோகனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஆக்கிரமித்து வந்ததை உள்ளமது உணர்ந்து கொண்டு தான் இருந்தது..
கல்லூரி முடியும் காலம் வந்தது..இங்கேயும் சின்ன நினைவேட்டில் தன்னை ஒளித்துக்கொள்ள சித்தமாய் இருந்தது நட்பு..

மோகன் என் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து இடுவதற்க்கு பதிலாய் தன் காதலை சொல்லியிருந்தான்..என் மனமும் அதை எதிர்பார்த்தாலும், பழைய குறும்புத்தனம் ஏனோ அவனிடம் மட்டும் வந்து வந்து சென்றது...
பதிலுக்கு அவனிடம் சென்று மோகன் உன் கலருக்கு நானா? உனக்கே இது விளையாட்டா தெரியல
எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு மோகன் என்று எப்பொழுதும் போல என் அறியா தனத்தை வெளிப்படுத்த,
எல்லோர் முன்னிலையிலும் இன்றும் தலைகவிழ்ந்து நின்றான் என் நண்பன்... இல்லை இல்லை என்னவன்..சின்ன சீண்டலாய் நான் நினைத்து செய்தது என் வாழ்வை வெகு தூரத்திற்க்கு புரட்டி போட்டது..
அன்று கண்ணீர் மழ்க என்னிடம் இனி உன்னை என் வாழ்வில் ஒரு நாளும் தொல்லை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..
நானும் அவன் வீட்டிற்க்கு சென்று சமாதானம் செய்துகொள்ளாலாம் என்ற துணிவில் அமைதியாய் இருந்துவிட்டேன்..

        இதற்க்கிடையே வேலை தேடும் போராட்டத்தில் அவனை மறந்தே போயிருந்தேன், சற்றென்று அவன் ஞாபகம் துளிர்க்க அவனிடம் சென்றேன், எத்துனை பெரிய முட்டாள் தனம் என்வாழ்வில் அரங்கேறியது என்று அன்று தான் உணர்ந்தேன். மோகனின் தாயார் காலமானதும் அதன் பின் கல்லூரி கேம்பஸ் இன் டர்வீயுவில் செலக்ட் ஆனதற்க்கான பணி நியமனத்தை பெற்றுகொண்டு அவன் கனடா சென்றதாகவும் அவன் இருக்கும் இடத்தில் அருகில் இருப்பவர்கள் என்னிடம் சொல்லி நான் வந்தால் என்னிடம் கொடுக்கச்சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான்..

அன்புத் தோழி சிந்துவுக்கு,

இது நாள் வரைக்கும் என் அன்பு தோழியாய் இருந்தவளுக்கு இந்த பிரிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உன் இருப்பை என் இயலாமையில் உணர்கிறேன் சிந்து. ஒரு தடமாவது என் பெயர் சொல்லி அழைக்க மாட்டாயா என்று ஏங்கித்தவிக்கிறது என் மனம்.. எங்கு சென்றாலும் உன் நினைவு என்னை நிம்மதியாய் என் செயலை செய்யவிடுவதில்லை, அதனாலே இந்த துணிகற செயலில் இறக்கினேன்.. என் அம்மாவின் அஸ்தியை ஏந்திக்கொண்டு உன் நினைவை என் ஆஸ்தியாய் எடுத்துச்செல்கிறேன்.. உன் நட்பு எனக்கு இன்னுமோர் தாய்மடி.. எல்லோரும் என்னை தள்ளிவைத்து விளையாட நீ மட்டுமே என் உணர்வுகளை புரிந்த உன்னத ஆத்மா என்றிருந்தேன், நீயும் சிறுபிள்ளை கையிலிருக்கும் பொம்மை தான் நான் என்பதை உணரவைத்தாய்.

ஆனாலும் தோழியே உன்னை எல்லோரை போலவும் நட்புக்குள் அடைக்க மனம் இடம் தரவில்லை அதனாலே, என் தகுதியை மறந்து இந்த தங்க கிளையை என் உடன் வைத்துக்கொள்ள நினைத்தேன்.. அது எத்தனை பெரிய தப்பு என்பதை இப்போது உணர்கிறேன் டா.. இனி உன் வாழ்க்கையை இந்த நண்பன் கரிச்சட்டியன் இல்லாமல் சந்தோஷமாய் வாழு.. உன்னோடு கழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நெஞ்சுக்கூட்டில் சுமந்துசெல்கிறேன்... நீ என் காதலாக தொடராவிட்டாலும் ஒரு நட்பாய் என்னை தொடர நினைத்தால் இந்த மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்...

பிரியங்களுடன்
எல்லோருக்கும் கரிச்சட்டியன்
உனக்கு மோகன்...
   கடிதம் முடித்த இடத்தில் கரைதட்டி நிற்கும் என் கண்ணீரைப்போலவே சில வார்த்தைகள் அவன் கண்ணீரால் அளிக்கப்பட்டு இருந்தது..ஆனாலும் என் காதல் என் கைவிட்டு போகவில்லை என்ற தைரியத்தில் அவன் மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பினேன்...

எப்படி டா இருக்க மோகன்,

நீ இல்லாம எனக்கு போரிங்கா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை, எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்குடா, நல்ல சம்பளம், லைப் நல்லா போகுது, நீ உடம்ப பாத்துக்கோடா மோகன்... பாய்..

      இப்படியே பெரும்பாலனா மின்னஞ்சல்கள் அக்கறை விசாரிப்புகளாகவே நிறைந்து இருந்ததே தவிர என் காதலை ஏனோ அவனிடம் சொல்ல மனம் அனுமதிக்கவில்லை..

             மோகனிடமிருந்து ஆறுமாதமாய் எந்த மின்னஞ்சலும் வரவில்லை, என்னை பல நூறாய் அறுத்து போட்டதை போன்ற வலி. எந்த செயலையும் செய்ய வாய்க்கவில்லை.. அவன் இருக்குமிடத்தை என் இன்னோரு நண்பனிடம் சொல்லி விசாரித்து பார்த்தேன்,அவனை பற்றிய விவரமேதும் தெரியவில்லை
என்ற செய்தியை தாங்கியிருந்தது நண்பனின் பதில்..இதற்கிடையே எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேற, என் காதலை என் குடும்பத்திடம் சொல்லி அனுமதி வாங்கி, அவனிருக்குமிடம் நோக்கி பரந்து வந்தேன்...

               ஒவ்வொரு நிமிடமும் ஊசியால் குத்தி கிளிப்பது போன்ற உணர்வு அத்தனையும் உன் விளையாட்டு தனத்தால் வந்ததுதான் சிந்து, இந்த செயலுக்கு நீ வாழ் நாள் முழுதும் அனுபவிக்க போகிறாய் என்று ஏனோ மனது அடிக்கடி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.. காரணம் ஆறு மாதத்திற்கு முன் நான் அனுப்பிய செய்தி அப்படி, எனக்கு வந்த வரன் ஒன்றின் புகைப்படத்தை மோகனிடம் அனுப்பி நான் இவனை தான் விரும்புவதாய் அவனை சீண்டி விட்டதன் விளைவு தான் நான் அனுபவிப்பது..

             அவன் இருக்குமிடம் சென்றேன், அவனை பற்றியே செய்தியேதும் அங்கு இல்லை அவன் வேலை செய்யும் இடத்திலும் முன்னறிவித்தல் இன்றி வேலையை விட்டதாய் கேள்விபடவே, எப்படியும் இங்கு வந்துவிடுவான் என்று அவன் இருந்த அறையிலே தங்கி கொண்டு அவன் பணி புரிந்த அலுவலகத்திலே பணி புரிந்து கொண்டிருக்கிறேன்.. இன்றோடு வருடம் ஏழு ஆகிறது.. அவன் எனக்கு அனுப்பிய கடிதத்திலும், மின்னஞ்சலிலும், பரிசு பொருளிலும், அவனறியாமல் அவன் பேச்சை பதிவு செய்த கோப்புகளும் தான் என் இத்தனை நாள் வாழ்வை உந்தித் தள்ளியது..இனியும் அவன் வருவான் என்று உள்மனது உரக்கச்சொல்லிக்கொண்டே இருக்க, இறுதியில் வந்து சேர்ந்தான் என்னவன்... 

            அடடா அவன் உருவத்தில் தான் எத்தனை மாற்றம், பணமும் பதவியும் கிடைக்க பெற்றவர்கள் அத்தனையும் கிடைக்கபெறுவர் என்பது எத்துணை பெரிய உண்மை.. அவன் உருவத்திலும், பேச்சிலும் எத்தனை பெரிய மாற்றம்.. ஆனால் நான் நான், அவனில்லாத இந்த பொழுதுகளில் கணவனை இழந்த கைம்பெண்ணை போலத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.. கவலையின் குறியாய் என் முகத்தில் வயதான தோற்றம், அய்யோ இது அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று உள்ளுக்குள் உழன்று தவிக்கிற கேள்விக்கு விடையாய் அவன் பின்னிருந்து வந்தால் சித்ரா. அவள் உடையிலே தெரிந்தது அவன் மோகனின் மனைவி என்பது.. எத்தனை பெரிய தவறு நம் அறியாமையில் விளைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, எப்போதும் போல என் சிறுபிள்ளைத்தனத்தை இம்முறை போலியாய்

           பரவாயில்லையே மோகன் கடைசில உனக்கும் ஒருத்தி மாட்டிட்டாளா? வாழ்த்துக்கள் பா... எனக்கு இங்கே வேலை கிடைத்தது, அதான் நீ எப்படியும் இங்கு வருவன்னு உன் அறையிலே தங்கியிருந்தேன்.. நான் நினைத்ததும் நடந்திருச்சு, என் நண்பன நான் பாத்துட்டேன்.. சரி டா எனக்கு வேலைக்கு நேரமாச்சு, நான் இந்த அறையிலே தங்கிக்கிறேன். நீயும் உன் மனைவியும் வேறு ஒரு இடத்தில் தங்கிகோங்க டா பீளிஸ்.....

எதற்கு நான் இங்கு வந்தேன் அவனும் கேட்க்கவில்லை... நானும் சொல்லவுமில்லை...என் தவறுக்கு கிடைத்த தண்டனையாய் அவன் நினைவுகளை தனிமையில் சுமந்து கொண்டு, பெற்றோரின் வருத்தத்தை சம்பாதித்து கொண்டு, இன்று வேறு ஒரு நாட்டில் பணி புரிந்துகொண்டிருக்கிறேன்..அவன் இப்போதும் கானல் நீராய் என் காதலை வளர்த்துச்செல்கிறான்.....


சரியான நேரத்தில் கொடுக்கப்படாத மன்னிப்பும், சரியான நேரத்தில் சொல்லப்படாத காதலும் ஆயுள் உள்ளவரை நம்மை கருணை கொலை செய்துகொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் நான்..........................