உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

இருவழிச்சாலையின் ஒற்றை மைல்கல்


*

இடை நிறுத்தப்படும் காலத்தின் அறைச்சுவர் மேல்
வண்ணங்கள் ஏறுவதில்லை

பூசி நிற்கும் சொற்பமும் வெளிப்புழங்கும் அனலால்
பெயர்ந்து உதிர்கிறது
மிச்ச ஈரமாக


விலகுதல்
விடுபடுதல்
இரண்டிற்குமான ஏக்கத்தில்
இரவு ஏறி பகல் வருகிறது


பயணப்படும் தூரமென்பது
ஒரு நாளுக்குரிய மணி நேரமாகையில்
கிழிக்கப்படும் தேதியின் கருணை
முந்தைய நினைவின் குடைக் காளான்


இருப்பை பூஞ்சைகளாக்கிடும் மழையால்
ஈரமடிக்கத் தொடங்கும் சுவர்கள்
பலகீனமடைகின்றன
வெளிப்பூச்சிற்கு அவசியமற்று..



-ரேவா

பின் தொடரும் குரல் நிழல்கள்


*


தெரியாத பறவையின் குரலில் நீள்கிறது
நடுநிசி

விரிந்த சிறகுகளின் தொலைவில்
அறியமுடியாத வெளிச்சத்தின் இருட்டு
வசப்பட்டுவிடுகிற பறத்தலிலோ
பழைய பாதை

திரும்பமுடியாதவைகளைக் கொண்டிருக்கிற வழிகள்
திறந்துகொள்கிற குகைகளாகும் போது
மறந்துவிடுகிற மந்திரம்
ஒரு வரம்

மீறி நுழையும் போது
மடி நிறைய அள்ளிவருகிற நினைவுகள்
ஆபத்தானவை
அவை வெளவாலின் தலைகீழ் பிம்பங்களைப் போன்ற
தெளிவற்ற தெளிவில் இருந்து பிறக்கிற
சுமைகூடும் புழங்காததின்
அடர்வாடை

அசைவற்றது அசையும் போது பறக்கிற குணம்
எச்சரிக்கையானது மட்டுமல்ல
அவை
அறியாத நடுநிசியின் குரலைப் போன்று
ஆராயப்படக்கூடியதும்

-ரேவா

பிறப்பின் நூல்


*

திரும்பமுடியா இடம்
திரும்பிப் பார்க்கமுடிகிற இன்னொரு பிறப்பு


ஒற்றை வார்த்தைகளின்
இரட்டைப் பிறப்பு
அச்சு அசலின் வேறு வேறு நிமிடங்கள்


நாம் திணறுகிற நெருக்கடி
அத்தனை விசாலம்
அவ்வளவு சுதந்திரம்


இரண்டு அர்த்தத்தில் ஒளிந்துள்ள
ஒற்றை நூலிழை
நாம் திரும்பிச் செல்கிற தூரத்தின் தொலைவு


தொலைகிறோம்
ஒவ்வொரு நூலிழையிலும்
நூலறுந்த பட்டத்தின் தவிப்புடன்.


-ரேவா

இருப்பதில் எப்போதும்


*

சற்றும் எதிர்பாராத இருள்
ஓசைகள் வெளிச்சங்களாகிட பிறக்கும் கண்

உறுப்பொன்றின் உறுப்பற்ற பிறப்பு
 நாம் அரூபவெளிக்குள் அதைப் போலே சஞ்சரிப்போம்



மெளனக்கூட்டிற்கு திரும்பும் வார்த்தைகளின் 
சிறகுகளைப் போல்
வானத்தில் அத்தனை அமைதி
அமைதிக்குள் ஆழ்ந்த பவித்திரம்


சுத்ததைப் போன்ற அசுத்தம் விளைவிக்கிற 
நியாபகத்தின் தீனிக்கு 
இரையாகாத இடத்தில் பசித்துக் கிடக்கும் தேடல்
இந்த இருள்


இங்கிருக்கிறாய் என்பது
உணர்வொன்றின் உறுப்பற்ற பிறப்பு


மரணமற்று நிறைந்துகிட
இந்த மழை வானைப் போல்
எப்போதும்


-ரேவா

மழைக்காலம்




மழை வடிந்த இரவுகள் காதலால் நிரம்பிய வழியும் விடியல்கள்.

நாசி பிடிக்கும் வரை உள்ளிழுக்கும் காற்றின் ஈரத்திற்குள் சலங்கை கட்டும் மனதிற்கு ஏற்ற இசையென்பது கைகோக்கும் குளிர்காற்றின் தலைவருடல் மட்டுமே. கேசம் அசைக்கிற காற்றில் எல்லாம் புது இசை பிறந்து இரவை காதலோடு தாலாட்டுகிறது.

ஈரம் உலராத தளத்தில் பதிக்கும் பாதத்தில் வேர்கொள்கிற நிறம் வெறுமை உடுத்திப் பார்க்கும் பச்சை நிறம்.. அதற்கு சருகுகள் பற்றி கவலை இல்லை. தொலைதல் கணம் கண்டெடுக்கப்படும் வரை உயிர்கொடுக்கிற பச்சையம் போதுமாகிறது யாவற்றின் யாவற்றுக்கும்.

உள்ளிழுக்கும் ஒவ்வொரு மழைக்காற்றிலும் ஒரு பெரும் வனம் உள்சென்று வெளிவருகையில் இன்னொரு வனமாய் அடர்த்தியாகுகிறது, அதற்குள் தொலைந்து தொலைந்து கண்டெடுக்கப்படுகிற ஓவ்வொரு விதைக்குள்ளும் மழை உடைத்து வனம் பெருகுகிறது..

நான் மழையின் வனமாகிறது போது வனத்தின் மழை என்னை வாரிக்கொள்கிறது விதையாக..

நாசியேறுகிற குளிரின் மேல் குரல் போர்த்துகிற ஞாபகங்களின் கதகதப்புக்கு நிலவின் நிறமிட்டுப் பார்க்கிறேன்.அவை நிலவைப் போல வளர்ந்து தேயும் மாயவித்தை தெரிந்து வைத்திருப்பது இப்போதும் என்னை அச்சுறுத்துவது.

மழையை நினைவில் இட்டு நிலவோடு பருகுகிறேன். கதகதப்பு வேண்டும் தீராத நினைவுகள் குளிரக் குளிர பருகுகிறது அதே ஆதிச் சூட்டை

தனித்து என்ற சொல்லோடு மழையைப் பருகும் போது இருட்டிக்கொண்டு நிற்கிற மேகத்தின் மேல் பெருகுகிற கருணை கட்டுடைக்கிறது, மனம் காணாத ஈரத்தை..

மழை ஈரம் இன்றைய நிலவரப்படி தூரத்துப் பிரச்சார நெடி கலந்த காற்றோடு உள் செல்கிறது..

விடியல் வரும் வரை மழை வலுக்கவே மனதும் பிரியப்படுகிறது..

-ரேவா

இறுதியின் முடிவு


*

காணாமல் போகிறோம்

கண்டெடுக்கும் சொல் கொண்டவர்
கையிலெடுக்கின்றனர்

கைமாறும் ரேகைகளின் மாற்றம்
நிலையைப் போல் நிலையில்லாதது 


காட்டுவழியில் மின்மினி வெளிச்சம்
இந்த கருணை

ஒரு பிரிவிற்கா
இத்தனை திட்டமிடல்
காணாமலே போயிருந்திருக்கலாம்


-ரேவா

டைரிக் குறிப்பு

காலம் நின்று விடுகிறது, நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற வார்த்தைக்கு பின்னிருக்கும் காட்சிகளின் மத்தியில்..

ஒவ்வொரு கூடுடையும் நம்பிக்கைக்குப் பின்னும் பறக்க அனுமதித்த வானத்தின் கருணை?! கற்றுக்கொண்டதின் சுதந்திரம். அல்லது சிறகுகளின் கற்றல்.

நரைகூடும் பருவமென்பதில் வளர்ந்துவிடும் பால்பற்கள் உச்சரிப்பதற்காக வாங்கிக்கொண்ட இன்னொரு வரம். அது வளரும்.. பின் விழுமென்பது பிள்ளை வயது பாடம்.

நாமே தான் வடிவமைக்கிறோம் என்ற புரிதலுக்கு வரும் போது வந்து நிற்கிற நிறுத்தம் அனுமதிப்பதில்லை வயதையும், வாழ்க்கையையும். ஆனாலும் இருக்கும் வரைக்கான ஒவ்வொரு ப்ரயத்தனமும் இருந்து பார்ப்பதற்கான புதிய பிறப்பு என்ற கூக்குரல் பிறக்கும் போது நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற சொல் பறந்துவிடுகிறது ஆளற்ற வனத்தை நோக்கி..

ஒரு சொல்லின் வனம் நாம் என்றும் நடந்துபார்ப்பதற்கான புதிய பாதை. அது அனுமதிக்கிறது எத்திசையிலிருந்து எத்திசையையும்..


மெளனம் ஊறும் சொல்லின் வலிமை



*

யாரோ ஒருவர் முடித்துவைக்கிறார்கள்

டச் ஸ்கீரின் மேல் ஊறும் எறும்பு
அசைத்துப் பார்க்கிறது
மெளனம் என்ற அசையா சொத்தை

கல் தேயும் பழமொழியின் மேல்
நின்று கொண்டிருக்கிறேன்
சிறு எறும்பாக

தொடக்கத்தில் இனிப்பாக இருப்பது குறித்த கேள்வி
யாரோ ஒருவரை பின் தொடர்கிறது

எறும்பின் உணர் வரிசைகள் குறித்து
பேசத்தான் வேண்டுமா?

காத்திருப்பின் தொலைவு


*

காத்திருக்கப் பழகுகிறேன்
முன்பை விட அதிகமாக

அதிகத்தின் தொலைவை
இன்னும் கூட நீட்டித்துக் கொள்

இருப்பதற்கென்ற காரணங்களுக்கு
போதுமாகிறது
இருப்பறியா காத்திருப்பு

-ரேவா

 

போதுமானது


ஏமாற்றம் போதுமானதாய் இருக்கிறது

திரும்பி வருவதற்கான பாதை
இந்த இருள்

வழியும் வியர்வை
உயிர் வாழ்வதற்கான விடியல்

இந்த சப்தமற்ற குடுவைக்குள்
மூச்சுக் குழாயை பொருத்தி வைத்திருக்கிறேன்

குமிழ் குமிழாய் உடையும் சொற்கள்
ஆக்ஸிஜன்

நிறுத்தி வைத்திருக்கிற நம்பிக்கை
இறங்குவதற்கான நிறுத்தம்

தூரத்தில் பெய்கிற மழைக்கு
குளிர்கிற காற்றின் கை
போதுமானதாய் இருக்கிறது இப்போதைக்கு

-ரேவா


மே பைட்ஸ்

1.

தொலைவுகளில் இருக்கிறது
இழந்ததின் அருகாமை


2.

பிரிவை உடுத்திப் பார்க்கிறோம்
அளவுகளுக்கேற்ற கச்சிதம்
அவரவர் வசதி.


3.

நமக்கே நமக்கென்று வாய்ப்பது
தனிமையே என்றாலும் அது நமக்கானது


4.

நிரந்தரச் சொற்களைத் திறந்துவிடுவதன் மூலம்
விடுதலையடைகின்றன கூண்டுப் பறவைகள்


5.

நிலாக் காட்டில்
நீர் அருந்துகிற யானையின் கண்ணில்
பசித்த நினைவு


6.

நெடுஞ்சாலை பிரியமொன்றின் கையசைப்பு
கடத்தி வந்துவிடுகிறது
பயணத்தை புறப்பட்ட திசையிலிருந்து
வேறொன்றிற்கு..


7.

ஆளற்ற இரவில்
பறவையின் சிறகசைப்பு பருகித் தீர்க்கிறது
இந்த கோடைக்கான முதல் சொல்லை




 

குறிப்புகள்



கைப்பட எழுதிப்பார்த்த கடிதம் போல் இருக்கிறது இரவு. வரி வரியாய் எழுதிப்பார்த்த வார்த்தைகள் வரிக்குதிரையின் வேகத்தில் வானில் கலக்கிறது.. பிழைச் சொற்கள் உன் நட்சத்திர வெளிச்சம். நான் நிறுத்திவைக்கிறேன் அதை நிலவின் நடுவில்.. திசை கலைத்து வெளியேறும் காற்று நிறுத்தற் குறியிடாத காதலின் பேரன்பு..
மறைவதும் தெரிவதுமான வளர்பிறை வந்து சேரவேண்டிய விலாசம்.
அஞ்சல் முத்திரை நம் காலத்திற்கான விடியல்.
கைக்கு வரும் வாசித்துப் பார்ப்போம் இந்த இரவை...



-ரேவா

மழைக் காலம்




மழை குளித்த நிலங்கள் முதல் பிரசவம் கண்ட தாயைப் போல் புதுவாடை கொண்டு மணத்துக்கிடக்கிறது..
மழைப் பொழுதின் ஒவ்வொரு வருகையும் ஒவ்வொன்றை உடுத்திக்கொள்ளும் போது இந்த மழையின் நிர்வாணம் காணும் அழகு கன்னிக் கனவு..

ஒவ்வொரு மழையும் ஒரு முதல்..
முடிவுகள் காணாத தொடக்கமென்பது மழைக்கான கொண்டாட்டம்..

வெயிலை மீறி நேற்று பெய்த மழையால் அழகேறிக்கொண்ட வீதிகளை நாலு சுவர்களின் மத்தியிலிருந்து மொட்டைமாடிச் சுவர்கள் தாண்டி பார்க்கும் போது, மீறிப்போகச் சொன்ன மனதை நேற்று கால்கள் கேட்டு பயணப்பட்டது ஒரு சுகானுபவம்..

என்னை மீறிய மனமென்பது எண்ணிலடங்கா கால்களின் கூட்டு.. புரியும் போது அவை விடையறியாத கணக்கு..

பழக்கப்பட்ட வீதிகள் தான் பருவக்கனவுகள் போல் மழைக்காலத்தின் வெள்ளந்தி முகங்களைச் சூடிக்கொள்வது, பால்யத்தோழனின் காதலை நினைவு படுத்துகிறது..

ஏற்கவா வேண்டாமாவென்ற திண்டாட்டங்கள் இல்லாத ரசிப்பு ஒரு கொண்டாட்டம். அது சுத்தமான தேசாந்திரியின் திட்டமிடல். கை நிறைய காரணங்களற்று திசையின்றி போகும் திசை ஒரு முகம். அதன் புதிர்கள் ஒரு வயோதிகம்..

வாழ்க்கை வயோதிகம்.. புரிந்திடும் நரை மழைபோல புதிர்.
நரையென்பதும் மழை..
நனைந்திடக் கிடத்திடும் வரமென்பது நாலு பேருக்கான நன்றியுரை..

இருப்பதைத் தாண்டி இந்த இயற்கை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு வழியும் என் புதுப்பிறப்பு.. அதை மீறச்சொல்லும் அழுகைகள் எல்லாம் என்னிலிருக்கும் எண்ணிடலாங்கா மழை..

மழை ஒரு புதிர்காடு.. பருகக்கிடைத்த தேனீர் விதை..
விருட்சங்களாகும் சிந்தனையோடு கிளம்பிடும் பார்வை ஒரு தனிசுவை..

சுவைத்து வாழ மழையோடு இணைந்து கொள்வோம்..

இங்கே வெயில் மீறி மழைமேகம் கூடத்தொடங்கிவிட்ட இன்னொரு மாலை வீசித்தெறிக்கும் காற்றின் வாடை, நாளை மலரக்காத்திருக்கும் செம்பருத்திப் பூவின் இன்றைய நடனம், மொட்டில்லாத ரோஜா இதழலில் வருகைக்கான கொண்டாட்டம், விதைத்து வைத்திருக்கும் விதைக்கான முதல் இலையென அத்தனையும் மழைவாங்கிக்கொள்ள பிரியப்படுகிறது
முதல் காதலைப் போல..

வா மழையே
முன்நெற்றி முத்தம் என் பைத்தியக் காதலின் தவம்..
வரம் தர வா..

-ரேவா

நீ என்பது என் எழுதாக் காலம்



நீ இருக்கும் திசை நோக்கி என் சொற்களை அனுப்புகிறேன். அவை பிறந்த குழந்தையின் பிஞ்சுப் பாதங்களுக்கு ஒப்பானது. முதல் முதலாய் பூமி பார்க்கும் அதற்கு இந்த உலகத்தின் வழியெதுவும் தெரியாது..தெரிந்ததெல்லாம் அதற்கு பசி மட்டுமே..

பசிக்கும் நேரத்தில் அதன் குரல் அழுகையின் சுவை.. அதற்கு பாகுபாடு இல்லை. பருவங்கள் மாற மாற மாறும் அதன் பருவம் கோடைக்கானது மட்டுமல்ல என்பதை எப்போதாவது புரியவை..

கம்பங்கூழ் நேசமென அருகிப் போய்விட்ட இந்த உலகில் மனித நிழலென்பது ஒரு அடிக்கும் சற்றுக்குறைவாய் போய்விட்ட இந்த பிரபஞ்சத்தில் தான் அது நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு துணை புரி.

மரத்துப் போய்விட்ட பாதங்களுக்குக் கீழ் பதுங்கியிருக்கிற நிழலென்பது நடப்பதற்கான தெம்பென்பதை ஏதாவது ஒரு மழைக்காலத் தேனீரின் போது புரியவை..

ஒட்டுமொத்தமென்பது நாம் வாழும் மிகச்சில எண்ணிக்கையில் அடங்கிப் போவது ஒரு பெரிய கணக்கு. அவை தேறிய வகுப்பின் போது கடினமாய் தெரிந்து பின் வந்து நிற்கும் வகுப்பின் போது எளிமையாய் இருக்கும் கணக்கைப் போல் புரிதல் தருணத்தின் புரிதலற்று.

இறுதியாய் குழந்தையின் பாதங்களென்று அவற்றை அலட்சியப் படுத்தாதே.. அவை ஏழு உலகம் அளக்கும் வாய்ப்பிற்கு உட்பட்டது..

-ரேவா

பெளர்ணமிப் பொழுதுகள்





சித்ரா பெளர்ணமி அன்றைக்கே எழுத நினைத்தது,பின் பகிரமுடியாத சூழலும், மன நிலையும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கையில் தேமேனென்று நடப்பவைகளை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுகளில் சமீபமாய் ஈடுபட்டுக்கொண்டிருப்பதில், நேற்றைய வானமும் வளர்ந்துவிட்ட நிலவும் கொடுத்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் அடைக்கமுடியாத கொண்டாட்டம்..

ஒரு இரவை நிலவைப் பார்த்தபடியே கடப்பதென்பது என் பெரும் ஆசை.. அதை நிறைவேற்றிக்கொடுத்த இந்த கோடையை இன்னும் கூட கொஞ்சிக்கொள்ளத் தோன்றுகிறது. சரியாக 43° C என்று என் மொபைல் வெயிலைக் குறித்துக்காட்டையில் செங்கல் சூளைக்குள் இருப்பதை வீடென்று நம்பிக்கொண்டிருக்கிறோமா என்ற எண்ணத்திற்கு இழுத்துவந்துவிட்ட வெயில்!? இரவுகளில் மொட்டைமாடியை தஞ்சம் புக அனுமதித்திருக்கிறது.

படுப்பதற்கு முன் நீர் தெளித்து வெட்கையை விரட்டும் அம்மாவின் கைகள் சகலத்திலிருந்தும் நம்மை ரட்சிக்க வந்த தேவனின் கைகள் என்றே சொல்லத் தோன்றுகிறது..

அதன்படி நேற்றைக்கு தூரத்தில் எங்கோ பெய்த மழையில் நனைந்த ஈரக்காற்றும், அதற்கு இசைந்து கொண்டு குளிர்வாங்கிய நிலவும் சிரிந்தபடியே என்னை வரவேற்க, மாடியில் பெரும் விருந்தொன்றை செவியில் நிறைத்த ஜோடிக்குயில்களின் பாடலும் மனதை எனக்கு பிடித்த தனிமையின் திசை நோக்கியே இழுத்துப் போனது..

நானிருக்கும் உலகம் சற்று நேரம் freeze out ஆனதில் இன்னும் கூட உண்ட களிப்பிலிருந்து மீளாதவளாய்த் தானிருக்கிறேன். இந்த வாழ்க்கை அத்தனைக்குப் பிறகுமென்ற இடத்திற்கு வந்து நிற்கும் போது கூட கொண்டாடப்படவேண்டியது தான், அதற்கு தயாராய் இருந்தால்.

குறையென்றானது குறைவில்லாதது என்ற மன நிலைக்கு வரும் போது அது கொண்டாடப்படவேண்டியதாய் மாறுகிறது. அப்படியே அத்தனையின் எல்லாமும்.

இங்கே சித்திரைத் திருவிழாவும் கிட்டத் தட்ட முடிகிற நேரத்தில் வீதிகள் எங்கும் நிறைந்து வழிகிற புதுமுகங்களும், கோடையை வேறு இடத்தின் நகர்வில் கொண்டாட வந்த குழந்தைகளும் தூங்கிப் போன வீதியை, ஒப்பனை களைத்த நடனக்காரியின் கால் சலங்கையின் ஓய்வில் இருக்கும் ஆட்டத்தைப் போல் வேடிக்கை பார்க்கிறேன்..

அதன் சலசலப்பு, யாருமற்ற வீதியில் எரிகிற சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் படுத்திருக்கும் நாயின் கண்கள் வாங்குகிற காட்சிகளைப் போல கனமானது.அரூபமானது.

நேற்றைய நிலவைப் பார்த்த படி படுக்கையை விரித்ததில் முகம் பார்த்து கதை பேசிய நிலவு பின் கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குப் பின் நின்று விளையாட்டுக் காட்டையில் தொலைத்த பால்ய தோழியின் சாயலைக் கொண்டுவிட்ட நிலவை, இந்த விடியலில் ஆட்டோகிராப்பிற்குள் அடைபட்ட தோழியின் கையெழுத்திற்குள் தொலைந்துவிட்ட முகத்தைப் போல் தேடுகிறேன்.

என்னிடம் இப்போதும் இரண்டு ஆட்டோகிராப் டைரிகள் உண்டு.. உதட்டுச் சாயத்தை முத்தமென்று பதித்துக் கொடுத்த தோழியின் சாயல் இதழின் ரேகைகளில் ஆயுளை வளர்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நிலவு தானென்று எப்போதும் தோன்றும்.

தேய்வதும், வளர்வதும் மட்டுமே வாழ்க்கையல்ல..

நின்று கவனிப்பதில் வளர்ந்தது தேய்வதும், தேய்ந்தது வளர்வதுமே நம் வாழ்விற்கான ஆகச்சிறந்த நிலாக்காலங்கள் என்று எண்ணுகிறேன்..

இப்போதும் என்னிடம் ஒரு பாடல் உண்டு..

அதையும் பகிர்ந்து விடுகிறேன் ;)

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

#நிலாக்காலம் தொடரும்..

-ரேவா

யோசனை



எதைக் கொடுத்தால்
இதைக் கடந்திடலாம் 


யோசனை ஒரு மைல்கல்
எதிர்திசைக்கு
அதுவொரு சுமைதாங்கி 


தாண்டிப் போய்விட வேண்டுமென்ற எண்ணம்
மூச்சிரைக்கிறது 


எதைக் கொடுத்தால்
இதைக் கடந்திடலாம் 



-ரேவா

அலாரக் குருவி


*

முத்தத்தை பத்திரப்படுத்தும் நாளில்
அது வீட்டின் கடிகாரமுள்ளாக மாறி அசைகிறது

மணித்திரைக்குள்ளிருக்கும் அசைவு
நொடிமுள்ளாகும் போது
சத்தங்களுக்கு சிறகு முளைக்கிறது

குட்டிவானங்கள் மணிக்கொருமுறை சேரும்
அலாரக்குருவியின் சத்தம் நம் முத்தம்
அது நினைவூட்டுகிறது
பசித்திருக்கும் நேரங்களுக்கான கணக்கை

பறக்க நினைக்கும் மணித்துளிகள்
அரூப நெல்மணியாகும் போது
தீர்கிற பசி திறக்கிறது
குட்டி வானத்தை

- ரேவா

மழைக் காலம்






முழுதாய் வளர்வதற்குள்ளான காத்திருப்பை அணில் கடித்துவிட அதன் இதழ்களில் ரோஜா வாசம்.. அதன் குட்டிக் கைகளுக்குள் அகப்பட்ட மலரின் விரிதல் கற்றுத் தேராத காத்திருப்பின் மணம்..

பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் வாடிவிடுகிற மலரின் புரிதலைப் போலவே இந்த கணம். அதன் வாசம் பிறவி உடுத்திப் பார்க்காத செவ்வண்ணம். வளர்தல் ஒருவிதமான காத்திருப்பு, அதன் வசமான புரிதல் வேர்கொண்ட விதைகளுக்கான விடுதலை.. 

சுதந்திரம் நம் கைமணல்.. ஊற்றுகிற சொல்லின் நீர்மை உயிர் வளர்ப்பதற்கான ஆதாரம்.

.
என் செடிகளுக்கு மத்தியில் ஒரு செந்நிற ரோஜா செடியுண்டு.. எப்போதாவது ஜோடியாய் பூக்கும் அதன் புன்னகையின் போதெல்லாம் தொற்றிக்கொள்கிற நறுமணம் என் மறுபிறப்பு. 

இம்முறையும் மொட்டொன்றை வளர்வதற்குள்ளே அணில் கடித்துவிட அதன் விழிகளுக்குள் அகப்பட்ட மிரட்சியை அணில் தன் சத்தங்களின் வழியாய் உடைத்துக் காட்டுகிறது.க்க்க்கிவிக் க்க்க்விக் சத்தம் பாண்டிய நாட்டில் நீதிகேட்கிற பரல்களின் சத்தமாய் மனதை நிறைக்கிறது
நியாயங்கள் என்றும் விலை போவதில்லை.

அது வளர்கிறது புரிதலுக்கேற்ற பக்குவத்தின் நிழலில்..


நாமாக ஏற்றிக்கொண்டுவிட்ட உருவத்தின் மீதான கனத்தில் தவறவிடுகிற கணமென்பது ஒரு யுகத்திற்கான வேண்டுதல்..அது பிடுங்கப்பட்டாலும் மலர்கிறது. மலர்தல் புரிதலின் ஒருவழிச்சாலை..அங்கே திசைகள் இல்லை.
நாமாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட பிம்பம் நம் பிம்பம் மட்டுமா? அது ரோஜாவினுடையதாய் இருந்த போது காத்திருந்தது. அணிலின் இதழாக மாறிய போது கொஞ்சம் கொஞ்சமாய் அணிலின் இதழாய் மலர்கிறது..பின் சுவருக்கு சுவர் வெயில் உடுத்தி தாவுகிறது..

எதையும் எப்படி பார்ப்பது என்பதில் பித்தாகி நிற்பதற்கு பின்னிருக்கும் இருட்டு தனிமை மட்டுமே அல்ல. அது சத்தியத்திற்கான வெளிச்சம். அங்கே சத்தங்கள் நீதிகேட்கிற மெளனத்தின் பரல்கள்..

மெளனம் என்றும் பேசப்படுவதில்லை. அது மிச்சம் வைத்திருக்கிறது காத்திருப்பை. அது கைகூடும் போது உண்ட மிச்சம் போக மிச்சத்தில் விரிகிறது செந்நிற ரோஜாவாக.
இதழ்களைத் தொலைத்ததை ரோஜா கைகாட்டிவிடுகிற போதும், ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது வேரின் பாக்கியம்
அல்லது வேர்கொண்ட மனதின் நம்பிக்கை..

காத்திருப்பின் மிச்சத்தில் சிரிக்கப்பழகிவிட்ட என் ரோஜா இதழ்கள் மாடி முழுதும் பூத்து மணக்கிறது.. இப்போதும் அணில் வருகிறது..
வாடுதலென்பது உண்ணப்படும் / உணரப்படும் வரை உயிர்வாழ்கிறது ஒரு முடிவுறாக் காலத்தைப் போல்.

-ரேவா


டைரிக் குறிப்புகள்



ஒரு நெடுஞ்சாலையின் பிரியமென இருக்கிறது இந்த இருப்பு..

கையசைத்தல் கணம் கவனிக்கும் முன் கழன்றுவிட்ட இலைச்சருகின் பச்சையக் கனவாகிற போது, இந்த வாழ்தலை வாழ்தலின் வழியே ரசிக்கிறேன்..

எதன் பொருட்டும் மண்டியிடப் பழகாத வாழ்தலின் பிரார்த்தனையென்பது வெள்ளைக்கோடுகளாய் சாலையின் இருபக்கமும் பிரிந்துகிடக்கையில் நடப்பதற்கான சாத்தியம் நாம் மட்டுமா என்ன?

எங்கிருந்தோ நீள்கிற வெப்பத்தின் கைகளைப் பற்றிக்கொள்கிறேன். நிழல் என்பது ஒரு நீண்ட தனிமை.. அது வேண்டும் போது தருகிற இருண்மையை, நிழலின் வேறொரு கண்ணாய் பார்க்கிற தரிசனத்திற்கான தவமென்பது
இந்த ஆயுளை ஆயுளுக்குமாய் பயன்படுத்துவது தான் என்ற இடத்திற்கு வருவது ஒரு நீண்ட தியானம்..

அந்த தியானத்தின் முன் மனிதச் சத்தங்கள் ஒரு புல் மிதிபடுகிற ஓசையைப் போன்றது.

கண் திறக்கிறேன்..

புல்லின் மேலிருக்கும் பனித்துளியை விழுங்குகிற வெயில், வெயிலை தன் பாணியில் உறிஞ்சிக் குடிக்கிற அந்தி, அந்தியை இருளில் கரைக்கிற நிலவு, நிலவை மறைக்க இன்னும் கூட தேய்பிறை

ஒன்றை மிஞ்சும் ஒன்று..

வாழ்தல் கொண்டாட்டம்
வாழ்தல் ஒரு பரிசு
வாழ்தல் குழந்தையின் கண்கள்
வாழ்தல் ஒரு அறியா மொழி
சுருக்கமாய்
வாழ்தல் தொப்புள் கொடி

அறுபட்டாலும் ஒட்டிக்கொள்ளும் சுவாரஸ்யம்

கொண்டாடுதல் ஒரு தவம்
கொண்டுவிடுதல் அதன் வரம்..


வரம் வாய்க்கும் ஆயுள் எழுதாக் காகிதம்..

எழுதிப் பார்ப்போம்,

-ரேவா

உண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை


*

எதைக்கொண்டும் தொடங்கிவிடலாமெனும் போது
எதிர் இருப்பது எளிதாகிறது

மாபெரும் பள்ளங்கள் சாத்தானின் முக்கோணங்களன்று
அவை
திரும்பி வரும் சாத்தியங்களுக்கு உட்பட்டது

தொலைதல் கணம் கண்டுபிடிக்கப்படும் போது
கண்டுணர்கிறோம்
உண்மைக்கும் பொய்க்குமான நூலளவு
பேதங்களை

நூல் பொம்மையின் இருப்பென ஆட்டங்கள்
ஆட்படுகிற ஆள் அளவே
அசைவிற்கும் அசைவின்மைக்குமான
நாடகம்

மற்றபடி
உதட்டுச் சாயங்கள்
அழகில்லை என்றால் ஏற்கவா போகிறோம்

நாம் உச்சரிப்போம் ஒப்பனைகளை
ஒப்பனைகளாய்

-ரேவா

மழைக் காலம்



நேற்றைக்கான மழை ஒரு சத்தியத்திற்கான ஒப்பந்தம். வளர்கிற சூட்டை குறைத்துக்கொள்வதைப் போன்றதொரு ஒப்பனை.. துளிகள் வண்ணங்களாய் நிலம் நனைத்த பிரியத்தின் ஹோலி..

மொட்டைமாடிச்செடிகளின் முகவாட்டத்தைப் போக்கவந்த வெயிலின் புன்னகை..

இதழ்களில் பற்றிக்கொண்டிருந்த வறட்சியின் திசைத் தப்பி பெய்த மழை நிழலை நனைக்கிறது ஆனாலும் அங்கே குளிர் வளர்கிறது. குளிரென்பது வெயிலைப் போன்றதொரு குணம்..

குணமென்பது புத்தி தெளிவினைப் போன்றதொரு நிறம்..

நேற்றைய வானம் எதிர்பாராத திருப்பம்..

வெயிலுக்கான முன்னேற்பாடுகளை உறித்துப்போட்டுக்கொண்ட பாம்பின் சட்டை, அது இன்றும் ஈரமாய் பளபளக்கிறது.. பாத வேர்களின் வழி சில்லிட்டு பாய்கிற உணர்வை பாதுக்காக்கிற இடம் இன்னொரு கிழக்கு.

அங்கே சூரியன் எழுகிறது நேற்றைய ஈரத்தை அவிழ்த்து.. கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிற மழை, வாசம் மலர்ந்து வாடிய மலரின் பிறப்பு..

மாடிச்செடிகள் சிரிக்கிறது,வெயிலைப் பார்த்து. வெயில் அதனை அணைக்கிறது தன் பூக்கரங்கள் கொண்டு..

எல்லாம் ரசிக்கப்படவேண்டியவை என்ற இடத்திலிருந்து கொண்டாடப்படவேண்டியது என்ற அறிவின் நகர்விற்கு என்னை எடுத்துவந்த நேற்றைய மழை எனக்கொரு பொக்கிஷம்..

உணர்வுகள் உருமாறும் உருவெளிக்குள் மணக்கும் மயக்கம் மழையின் விதை..

அதற்குள் வனத்தின் கொண்டாட்டம்..

நான் தொலைகிறேன்..

:)

-ரேவா

சொல்லின் இருமுனைப் பாய்ச்சல்



*

பக்கத்தில் இருக்கிறோம்
நிச்சயமற்ற தன்மைக்கு பாதுகாப்பாக

தொலைவு என்பது
6 அடிக்கு முன்னும் பின்னுமான உயரம்

உட்காரும் போது நிலைகொள்ளும் அமைதியை
எழுந்துகொள்ளும் காலடி ஓசைக்குள்
தொலைக்கிறோம்

நடப்பதென்பது அணிந்துரையற்ற தொகுப்பு

நிறைந்திருக்கிற பக்கங்கள் நீங்கலாக
நாம் புரட்டிக்கொள்கிறோம்

-ரேவா

ஏப்ரல் துணுக்கு


1.

கதறி அழ
கட்டி அணைக்க
இருக்கிறேன் என்பதை மெய்ப்பிக்க
சூழும் தனிமையை விரட்ட
நேசிக்கும் மெளனத்தைப் பெருக்க
உடனிருக்கிற இந்த எழுத்து
என் வரம்..


2. 

யாரோ ஒருவராகிவிடும் நிமிடம் அத்தனைச் சின்னது ஆனாலும் அது கனமானது.

3.
மழைச் சொல் தீண்டும்
வெயில் நிலத்தில் பூக்கிறாய்
அரூப புள்ளிகளை இணைத்தபடி

4.

பக்கத்தில் இல்லை
பார்வை மட்டும் பார்க்கும் தூரம்

5.

நடைபாதையின் மொட்டவிழ்கிறது
இனி
நடக்கத் தொடங்கிவிட்ட
பாதையில்
விடியலின் வேர்கள்

6.

முற்றிலும் மாறிவிடுகிற ஒன்றிலிருந்து மாறாத ஒன்றின் அடிப்படை, குழந்தையின் தெளிந்த கண்களைப் போன்ற அறிதலால் தெளிவாகிற அறிவின் பயிற்சி..

7.


பறவையின் இருப்பறியா இரவுகள் பெரும்பாலும் இருளால் போர்த்தப்படுகிறது. பசித்து அழுகிற குரலுக்கு வெயில் அரைத்து குளிர் பூசும் சுவர்கள் மேல் அத்தனை பாந்தம். அதன் சிறகு பறப்பதற்கான வானம்..
வெட்டிய இறகுகள் வளர்கிற காலம் விரிகிறது குட்டி குட்டி வானமாய்.
#இரவுக் குறிப்புகள்

8.

 சராசரிக்கு சற்று அதிகமானது பாதுகாப்பானதாக மாறும் போது, சற்றைக்கு குறைவானது பாதுகாப்பற்றதாக மாறிடும் அபாயத்தின் ஏற்ற இறக்கங்களில்
சரிக்கான சராசரியை மிகச்சரியாய் தவறவிடுகிறோம், பாதுகாப்பு என்ற நிச்சயமற்ற இடத்தில் இருந்து.


9.

மெளனச்சாலைக்குள் வெயில் மரம் தன் நிழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது
சொல்லின் இருமுனையிலோ அந்தியின் கூர்மை.


10.

தேவையென்பது தாகத்தைப் போல் இருப்பதில்லை மாறாக அது தேவையாகவே தேங்கிவிடுகிறது...

11.

அழித்து அழித்து எழுதியும்
திருப்திப்படாத எழுத்து
இந்த மெளனம்..


12.

திரும்பி வர முடியாது இருக்கிற நீள் தேவைக்குள்
அடிக்கிவைக்கப்பட்ட ஒழுங்கின்மைகளை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்

குற்றச்சாட்டுகளோடு ஒத்துப்போவது
முதல் முத்தம் வாங்கிய
நீண்ட கடலைப் போல் புதிரானது

திரும்பி திரும்பி பின்னப்படுகிற வலை
இந்த அலை
சிக்கிக்கொள்கிறோம்


13.

மூச்சுமுட்டுகிற அறைக்கு ஜன்னலாகிற தொலைப்பேசிக்குள்
தொலைதூர வானம்

கை நீட்டி ஆறுதல் தேடும்
துண்டு வெயிலொன்றால் ஒற்றியெடுக்கப்படுகிறது
கைரேகை


14.

உன் குரல்கள் கோர்க்கப்பட்ட மாலையில்
அந்தியின் சருகு ஆரஞ்சு சுளை போலிருந்தது


15.

பைத்தியக்காரத் தனங்களிலிருந்து நம்மை ரட்சிக்கிற
கரங்கள் தேவனுடையதாய் மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அவை நீலம் கோர்க்கப்பட்ட கூர் முனைகளாய் கூட சில சமயங்களில் இருந்துவிடும்..


16.

பைத்தியக்காரத் தனங்களிலிருந்து நம்மை ரட்சிக்கிற
கரங்கள் தேவனுடையதாய் மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அவை நீலம் கோர்க்கப்பட்ட கூர் முனைகளாய் கூட சில சமயங்களில் இருந்துவிடும்..






-ரேவா



தொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து )


               அளவுகள் தெரியாத ஆரம்பம் ஒரு பிரம்மாண்டம். அது புலனாகும் போது தெரிகிற உச்சி இன்னொரு ஆரம்பம், மறுபடியும் இன்னொரு பிரம்மாண்டம்.. இது ஒரு தொடர் ஓட்டம். உட்கார நேருகிற ஒவ்வொரு இடத்திலும் தொடர்கிற மாராத்தான்.
களைப்பு சொற்களின் சுவை.
அகவெளிக்குள்ளிருக்கும் உலகம் அடர்காடு அங்கே சத்தங்கள் பிறப்புறுப்புகள், அது அடையாளங்காட்டிவிடுகிற இனம் மனித இனத்திற்கு அப்பாற்பட்ட உருவ அமைப்புகள். உள்ளிருக்கும் உறுப்பு நம்மை அடையாளம் காட்டிவிடுகிற அல்லது காட்ட மறுக்கிற புற உலகத்தின் மீதோ நமக்கு ஆயிரம் கண். 
இதில் அன்பு என்பதே அத்தனைக்குமான ஆதாரம்..
ஆரம்பிக்கிறேன். 
மற்றபடி
இங்கே எண்ணிக்கைகள் அழியும் கணக்கு. 
அண்ணன்.
பரீட்சயமான சொல்லென்பது வெறும் சொல் மட்டும் தானா? அது ஒரு சுனை.
அதிகம் பழகாத சுபாவம் என்னை நானாய் அனுமதித்த இடமென்பது இடமட்டும் அல்ல. இருந்தும் அங்கே வழக்கமான சம்பாஷணைகளுக்கு இடமில்லை. இந்த பழக்கத்தின் அருகாமையற்ற முதல் நாளை எனக்கு ஆறுதல் தரும் நாளாய் நான் மாற்ற இதை எழுதிப் பார்க்கிறேன்.
கடந்த வருடங்களில் அண்ணனோடு அண்ணனின் பிறந்த நாளில் உடனிருந்திருக்கிறேன். 365 நாட்களின் வித்தியாசம் ஒரு மலையாகிக்கொள்ளும் போது உச்சியில் நிற்கிற நடை வெறும் நடை மட்டும் தானா? அது ஏறி நின்று பார்க்கும் போது சுமை கூடிக்கொள்கிற பார்வையின் கனம். அந்த கனம் இலகுவானது எழுத்தின் வழி. 
இறக்கிவைத்திருக்கிறோம் தொடங்கிய கணத்திலிருந்து கனத்தை.
திரும்பிப் பார்க்கையில் எதுவும் இலகுவானதாய் இருந்திருக்கவில்லை. ஆனால் நின்று கொண்டிருக்கிற இடம் தொடர் சிக்கலின் புதிர் விடை.
வாழ்த்துவதெற்கென்று தனிபட்டு எனக்கு எந்த வார்த்தைகளும் சத்தியமாய் தோன்றவில்லை.. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உடன் வரப் போகிற அண்ணனை எதைச் சொல்லி வாழ்த்துவது..அழுத்தமாய் கைகள் கோத்து உடன் செல்வதைத் தவிர்த்து.
அப்படியும் மீறி வாழ்த்த இந்த நிமிடத்தின் ஆகச்சிறந்த சொல்லாய் மெளனம் மட்டும் தான் இருக்கமுடியும். அப்படியொரு ஆகச்சிறந்த மெளனத்தைக் கொண்டு விளங்க முடியா இந்த வாழ்வின் கடந்து விட்ட ஒவ்வொரு நொடியின் துணையோடும் உங்களை வாழ்த்துகிறேன் அண்ணா..
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
கொண்டாடும் மன நிலையில் நீங்கள் இல்லாது போனாலும் கொண்டாடிக்கொள்ளும் மனநிலை எங்களுக்கானது..
கடந்து போகிற ஒரு நொடி வாழ்வில் அத்தனையும் கொண்டாடப்படவேண்டியது என்பது எண்ணத்தின் முதிர்வு..
மகிழ்ந்திருங்கள் அண்ணா 
அரூபங்களின் கால்கள் ஆடுகிற நடனம் நகர்விற்கானது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா..
இனிக்கும் பொழுதுகள் என்றைக்கும் உங்களுக்கானதாய் வசப்படட்டும்..
அன்பும் வாழ்த்தும்..


-ரேவா




வெள்ளி, 30 டிசம்பர், 2016

சுமை

*

ஆனவரை இழுத்துவரமுடிந்ததில்
தலைக்கு மேல்
சொற்களின் மலை

சொல்வதை எதிரொலிக்கிற திசை
இறக்கமுடியாத
இன்னொரு சுமை


-ரேவா

தலைப்புகள் இடாமல் ஜீவித்திருக்கலாம்

*
நதியாகிவிட்டவரின் பழைய நினைவில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஓர் இலை


பச்சையங்கள் கழற்றிவிட்ட அதை
சருகென்று சொல்வதில் உடன்பாடில்லாது
ஓடவிடுகிற போக்கு
ஒரு கூழாங்கல்

மிஞ்சியவைகளை கரைசேர்க்கிற பால்யம்
ஒரு பட்டாம்பூச்சி 

வளைத்(ந்)து கொடுக்கிற வண்ணங்களில்
சுகப்படுகிறது
நதிகளை இணைத்த பெருமழை

-ரேவா

காட்டிக்கொள்கிறோம்

 *

காட்டிக்கொள்கிறோம்
இரவைப் போல் தெளிந்த வெளிச்சம் பருகிய நம் கோப்பைகள் பரிசுத்தமானதென்று

தீர்ந்திடாத பெரும் நெருப்பில்
இன்றும் எரிந்துகொண்டிருக்கிற
சொல்
குளிர் போர்த்துகிறதென்று


நிர்வாணங்கள்
ஆடைகட்டிய காத்திருப்பென்று


மிடறுகள்
முதல் சுழிகள்


ஆழம்
நம் கடல் வனப்பு


நீ இருக்கிறாய்
நாம் காட்டிக்கொள்கிறோம்


-ரேவா


நிற்கின்றேன்


எழுதியதின் கனம்
எழுதி எழுதித் தீர்க்கிறது

படைப்பூக்கமற்ற காலத்தின் முன்
படைப்பவனும் கலைஞன் தானே

எழுதி எழுதி கணங்கள் கழிகிறது

கனத்திற்கும் கணத்திற்குமான
இடைவெளிக்குள் நின்றுகொண்டிருக்கிறது
வரிசையிடப்படாத அர்த்தங்கள்

நான் எண் மூன்றில் நிற்கின்றேன் 

 =ரேவா


இருப்பது

*

இருப்பதைப் போல் இருப்பதில்லை
எதுவும்


இந்த இருள் இருக்கிறது
விடியும் பகல் இருக்கிறது


இன்றென்பதில் நுழைந்து கொள்வது
அத்தனை சுகம்
வேறுவிதமான பயம்
இருந்தும்
இருப்பதைப் போல் இருப்பதில்லை
எதுவும்.



-ரேவா

கோடை மழை

*
வெயில் பொழுதின் மழைப் புள்ளி சொட்டு சொட்டாய் உறிஞ்சுகிறது மனதின் வெட்கையை..

இதற்காகத் தான் இத்தனைக் காத்திருப்பு.. 

கோடையில் மழை ஒரு கொண்டாட்டம்.. 

வரத் தயங்குகிற அந்த ஈரத்தில், குளிர் போர்த்தக்கிடைக்கா வெட்கை தந்தையின் அக்குள் சூடு.. அதில் பாதம் அழுந்த நடப்பதும், நம் பாதச்சுவட்டை வெயில் உறிஞ்சுவதுமான
விளையாட்டு ஒரு தேர்ந்த மேஜிக் கலைஞனின் ஜாலம்..


ஒரு புள்ளியில் தொடங்குகிற பிரம்மாண்டம் மீண்டும் மீண்டும் அடங்கா தாகம் கொண்டு விழுகிற் இடத்திலெல்லாம் முளைக்கிற அதிஅற்புதத்தில் மழைவாசம்..

வெயிலில் மழைவாசம் நுகரக்கிடைக்கா பிரிந்த காதலைப் போன்ற துயரம்.. அது நாசியில் தேக்கிவைத்திருக்கும் ஞாபகம் ஒரு அடர் போதை..
கொண்டாட்டத்தைக் கொடுத்து ஒரு கணப்பொழுதில் மீண்டும் வெயில் விரித்துக்கொண்டிருக்கும் இந்த சூரியனின் தோகை மழைக்காக நடனமிடும் மற்றொரு நாளுக்காகவும் காத்திருக்கிறேன்.. 

கொஞ்சமே பெய்தாலும் குறையில்லாது நிறைகிறது கோடைமழை..

-ரேவா

அன்பின் நீ(நி)லமை

*

காட்சிகள் மாறுகின்றன 

அடித்தெழுதப்படும் பிழைக் கணக்குகளைப் போல

எளிய சூத்திரம்
எப்போதும் மற(று)க்கப்படுகிறது


அன்பின் தீரா மை
தன் முகம் முழுதும் நீலம் அப்பிச் சிரிக்கிறது


  ஓர் உணர்ச்சிக்குறி முற்றுப்புள்ளியாகும்
அளவே
அவ்வளவும்


-ரேவா

அலை விளையாட்டு 10

*
கொண்டாடப்படவேண்டிய நாளின் தொடக்கம் உன்னிலிருந்து ஆரம்பிக்கிறது மோனா.. 
தொலைத்தொடர்புகளற்ற வனாந்திரத்துப் பறவையின் சுதந்திரத்தைப் போல சிறகுகள் பெற்றுவிட்ட கர்வம் வானளக்கிறது. அது பறந்து பறந்தே பெற்றுக்கொண்டுவிடும் கொண்டாட்டம் வந்து அமர்கிற இடம், நிஜத்தினூடாடும் வாழ்வின் பெருங்கருணை.. 
இலையுதிர்த்துவிட்ட மரங்கள் சூடிக்கொள்கிற வரவில், வசந்தங்கள் பூக்கிறது, அதன் மணம் காட்டுத் தேனியீன் ரீங்கரிப்பால் மொய்க்கும், தேனடைக்குள் நிறைந்திருக்கும் தேனீன் சுவைக்கு ஈடானது..
தித்திப்பென்பது பழகிப்போன கசப்பின் அடிச்சுவையிலும் இருக்கிறதென்ற பழக்கம், பயிற்றுவிக்கிற சம்பவங்களின் வழியே உன்னை நெருங்குகிறேன் இன்னும் ஆழமாய். 
காட்டுப்பாதை விரிகிறது சொல்லொன்றை விதைப்பதின் வழியே..
நுழைகிறேன், தொலைதலின் பொருட்டே..
:) 
காலடித்தடங்களைக் களவாடிக்கொள்ளும் நேசத்தால் புதுப்பாதைகள் உருக்கொள்கிறது. அங்கே நமதென்ற காலடி ஓசைக்குள், ஒத்திசையும் உணர்வுகள் கால்கொலுசு. அந்த உணர்வின் சத்தம் அடர்ந்த காட்டில் நம்மைத் தவிர்த்து யாருமில்லையென்பதைப் போன்ற எண்ணத்தின் ஓசை.. ஓசையென்பது சூல்கொண்ட பெண்ணொருத்தியின் கரு வயிற்றில் நெளியும் கணப் பிறழ்வின் நடனம் ..
தொட்டுணர்கிறேன் நினைப்பதின் வழியே..
ஏகாந்தமென்ற உணர்வின் நூல்கொண்டு பறக்க வாய்க்கிற மனதின் போக்கில் உன்னை நெருங்க நினைக்கிற உயரமெல்லாம் உன்மத்தம்..அது தொட்டுத் தொட்டுப் பார்க்கிற பருவப்பெண்ணின் பருபோல, அழகு கலந்த துயரம்..
உயர உயரப் பறக்கிறேன், காற்றின் போக்கிற்கெல்லாம் அசைந்துகொடுக்கிற காகிதத்துண்டில் சிறைப்பட்டுக்கொண்ட ஈக்குச்சியின் பிடிப்போ உன்னை நாடுமிந்த மனமென்று யோசிக்கிறேன் மோனா..பட்டமென்பதை தாக்கிக்கொண்டிருக்கும் பிடிப்பு தான் ஒரு ஈக்குச்சியைப் போலென்னை எண்ணவைக்கிறது.. இரண்டு தனித்தனிக்குள் சேர்ந்துகொள்கிற ஒற்றைச் சொல்லின் உயரமெல்லாம், பறக்ககொடுக்கிற பிடியின் லாகவமென்பதை உணர்கிறேன்..
பறக்கிறேன் வானை துண்டுக்காகிதமாக்கி.. 
தொட்டுவிடும் தூரம் தான் முயற்சி அது வளர்கிறது, இளைஞன் ஒருவனின் பருவக்கனவுபோல..
ரகசியங்களற்ற ரகசியத்தில் அமைதிகொள்கிறேன்.. 
யாரும் பருக நினைக்காத சுவைக்குள் ஒளிந்திருக்கும் தாகத்தின் மேல், தாகம் கொண்டிருக்கும் இந்த இருப்பை, இந்த கணத்தில் கொண்டாடிக்கொள்ள உன்னை நினைப்பதில் வழியாய், இறுகிக்கொண்டுவிட்ட பனிப்பாறையொன்றின் மீது வெயில் விரிக்கும் கருணையைப் போல், உருகி உருகியே உன் வழித்தடம் நெருங்குகின்றேன்..
குளிர் அனத்துகிற நிமிடம், வெயில் போர்த்துகிறது..
வெயிலும், குளிருமாய் மாறி மாறிப்பெய்யும் பருவத்தின் மேல் மழையின் நடனம், கடல் சேர்வதற்கான விளையாட்டு தான் மோனா..

-ரேவா





உண்மையென்பது பொய்யின் நாடக மேடை


*

கைவிட்டு எண்ணக்கூடிய கணக்கின் தூரம்
அறிவிற்கு வெளிச்சமாகிறபடி பார்த்துக்கொள்கிறோம்

தொடரும் அறிவிலியின் இருட்டுக்கு 

விளக்குகளிருக்க பயமெதற்கு 

விளங்காப் பொருளின் மேதமையின் மீது
கல்லெறிகிற குளத்துக் கேள்விகளுக்குள்
சலனிக்கிற மெளனம்
மெளனம் மட்டும் தானா
கேள்வி எழுகிறது

வளைவுகளின் ஆதாரப் புள்ளி
வட்ட வட்டமாக சுமக்கிறது
ஒரு முடிவுறா முற்றுப்புள்ளியைத் துணையாக்கி
அது
பிரசவிக்கிற கமாக்களில் பெற்றுக்கொள்கிற யுத்த தர்மம்
நாக்கை சுழற்றுகிறது
அதுவரை
பைத்தியக்கணமென்ற உளறுதல்கள்
பேரம்பேசப்படுகிற வியாபாரச் சந்தையாக்கப்படுவதில்
தலைகுனிவிற்கு அஞ்சாத விபச்சாரம்
ரகசியங்களை விலைபேசுகிறது

மலிவுவிலையில் கைமாறும் விலை
விலைமட்டும் அல்ல
கருப்புச் சந்தைக்கு கைக்கூலியானவனின் வழித் தெரியப்போவதில்லை

நியாயம் பேசும் நீ
இங்கேயே நின்றுகொள்ளலாம்

அவர்கள் மேடையேறுகிறார்கள்

-ரேவா




முரண்களின் இருவழிச்சாலை


*
இரண்டு முரண்களை நானுனக்கு பரிசளிக்கிறேன்

பிடிக்கும் போது கையாள்வதற்காய் ஒன்றும்
பிடிக்காத போது கைகுலுக்கி பிரிவதற்காய் இன்னொன்றும்

முதலாம் ஒன்றின் சுவாரஸ்யம்
இரண்டாம் ஒன்றைத் தாங்கிப் பிடிக்க
அடித்தளமாகும்

மேலெழும்பும் அத்தனை கட்டிடங்களுக்கும்
ஏற்றவொரு வெயிலே சமாதானத்திற்கான குடை

எப்போதும் மறக்காதே

நாம் என்றைக்கும் சேர்ந்தே இருப்போமென்ற
முரணில் ஒன்றை நீயே தேர்ந்தெடு

-ரேவா

புரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்



*

நீ கூடத் தேவையில்லை என்று சொல்லும் போது
சொல்லின் நாக்குகள் தீண்டும் சுவைக்கு
சுதந்திரமென்று பெயரிடுகிறேன்

அவை சுழன்றாடுகிற வெளிக்குள்
சலங்கைகள் சத்தம்
குழந்தையின் பிஞ்சுப்பாதத்திலிருந்து பிறக்கிறது

ஒலி மணக்கிற அதன் பால்பற்கள்
குழந்தை பார்க்கிற முதல் காட்சியைப் போல்
அத்தனை பவித்திரம்

அது சிரிக்கப் பழகுகிற அசைவில்
முகம் பார்க்கத் தொடங்கிவிட்ட தொடக்கம்
கடவுள் இருப்பதாய் நம்ப வைத்துப்
பற்றிக்கொள்கிற காட்டுத் தீ

உராய்வு
கொஞ்சம் காற்று
நடக்கிறது
விழுந்து
விழுந்து

கற்றுக்கொண்டுவிட்ட தேர்ந்த சொற்களின் வழி
பற்றி எரிகிற காட்டின் சுதந்திரத்தைப் போல்
நீ வருகிறாய்
நாம் கூடுகிறோம்


-ரேவா

ஆப்ஸ்னல்


*

கோடிட்ட இடங்களை நிரப்புவது போலில்லை
பொழுதுகள்

சில இடங்கள் அடிக்கோடுகள்
பல இடங்கள் கேள்விக்குறிகள்
சிலபலதில் புரியாத ஆச்சர்யக்குறிகள்

சிக்கல் காடுகள் தீர்த்துவைப்பதில்லை
பதிலுள்ள கேள்விகளை

ஆனாலும் எழுதிப்பார்க்கிறோம்
மூன்றில் ஒன்றை
ஒன்றைப் போன்ற வேறுவேறில்..

-ரேவா

நடைபாதைக் காரணங்கள்

*

சில திரும்பிப் பார்த்தல்கள் திருப்திகரமாக இல்லாதபோது சோர்வுறுகிறோம்

அனிச்சை செயல்களாய் மாறிவிட்ட ஒப்பீட்டில்
தன்னளவில் ஏற்படாத திருப்தி
ஒரு நடைபாதை ரோட்டுக்கடை

ஒவ்வாமையென்பது
உண்ண மறுத்த நாவின் திமிரென்பதை
நாம் ஏற்க மறுக்கிறோம்

இயங்குசக்தியில் செரித்துப்பழகிய மூளை
நம் தூரம்

நாம் நடந்துபார்க்கிறோம்


=ரேவா

நிதானத்தின் கடல் நிறுத்தம்


*

விட்டுவிட்டுப் போன சொற்களின் படகு
நீந்திக்கொண்டிருக்கிறது

மிக நிதானமாக
நிதானத்தின் மிகமாக


திருப்பிப் போட்டவுடன் மாறிக்கொள்கிற 
அர்த்தங்களைப் போல
ஆழங்கள் குறித்த கவலையற்ற துடுப்புகள்
கரை சேர
படகுகள் எப்போதும் கடல் நோக்கியே
நிறுத்தப்படுகிறது


-ரேவா




பெளர்ணமிப் பொழுதுகள்

மாதங்களின் வித்தியாசங்களைப் போல் மாறாத அதே நிலவு தான்..
ஆனால் உள்ளாடும் மனதின் அசைவுக்கு பொருந்திப் போகிற செளந்தர்ய இசை இந்த தனித்த?! வளர் நிலவுக்கு எப்போதும் உண்டு..

கோடையில் வளர் நிலவு கொஞ்சம் வித்தியாசமானவையாகவே என்னை எப்போதும் எண்ண வைத்ததுண்டு..

வியர்வையைக் கழற்ற தேடுகிற காற்றின் உடை மனதின் இசை(வு)க்கு அல்லது இரவுக்கு ஏற்ப பொருந்திப் போவது தான் இந்த இயற்கையின் பெருங்கருணை..

வெயில் காலங்களின் வழியே நாம் தரிசிக்கிற இரவின் நிழல் கொஞ்சம் வெட்கையானவையே.. அவை தொடரும் நம் நிஜ நிழல்களையும் அசைத்துப் பார்த்துவிடும் வல்லமை வாய்ந்தவை...

;)

நம்புகிறேன்..

வியர்வையை எழுத்தின் வழியாய் துடைப்பதின் மூலம்..

இயற்கைக்கு அல்லது நிலவுக்கு நான் சொல்ல நினைக்கும் நன்றி என்பது எப்போதும் எழுத நினைத்து மறந்துபோன ஆகச்சிறந்த சொல்லொன்றின் தவிப்பு..
அதை எழுதும் நிலாக்காலங்களின் ஒவ்வொரு பொழுதுகளிலும் நான் உணர்ந்ததுண்டு..

கோடை காலங்களின் என் வளர் நிலவு எனக்கு கொண்டாட்டமானவை..

பிடித்த ப்ளேவர் ஐஸ்க்ரீம் வழியாய் கெட்டிபட்டுப் போன வெயிலை வெளியில் எடுத்து, நிலவை ஸ்பூனாக்கி, நாவை இசை நரம்புகளாக்கி,உணவுக்குழாய் வழியே கரைகிற வெயில் இறுதியாய் சுவாசத்தை குளிராக்கித் தரும் உணர்வு போடுகிற தாளம் ஓரு கொண்டாட்டமான வெளிச்சத்தின் சுவை..

கிட்டதட்ட பிடித்தவர் ஒருவரின் வியர்வை மணம் போல அது அத்தனை போதை..

கரைந்து போன பழைய குளிர் நினைவை ப்ரீசரில் வைத்துக் கெட்டிப்பாக்கிக்கொள்ள நவீனம் கொடுத்துவிட்ட அல்லது கொடுத்துவைத்த இடம் இந்த வளர் நிலாக்காலங்கள்..

ஒவ்வொரு நாளிலும் கூடிக்கொள்கிற வெளிச்சத்தில், இரவுகள் ஏற்றிக்கொள்கிற ஒப்பனை ஓர் ஆடலலங்காரியின் நாட்டியச் சலங்கை..

அது பேசும் இசை நடப்பதின் பித்து..பித்தென்பது புரிந்துணர்வின் உன்மத்தம்..

கையில் மிராண்டாவை ப்ரீசரில் வைத்துக் ஐஸ்கட்டியாய் தன்னை உருமாற்றம் செய்துகொண்ட காத்திருப்பை, கைபொருக்கமுடியா குளிரோடு, உதடுகள் உறிஞ்சும் சுவையென்பது, வறண்ட பொழுதில் கிடைத்திட்ட ஒரு துளி நீருக்கான துடிப்பு..

மொத்தமாய் அதைச் சுவைத்துமுடித்துவிட்டு கைகளை நிலவுக்கு உயர்த்திப் பிடிக்க, மரத்துப் போன குளிர் கைகளை தட்டச்சுவதின் வாயிலாய் உருமாற்றம் செய்துகொள்ளமுடியுமென்ற இந்த காத்திருப்பையும் நான் வளர் நிலவோடு ரசிக்கிறேன்..வெளிச்சங்கள் பொறுக்க..

எல்லா வீடுகளும் இப்போது ஒரே குரலை இசைத்துக்கொண்டிருக்கிறது..

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் இங்கு யாரோ?
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி

நிலாக்காலங்கள் வளரும்..

-ரேவா

பிடித்த பாடல்கள்


*

நம் கடந்த காலங்களை பிரதியெடுக்கிற சர்வ வல்லமை நிகழ்காலங்களோடு ஒட்டிக்கொள்கிற மனிதக்கூரைகளிடம் உண்டு தான்..
எங்கோ, யாரோ, எதன் பொருட்டோ மறப்பதென்ற நினைவில் தேக்கி் வைத்துக் கொள்கிற முரணை, சம்பவங்களின் அடர்த்திக்குள் இழுத்துவந்துவிடும் போது மனதிற்குள் நிகழ்கிற வெட்கை பொழுதை, வியர்த்தது வெளியில் தெரியாத அளவு துடைத்திடத் தெரிந்திடும் பக்குவம் ஒரு பெரும் பயிற்சி..

பெரும்பாலும் பயிற்சி அத்தனையும் ஒரு வதைக்கூடமென்ற எண்ணத்தோன்றுகிறது. 

ஒளிந்துகொள்வதற்கோ அல்லது நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கோ நம்மால் ஆரம்பிக்கப்படுகிற எதுவும் பழையதைப் போல் இருக்கக்கூடாதென்ற நினைப்பில் தொற்றிக்கொள்ளும் பழையதின் ஒரு புதுப்பித்து.
புதியதும், பழையதைப் போல் ஒரு நிறமென்பது நம் நிறமாற்றங்களின் வெளிச்சப்பொழுதுகள் நமக்கு விரித்துக்கொடுத்துவிடும், நிழல் நம் வெயிலின் விருந்து..

கூரைகள் மாறுகிற போதும், நிலம் தன்னைத் தனதாக்கி வைத்துக்கொள்வது தான் இந்த வாழ்தலில் காட்டுச் சுவை இருக்கிறதென்று உணர்கிறேன்..
காட்டுச் சுவை ஓர் இரவின் மகரந்தக் காதுகள்..
போதும் போதுமென்ற ஓட்டங்களுக்கு மத்தியில்
காலையிலிருந்து இந்த பாடல் இசைத்துக்கொண்டே இருக்கிறது.. 


Mounam chorum neram
Kannil thedi njaan
Nin sneham thennum nokkaal
Nenchil peyyum
Neeye…

Mizhiyaake thedum kaavyam neeyaane
Meettum viralukalennum njaanaane
Kaathaake kelkkum paattil neeyaane
Moolum chundukalinnum njaanaane


திறப்பு

*

அத்தனையும் கைவிட்டு போனபிறகும்
அந்த வழிப்பாதை
மலையைத் திருகுகிறது


எங்கோ உயரத்தில் பறக்கிற
குயில்
திறக்கிறது
உச்சிக்கான புதிய பாதையை.


 -ரேவா

வெளிச்சம்

*

உருகும் பனிக்கட்டியை
கைகளில் வைத்துக் கொள்வது போல
இந்த இரவு


அத்தனை வலி
அத்தனை குளிர்
அத்தனையும் மரத்துப்போகும்
அந்த புள்ளி மட்டுமே
அப்பட்டமான வெயில்


வெயிலென்பது குளிரின் வெளிச்சம்

-ரேவா

நிழல் அளிக்கிற நிழல்


*

நீயளித்து உண்ணும் போது தான்
சுவைகூடுகிறது


நிராகரிப்பு
அல்லது
பெயரிடப்படாத ஏதோ ஒன்று


காலாணிகளால் பூத்த மனதை
சம்பவங்களில் வாசத்தால் சிறைபிடித்து வைத்திருக்கிறேன்


சிரிப்பு நிறைந்த அறைக்குள்
நடமாடுகிற நிழல்
நீ அழித்தது


நாம் உறைந்து சிரிக்கின்றோம்

-ரேவா


வரைதலின் வண்ணம்

*
வண்ணங்களோடு சமாதானம் கொள்ளச் செய்கிறது
ஓவியக் கைகள்


வளைவுகள் நிறச்சேர்ப்புகள்
வேண்டும் வண்ணம்
புரிதலின் அடர் கலவை


புதியதை ஏற்றுக்கொள்கிற நிறம்
பழையதின் பால்யம்

வளர்கிறோம்
வண்ணங்களாலே..


-ரேவா


புரிதலின் கோடை


*

புரிதலுக்கு தள்ளப்படுகிற தருணம்
பிழை கணக்குகள்


அடித்து எழுவதின் அர்த்தம்
வெறித்துப் பார்க்கும் போது
கண்களற்றதை காட்டிக்கொடுத்துவிடும்
கவனிப்பு
பெரும் கருணை


திருத்துதல்
வெயில் போர்த்தும் வெட்ட வெளி


பொறுக்கும் சூடு
பொறுக்கட்டும் கணக்குகளை


-ரேவா

இக்கட்டின் முடிச்சு


*
ஒரு காட்டாயம் காட்டிக்கொடுக்கும் போது
கட்டுப்படுகிறோம்

இக்கட்டின் திசை நெருக்குகிற கையில்
இக்கட்டுச் சொல்லின் புதிர்
விடுவிக்கிறோம்

அது
முதல் முடிச்சைப் போல்
அத்தனை இறுக்கம்

-ரேவா

நிறுத்தம்

முக்கியமற்றதாகிவிட்ட வீதிகள்
இனி திரும்பாதிருக்கட்டும்


கையசைப்பில் கழன்றுவிட்ட ரேகைகளைச் 
செப்பனிட்டுக் கொள்ளும்
பொருட்டு
நன்றி சொல்வோம் நிறுத்தங்களுக்கு.


-reva



நீள்கிற பாதையின் புறவழி


இன்று இருக்கிறது நேற்றைப் போல

நேற்றில் இருந்தது இன்றைப் போல்
ஒரு சிறு வெளிச்சம்


நுழைந்து கொண்ட பின்
எரிகிற வெளிச்சம்
இருப்பதின் பிரதானம்


நாம் என்றும் இருக்கிறோம்
நாளையைப் போல்


-ரேவா

கழுத்துச் சங்கிலி



ஓர் அனாதையின் மெளனம் குறித்து
நம்மிடம் வருத்தங்கள் இல்லை

அதன் மீதான பரிதாபத்தில் வளர்க்கிற நம்பிக்கைக்குள்
அரூபத்தின் கழுத்துச் சங்கிலி


கட்டிப் போடுகிறோம்

சம்பவங்களின் கூச்சலைப் பொருத்து
சொல்லின் உரிமைக்கு 

உள்ளேயும்
வெளியேயும் 


-ரேவா


ரிலாக்ஸ் ப்ளீஸ்

*

எதற்கு இத்தனை நடிப்பு

சொற்களின் வரிசையைக் கொஞ்சம் ஓரங்கட்டு
கால் கடுக்க நின்று வந்த என் மெளனத்தை ஏற்றுக்கொள்

பிராகரம் சுற்றிவந்த களைப்பு
கோவில் சிலையென ஒட்டிக்கொண்டு நிற்கிறது

பரிகாரம் தேடாத பாவங்களை
மன்னி
அவை அசலானவை

பாவமென்பது வழக்கொழிந்துவிட்ட
சத்தங்கள்
தேங்காய் உடைக்க சன்னிதியில்
ஓர் இடமுண்டு

சத்தம் வெடிக்கும் போது கிளம்புகிற
விசும்பல்
உன் உப்புச் சுவை

உப்பென்பது நீ கொடுத்த முன்நெற்றி முத்தம்

ஷ்ஷ்ஷ் சத்தமிடாதே

இதற்குத் தானா இத்தனை நடிப்பு

-ரேவா


நாம் எனும் ஸ்மைலீஸ்


பத்திரப்படுத்துதலில் தூரமாகிவிடும் போது
கிணற்றுத் தவளையின் சத்தமென
அதிகரிக்கிறது கனவு

மீறுதலைத் தாண்டாத கோடுகள்
வனம் பூப்பெய்த ஒற்றை விதை
தாண்ட கேட்கிற குரல்
சாத்தானின் ஆப்பிள் மரம்

நாமே உண்கிறோம்
நம் நிர்வாணங்களை மறைக்க

அங்கே ஆதிக்கனவுகள்
பாம்பின் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது

நாம்
விஷமுறிவிற்கென ஒன்றிரண்டு
ஸ்மைலிக்களைப் பத்திரப்படுத்துகிறோம்

-ரேவா

நடைமேடை



வெற்றுப் புன்னகைக்கா இவ்வளவு தூரம்

சொற்களின் நடைமேடை
பயணங்களின் தடங்களை பதுக்கியே வைத்திருக்கிறது


எண்களுடைய பயணிகள்
மாறிக்கொண்டே இருக்கின்றனர்..


- Reva



இரவுக் குறிப்புகள்





வெயில் காலக் காற்றைப் போல் இல்லை இன்றைய இந்த குளிர் காற்று..

கோடையை உறித்துத் தின்னத் தொடங்கியிருக்கும் இரவின் வியர்வையற்ற இந்த பொழுதில், நாசியேறுகிற குளிர் பனிக்கரடியைப் போல் முன் நிற்கிறது. பதுங்குவதை விடுத்து அதன் பளிங்கு கண்களை வேடிக்கைப் பார்க்கிறேன். அதன் சுவாசத்தால் என் கேசம் களைவதை பிஞ்சுச் சிறுமியின் கைகளில் அடங்க மறுக்கிற பொம்மையின் அளவைக் கொண்ட கொண்டாட்டமாகிறேன்.

கொண்டாட்டம் கொடுக்கிறது வியர்வையை, ஆனாலும் அதில் கோடையின் சுவையில்லை..

அறிந்த கசப்பில் சூடாய் தேனீர்.. குளிரில் கோடை இதமாய் இறங்குகிறது.

தொண்டைக் குழிக்குள்
பனிக்கரடி மெல்ல மெல்ல கரைகிறது...

இரவில் தேனீர் என் இன்னொரு நீ...






பெளர்ணமிக் காடு

எல்லாம் மாறிவிடுகிற போது

தட்டுப்படுகிற இருளுக்கு
விளக்கென்று பெயர் வைக்கலாம்.


காற்றிலாடி அது கரையும் இசை
மெளனத்தின் மொழி


அது வளர்க்கிற வெளிச்சம் 

புரிதலின் 
பெளர்ணமிக் காடு..


-ரேவா



ஆதியின் கண்டுபிடிப்பு

ஞாபகங்களை வளர்க்கிறோம்

தாமாக நுழைந்து்கொண்டுவிடும் நியூரான் தீவில்
பசித்துண்ணும் கிழங்குகள்
மணலடியில் வேர்பிடித்திருப்பதை
கடல்சூழ கவனித்துக் கொண்ட பின்னும்
துடுப்புகளற்ற பொழுதை
கரைகளாக்கிக் கொண்டுவிடும் சாதுர்யம்
ஒரு உன்மத்தம்

நீச்சல் தெரிந்துவைத்திருக்காத தப்பித்தல்
கொலைக்கான திட்டமிடல்

கொன்று குவிக்கிறோம்
365 பகைவன்களை

வருடங்கள் தப்பிழைக்கும் போது
தப்பித்துக்கொள்கிற தலைவன்
கொண்டுவருகிறான்
பசிகளுக்கான விடையை

நாம் கரையிலே வளர்க்கிறோம்
தீவுடைய ஞாபகங்களை

-ரேவா



பிடித்த பாடல்கள்

நம் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை நம்மை விட்டுப் போனவர்களின் நினைவுகளுக்கும் உண்டு தானோ என்று இக்கணம் நினைக்கிறேன்..
விட்டுப் போனவர்கள் என்ற சொல்லின் புதிர்
நம் தேடலுக்கான விடை..

பிரித்துப் பார்ப்பதற்கும், பிரிந்து இருந்து பார்ப்பதற்குமான பார்வை வித்தியாசங்கள், தாய்மொழி கூடு பாய்கிற வேற்றுமொழியின் நாவினைப் போல்..
பிசகுதலை லயமென்று ஏற்றுக்கொண்டால்
பாடப்படும் பாடல்?

பிறழ்கிறேன்..
வெளிச்சங்களையெல்லாம் இருட்டடைக்கும் மெளனத்தின் வழியாய் எடுத்துக்கொண்ட கணத்தின் திரை விலகுதல், கொற்றவை நடனம்..
சொல்லின் சலங்கை நிலம் முழுதும் தெரித்து அதிர்கிறது.
அடங்க மறுக்கிறது மனதின் மேடை..
மூச்சுமுட்ட நிலம் பார்க்கும் வேர்வையில்,
பூக்கிறது பூக்காடு..

வாசம் வாசம் எங்கும் தனிமையின் கடல் வாசம்..

ஓர் அடர்பொழுதின் பிடிக்குள் உப்புக்காற்றின் சுவையோடு என்னை வந்த சேர்ந்த இந்த கலைஞனையும், அதற்கு பின் எனக்குப் புழங்கக் கிடைத்த வார்த்தைகளையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்..

காட்சிகள் மாறுகிறது,
கடலாகாது..

கடல்
என்னை ஒவ்வொருமுறையும் வெவ்வேறு ஆழத்தில் காவு வாங்கியிருக்கிறது...

அசைவற்று அதன் ஆழம் பழகுதலை, கிளிஞ்சல் பொறுக்கும் சிறுமியின் ஆவல் கைகளென அலையவிடுகிறேன்..
கடல் விரிகிறது,
புரியப்படாத மெளனத்தின் நீலத்தில்..
மூச்சடைக்கிறது,
நாசியேறிவிட்ட உப்பின் கரிப்பில்..

நான் கடலாவதை, கரை நின்று பார்க்கிற தனிமைக்கு என் மேல் அத்தனை காதல்..
தீண்டுகிறது இன்னும் தீராமல்..
ஷங்கர் டக்கர்..
அண்ணனின் வழியாய் அறியக்கிடைத்த பெயர்,
இன்று எனக்குள் பேசிப் பேசிச் சலித்த என் பெரும்பான்மை பொழுதுகளை, என்னிலிருந்து எனக்கு வேறாக்கித் தருகிற பாடல்கள் இவரது யூடியூப் பக்கத்தில் இருக்கிறது..

நீ நினைத்தால் ஆகாதது உண்டோ என்று மனம் உச்சக்கட்டமாய் கத்த ஆசைப்படுகிற வேண்டுதலில் தொடங்கி, ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடித் தோழி என்ற ஏக்கத்திலெல்லாம் நான் தொலைந்திருக்கிறேன்..
அண்ணனுக்குப் பிடித்த மன்மோகினி பாடலின் ஆண் மேல் எனக்கும் அத்தனை காதல்..

மொழிகள் பிடிபடுவதற்குள் நம்மைத் தொற்றிக்கொள்கிற, பால்பற்களுடைய உணர்வுகள் மட்டுமே, நம்மை மொழியறியும் முயற்சியை நோக்கி முரண்டுபிடிக்கும் குழந்தையாய் வளர்க்கிறது.

இன்றும் நான் முரண்டுபிடிப்பவள் தான்..
இந்த மதியத்தை எதுவுமற்றுக் கழிப்பதென்ற எண்ணத்தை மீறிக்கொண்டு வந்துவிட்ட இந்த கைகளையும், கேட்க ஆசைப்படுகிற இந்த பாடலையும்
உங்களோடு பகிர்வதில் நிம்மதியடைகிறேன்.

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ



-ரேவா

இப்போது




*
கனவிற்குள் நுழைவதைப் போல்
எளிதாவது இல்லை
கடந்ததில் நுழைவது

ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பும் பையில்
திணிக்கப்பட்டவைகள்
உறங்கிப் போன நடுசாம வீதிகள்

நிழலின் பயம்
நடப்பதின் வெளிச்சம்

எங்கிருந்தோ அனத்துகிற இறந்த காலத்தின்
சாவிகள்
எவர்கையிலேனும் இருக்கலாம்

அனுமதியற்ற வாசல்
திறந்தே கிடக்கிறது

இப்போது
வருகையென்பது இறந்தகாலமா எதிர்காலமா?

-ரேவா



நடக்கக் கேட்கும் அறையின் கால்கள்



*
முடிந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி
முடியாத கேள்விகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன

வடக்கு வாசலில் இருந்து கிளம்பும் 
புறாக்கள் அல்ல
இந்த சமாதானம் 

சத்தியத்தின் மீதான மணிச்சத்தம்
எதை எழுப்பிவிடப் போகிறது 

இரண்டொரு மணித்தியாலங்களுக்குள் 
கடந்துவிடவேண்டும்
இருப்பற்ற அறைக்குள் இருப்பவைகள்
முடிந்துகொண்டிருப்பவைகள் 


-ரேவா


சாம்பல் பொய்கள்

*
ஒரு கடவுச் சொல்லைப் போல்
பொய்யைத் திறந்து பார்க்கிறேன்


கையாள்வதின் லாகவம்
மறதியில் புதைவதை
சேற்று மணலென குறிப்பெடுத்துக் கொள்வதின்
ஈரமற்ற வெடிப்புகள் வரைகிறது
நீர் இருந்த ரேகைகளை


சுனையின் சுவையறிந்த பாதங்கள்
நிற்க மறுக்கிற நிலத்தின் கீழ்
பாறைக் குழம்புகள்


வெடிக்கக் காத்திருக்கும் தருணங்கள்
விழுங்கட்டும்
ஒழுங்கீனத்தின் சாம்பல் பொய்களை


நான் என்னைத் திறக்கிறேன்

-ரேவா

எளிய படகு

இருக்கிறேன் என்பதைப் போல்
இருப்பது எளிதாவது இல்லை


இல்லாவது போவது
இருப்பதின் எளிய படகு
அது
ஏற்றிக் கொண்டு போகட்டும்
உடன் வரும் யாவையும்


-ரேவா

...

சொல்லின் கண்கள் நோட்டம் விடுகிற
இருளைத் திறக்கமுடிவதில்லை


இருட்டுப் பூனை
பாலைக் குடிப்பதைப் போன்ற 

கனவின் நிறம் ஊசலாட்டுகிறது
வேர்கொண்ட காரணத்தின் வெளிச்சத்தை


-ரேவா

ஆறுதல்


*

பேச்சற்றப் பொழுதுகள் பேசித் தீர்க்கின்றன
பேச இடமற்ற சொல்லின்
நேரத்தை


கரிக்கோடுகளாகும் வார்த்தைகளை
வரைந்து பார்க்கிற சுவர்
அது மட்டும்
ஆறுதல்


-ரேவா

கருணை


*

நிழல் தரும் மரங்கள்
நம் நீண்ட தனிமை


விதைத்ததைக் கொடுக்கிற
வெயில்
பழம் தின்னிப் பறவைகளின்
கருணை


எல்லோர்க்குமான மழை
வளர்க்கிறது
அவரவர்க்கான நிழலை


-ரேவா

ஆனாலும்


*

எப்போதென்ற கேள்விகள்
எப்போதும் இருக்கின்றன


தீராத சொற்கள்
திமிறிக் கொண்டு பாய்கையில்
அடக்கத் தெரியாத கனவில் பதில்
மிச்சமிருக்கிறது
எப்போதும்


-ரேவா

சுழற்சியின் நிறம்



வீடறியாதவனின் ஞாபக மறதியாய்
அத்தனை பாந்தமாய் நடக்கிறது
சந்திப்புகள் நமக்குள்


கைவிடப்பட்ட கைக்குட்டையொன்றை
துடைக்கக் கொடுத்த நாளில்
உப்புப் படிந்த கண்ணீரின் உதிரம்
விலக்கு நாள் அவஸ்தை


மரணபயம் கொடுத்திடாத விலகுதலால்
வலியேற்படுவதில்லை
முன்போல்


நெற்றி முத்தமொன்றின் பாலை
சுட்டெரிக்கிறது
கடல் பார்த்த நாளின் ஞாபகத்தை


கரை(றை) தெரியாமலே போகட்டும்

பஞ்சின் அவஸ்தை
நெருப்பு எப்படி அறியும்


-ரேவா
நன்றி
கணையாழி
(பிப்ரவரி 2016)

(இந்த வருடம் கணையாழியிலிருந்து தொடங்கியிருக்கிறது)


...

குட்டி நாயொன்று பசிக்கு அழுகிற குரலாகிறது இரவு
முணுமுணுக்கிற எதிர்பார்ப்போடு எரியத் தொடங்குகிறது
தெருவிளக்கு



-ரேவா

..

விட்டுவிடாதபடி பெறுகிற சம்மதம்
நிறுத்திவைக்கிறது
இருப்பை


கடல் பார்க்க ஓடும் பயணத்தில்
அந்தி குழைக்கிற
கடல் மணலின் கையில்
வைகறை


-ரேவா

...

ஒரு சொல் உடைந்து
நீ பிறக்கும் போது
அழுகுரல் சில்லுகள்
பிரதிபலிக்கிறது
சொல்லின் சொல்லாய்
உன்னை



-ரேவா

அது மட்டுமே உச்சி


*

அனாதையாகிவிடும் அழைப்பற்றக் 
காலத்தின்  குரல்
கோப்புகளில் எதிரொலிக்கிறது


மலை உச்சி
திருப்பித் தரும் மற்றொரு குரலில்
இன்னொரு மலை


-ரேவா

வானவில் சொற்கள்

வார்த்தைகள் மட்டுப்படும் போது
வாய்க்கிறாய் 


பேசுவதற்கான வாய்ப்புகளற்று தேங்குகிறது 
மெளனம்

மெல்ல
உடையத் தொடங்கையில்
அடைபட்டுக் கிடைந்த நீர்க்குமிழின்
ஜீவிதம் போல்
உடுத்திக் கொண்டு பறக்கின்றன
வானவில் சொற்கள்

தோற்றங்களின் தினசரி

மாறாத தினசரிகள்
தினம் மாறும் தோற்றங்கள்


வார்த்தைக்குள் சிக்கிக் கொண்ட
தூண்டில் கனவு
இரையாவதில்லை
துடிக்கிறது


கையளவு நீரள்ளிக் கொடுக்கும் இருப்பிற்கா
மாறாத தினசரிகள்

மாறுகின்றன தோற்றங்கள்.


-ரேவா