ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத் தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்
பாரதியும், ஷெல்லியும்
கல்கியும் சாண்டில்யனும்
கூட்டு பொரியலுக்கு
இடையே
கூடவே இருக்கும்..
பெண்ணிய சிந்தனைகள்
பெண் விடுதலை
பேசிய கவிகளென
ஓரு மூலைக்குள் இருக்க
மூளையற்ற இவரன்பில்
அத்தனையும்
மூச்சிரையாகிக் கிடக்கும்
தொடர்பற்ற எந்தன் எல்லைக்குள்
எல்லைத்தாண்டா பயங்கரவாதம்
தாலியின் வேலியால் கிடைக்கும்
அடையாளமற்று திரியும்
எந்தன் உணர்வுக்கும்
அன்னையர் தினமென்றும்
மகளிர் தினமென்றும்
ஒரு நாள்வந்து தொலைக்கும்
அன்றைக்கும்
ஆளுக்கொரு பிரியம்
அடுக்க அடுக்கத்தொடரும்
அடுக்களை மட்டுமே
உலகமென விரியும்.
-ரேவா
ஆண்டிற்க்கொரு முறை
மகளிர் தினம்,
அங்கலாய்க்கவோ, ஆனந்தக்கூத்தாடவே
முடியவில்லை எமக்கு...
கைகளை கட்டிவிட்டு,
கர்ணம் பாயச்சொல்கிற
உலகிது...
சாதனைகள் புரிந்திடாலும்
சாகச வாய்களுக்கு
சாக்கடை புழுவானோம்...
கிடைத்தனயாவும் யாம்
நினைத்தனயன்றி,
இருப்பதைக் கொண்டே
மகிழ்ந்திட்டோம்...
அழுதிடும் மனதில்
சிரித்திடும் உதட்டினின்
துணையினால்,
துயரினை மறைத்திட்டோம்...
ஆளப்பிறந்தவராய் நீர் இருக்க
ஆக்க சக்தியென எம்மை
அழைத்திடும் காரணம்
அறியாது தவித்திட்டோம்...
யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...
சட்டங்கள் மாறுமோ,
சக்தி கை ஓங்குமோ,
உறவின் விலங்குகள்
தகறுமோ?
தொலைந்த எம் சுய முகங்கள்
கிடைக்குமோ?...
கேள்விகள் கொண்டு
வேள்விகள் செய்கின்றேன்...
யாருக்கு கேட்கும்
இந்த பெண்குரல்,
என்று தனியுமிந்த
அடிமையின் மோகம்....