உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 15 அக்டோபர், 2024

மழையின் பொழுதுகள்..




     



                கண்களை மூடிக்கொண்டு மனம் ஒரு தியானத்திற்கு தயாரவது என்பது என்னளவில் என்றைக்கும் நடந்தது இல்லை.. தியானத்திற்காக உட்கார்ந்த இடம் ஒன்றாகவும், யோசனை அளவில் உட்கார்ந்து இருக்கிற இடம் வேறொன்றாகவுமே எப்போதும் இருந்திருக்கிறது. இதை மற்றவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், அப்பாடா என்ற ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. அதையும் மீறி கண்களை மூடி ஒரு தியானம் வசப்படும் இடம் என்பது, மழைக் காலங்களில் வெயில் தங்கிப் போன சுவற்றின் மீது, தங்க அடம் பிடிக்கிற மழையின் வாசத்தை நாசி முழுக்க  உள்ளிழுக்கும் போது நடந்திருக்கிறது.  அப்படி கண்களை மூடினால் கருத்தில் நிற்கிற ஒரே புள்ளி அந்த மழை வாசம் மட்டும் தான். 

                    மழை வந்தால் மொட்டை மாடியில் மட்டுமே பார்க்க முடிகிற ஜந்து நான். மழை நீரை சேமிக்கவென்று வீட்டில் அப்பா ஏற்படுத்திக் கொடுத்த நீளக் குழாய் வழியே, ஆர்வமாய் தவழ்ந்து வருகிற பிள்ளையை அள்ளியெடுத்து கொஞ்சுகிற ஒரு அன்பின் சாயலை எப்போதும் மழை பெற்றுவிடும்.. மழை வந்தால் மழை நீரில் மட்டுமே குளிப்பேன் என்ற சிறுவயது அடத்தை மணம் இப்போது கொள்ளுமா என்பதும்  சந்தேகம் தான். வீட்டுச் செடிகளின் மீது மழைக் கழுவி விட்டுப் போன பின்னும் தங்கியிருக்கிற வாசம் மழைக்கானது மட்டும் தானே.. 

                மழை நின்ற பின் அந்த சிமெண்ட் தரைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் மழையின் சுவடுகள் மறைய ஆரம்பித்தாலும், அந்த குளிர் ஈரத்தை மிச்சம் வைத்திருக்கும் தரையில் படுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் உடலுக்குள் ஏறி, மூக்கின் நுனி மேல் மழையின் கரத்தை பெற்றுவிடும் போது உடல் முழுதும் ஒரு மழையின் பெட்டகமாக மாறியிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன். 

                   மழை வந்தால் மாடியின் மறைப்பில் ஒரு பிளாக் காபி + இசை + பிடித்த புத்தகம் என்று என் வீட்டு மழைக்கு துணை இருக்கிறேன் என்று நானே சொல்லிக்கொள்கிற பைத்தியக்காரத்தனமும் நடந்தது உண்டு.. 

                    இன்றைக்கான மழையை மனம் நேற்றிலிருந்தே எடைபோட தொடங்கிவிட்டது.. மழைக்குப் பழகத் தொட்டுப் பார்க்கிற விரல்கள் போய், பயந்து விடுவிக்கிற விரல்களை சில நேரங்களில் இந்த மழை பெற்றுக்கொண்டது எப்படி என்ற கேள்வி மனதிற்குள் வரமால் இல்லை.. 

                எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சுயநலம் தன் மாபெரும் இருக்கையை இயற்கைக்கு முன்பு போட்டுக்கொண்டு உட்காரும் போதெல்லாம் இது நடக்கிறது தான்.. ஆனால்  மழையால் வளர்ந்த எனக்கு மாபெரும் கவலையாக மாறியிருப்பது எல்லாம், யப்பா.. இந்த புத்தகங்களை மட்டும் காப்பாத்திட்டா போதும் மத்த எது போனாலும் மசுரே போச்சுன்னு மனசு சொல்றதை திரும்ப திரும்ப அச போட்டுட்டே இருக்கிறேன். சோழர்கள், மாமல்லபுரம், கோபல்ல கிராமம், பாறை ஓவியங்கள்ணு கண்ணுக்குள்ள படுற எல்லா புத்தகத்துக்குப் பின்னாடியும் ஒரு தனிமனிதனோட சேர்ந்த கூட்டு வாழ்க்கை இருந்திருக்கு.. அதுக்குள்ள காற்றும் மழையும் சேர்ந்தே தானே இருக்கு.. அப்போ அந்த புத்தகத்தை தொடுறது அந்தக் காலங்களை தொடுறதும் தானேன்னா, அந்த அழிவில்லாத இயற்கைய தொடுற மாதிரி தானே.. 

                இதோ இங்க மழை வேகம் எடுத்திருச்சு.. கிரவுண்ட் ஃபுளோர் மக்களை பரிதாபமாக பார்க்கிற மக்களின் கண்கள் ஏனோ வதைக்கத் தொடங்குகிறது.. ஆனால் மழைக்கு கண் உண்டு..  நம்புறேன்..  ஆனா ஒண்ணு அழையா விருந்தாளி போல சட்டென்று வருகிற மழைக்கும், இந்த தேதியில் புயல் உருவாகி இருக்கு, மழை இத்தனை சென்டிமீட்டர்ல பெய்ய வாய்ப்பு இருக்குன்னு தீர்மானங்களோட தகவல் வழியா வந்து சேருற மழைக்கும் வேறு வேறான மனநிலை தேவைப்படுது தான்..


      

வியாழன், 10 அக்டோபர், 2024

சென்னையில் ஒரு மழை நாள்..




 நேற்று இரவில் இருந்து சென்னையில் நல்ல மழை.. ஆட்டோவை புக் செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த பிறகே மேலே இருக்கிற அந்த ஸ்டேட்மெண்டை சொல்ல முடிந்தது. ஓர் உணர்வு ஸ்டேட்மெண்டாக எப்படி உருமாறியது ?

கனம்..
சென்னைக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருடங்களைத் தொடப் போகிறேன். இது ஒரு பெரும் ஓட்டம்.. நெஞ்சு விம்ம விம்ம ஏங்கித் தவித்த நிமிடங்கள் எதுவும் மறப்பதற்கில்லை.. ஆனால் நான் இருக்கிறேன் என்கிற கரம் முதலில் மழையில் இருந்து தான் எனக்கு நீண்டது..
சென்னையில் ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட மாடி வீடு.. கதவைத் திற காற்று வரும் என்று நித்யானந்தாவை எல்லாம் கூப்பிடாமலே வருகிற காற்று. கண் விழிப்பதற்குள் என்னை தேடி வந்துவிடுகிற வெயில், மழை நாளில் அயர்ந்து தூங்கி விட்டால் நான் வந்திருக்கேன் எவ்வளவு தெனாவட்டா தூங்குறன்னு சடசடவென்று தலைக்கு மேல் அது ஆடுகிற நடனம், இவை எல்லாம் என் பித்து. முப்பத்தைந்தை தாண்டிய பிறகே எனக்கே எனக்கென்ற தனியறை.. அழ, சிரிக்க, மணி பார்க்காமல் விழித்திருக்க , வேண்டும் போது எனக்குள் நானே நுழைந்துகொள்ள ,என்னை எதுவுமற்று ஏற்றுக்கொள்ள , என்னை நானாய் இருக்க அனுமதிக்கிற, குறிப்பாக என்னை வெளியில் தள்ளாத கதவுகளை கொண்ட வீடு..
சென்னை என்னை நிறைய முறை செவிட்டில் அறைந்திருக்கிறது.. ஆனால் திரும்ப திரும்ப மனித அனுபவங்களை தனிப்பட்ட முறையில் தருகிற இடமாக எனக்கு சென்னை மட்டுமே இருந்திருக்கிறது. அந்த சென்னையில் எனக்கென ஒரு வீடு..வாடகை வீடு தான் என்ற போதும் என் வாழ்வின் முக்கியமான ஆத்ம நண்பன் அந்த வீடு.. விசாலமான படிக்கட்டுகள்.. ஏற ஏற வானத்திற்கு போகிற வழியாய் என்னை யோசிக்கவைத்திருக்கிறது. காற்றுக்கு பஞ்சமில்லை.. வெயிலுக்கு குறைவே இல்லை.. கோடைகாலங்களில் அதன் கதகதப்பு சொல்ல முடியா அவஸ்தையும்.. ஆனாலும் பரவாயில்லை என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வது உண்டு..
அப்படி ஒரு வீட்டை தான் காலி செய்து வேறொரு வீட்டிற்கு வந்திருக்கிறேன். காலச் சூழ்நிலை.. Just Go With a Flow Reva என்று வலிக்காத மாதிரி எனக்குள் நானே நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.. வந்த வீட்டில் ஒட்டமுடியவில்லை.. ஒரு 8 வருடம் முன் மதுரை வீட்டில் பூக்கவே பூக்காதென்று நினைத்த ரோஜா நாளை எப்படியும் விரிந்திரும் என்று அம்மா ஃபோன் பண்ணி சொன்ன போது, சென்னையில் ஒரு தனியார் வங்கியில் நினைத்துப் பார்க்க முடியா சம்பளத்தோடு வந்த வேலை.. எனக்கு எதிரி வெளியில் இல்லை.. ரோஜா மலர்ந்தது.. செக்க செவேல் என்று இருந்த அதன் இதழ்கள்.. போதும் இந்த பிறப்பு என்று நினைக்கிற பைத்தியம் நான்.. வாழ்வின் முதல் முறை இந்த வீடு மாற்றத்தை சந்திக்கிறேன்..
சொல்ல முடியாத படி நெஞ்சில் ஏறிக்கொண்ட வலியை யாரிடம் தான் சொல்ல.. சொன்னால் தலையில் அடித்துக்கொண்டு “நீயெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை “ என்கிற பதில் தான் வரும்.. ஆனாலும் அது என்னோடு தொடர்புகொண்டது..
இன்றைக்கு காலையில் புதிய வீட்டில் இருந்து வேலைக்கு வரும் போது வீதியெங்கும் மழை நீர் தேங்கி இருக்கிறது.. சொல்லத் தெரியாத நெஞ்சின் கனம்.. போட்டுக்கொண்ட வேஷத்தை களைப்பது எப்படி..
கூடவே இருந்த ஆத்ம நண்பனை இழந்ததைப் போலவே உணர்வு.. இனிமேல் தலைக்கு மேல் சட சடக்கும் சத்தம் இல்லை.. விழித்ததும் ஹலோ ரேவா என அழைக்கும் இளம் - வெயில் இல்லை.. ஜன்னலோரத்தில் காற்றோடு கலந்து வருகிற கொய்யா மரத்தின் வாசனை இருக்கப்போவதே இல்லை.. மழையை இனி வீதியில் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன்..
சில பருவங்கள் நம்மை எதற்காய் பக்குவப்படுத்துகிறது என்று தான் தெரியவில்லை.. எல்லாவற்றையும் சுருட்டி வைத்துக்கொண்டு எதுவும் இல்லாத மாதிரி கடப்பது தான் பக்குவமா? Seriously I don’t know..
But இந்த மழையில் நான் ஏதோ ஒன்றை இழந்து இருக்கிறேன்..
ஆனால் இன்றைக்கு ஏறிய ஆட்டோ அண்ணன், சிஸ்டர் என்னோட ஆட்டோ நம்பரை காட்டுங்க என்றார்.. எனக்குள் சிக்மெண்ட் பிராயட் விழிக்கத் தொடங்கினார். ஏன் எதுக்கு என்று கேள்விக்கு பின் தான் காட்டினேன். கண்கள் மலர சிரித்தார்.. என்னோட போட்டோ காட்டுங்க.. “அடேய் எனக்குன்னே வருவீங்களா டா” என்று தான் முதல் மைண்ட் வாய்ஸ் கைக்குலுக்கியது.. ஆனாலும் காட்டினேன்.. அவரிடம் ஏமாற்றம் “ சே, பழைய போடோல நான் நல்லாவே இல்லை மாத்துங்கன்னு சொன்னேன் அதேயே தான் வச்சுருக்காங்க, என்று சொல்லியபடி வண்டியில் இருந்து கீழே இறங்கி, ஆட்டோ கதவை திறந்துவிட்டு உள்ள போங்க , என்றதும் அவர் நார்மல் பெர்சன் தானா என்ற சந்தேகம் எக்ஸ்ட்ரா நார்மல் பெர்சனாக என்னை எண்ண வைத்தது. “ சரி போவோம் “ என்று என் ஆசான் வடிவேலு வாக்கு உடன் இருக்கையில் என்ன பயம்.. உள்ளே நுழைந்தேன்.. ஆட்டோ அண்ணன் “தங்கச்சி, ஆட்டோ வாங்கி பூஜை போட்டு நான் எடுக்கிற முதல் சவாரி “ என்றார். அதற்கு மேல் என் கட்டிடம் தகர்ந்தது. இருவரும் இலகுவானோம் . அரைமணி நேரத்தில் அவ்வளவு பேசினோம். மழையின் சத்தத்தை மிஸ். செய்தது முதற்கொண்டு அவரிடம் பேசினேன்.. இறங்கும் இடம் வந்தது . வாழ்த்தை சொல்லி இறங்கினேன். அவர் முகம் மறக்காது.. இன்றைய மழைக்கு முருகேசன் என்று பெயர்.
இந்த பிரபஞ்சம் எப்போதும் எடைக்கு எடை இட்டு நிரப்ப தெரிந்தது.
நான் காத்திருக்கிறேன்..
- ரேவா

திங்கள், 18 மார்ச், 2019

கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )




இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் "கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும் நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இதையும் ஒரு அலை விளையாட்டென முதலில் ஆடத் தொடங்கினேன். முதல் நான்கு பக்கங்களிலேயே ஆட்டம் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பது எங்கேயோ கேட்க தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் உள் நகர்த்தியிருக்கிற அலைகளை வேண்டாம் என்று தள்ளிவிட்டு வெளியேற முடியாமல் தான் கரை தாண்டி பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன். 

ஒவ்வொரு பக்கத்திற்கு ஆழம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கவிதைகளின் தலைப்புகளை பற்றிப் பிடித்து இளைப்பாற வேண்டியிருந்தது. மொத்த பயண நேரமும் இடைவிடாமல் அசைத்து பார்த்துக் கொண்டே இருந்த அலைகளில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் தான் என்னை சுதாரிப்பதற்கான காலம் வாய்த்தது. 

ஆக, மொத்த தொகுப்பும் பிடித்த குரல் வழி காலத்திற்கு ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பாகியிருக்கிறது. தலைப்புகளில் இளைப்பாறினேன் என்று கூறியிருக்கிறேன் அல்லவா அவற்றில் ஒரு சில தலைப்புகள்...! 

இருப்பதின் பிரதானம்
புதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்.
தீராக் கடலில் அலை விளையாட்டு
பொய்மான்
இலக்கமிடப்பட்ட இலக்குகளின் இலக்கணம்
இரவு நேரப்பாடல்
அசைவுகளின் அறியா கண்
(இதை கணம் என்று வேறு மாற்றி வைத்திருக்கிறேன்)

பெயர்களற்றவன்
நீயூரான் மரத்தின் இலை ஆடை
புன்னகையில் மறையும் பனிக்கூழ் மௌனம்.
சுழற்சியின் மாதாந்திரம் பிரசவிக்கும் நிறம். 

60 நாட் தூரத்தில் தெரிகிற கடலில் கரைக்கு வெகு அருகாமையிலான 10 நாட் தூரம் வரை வீசும் கலங்கரை விளக்கின் ஒளியை மட்டுமே 

சுட்டிக்காட்டியிருக்கிறேன் மீதத்தை நீங்களும் நீந்திப் பார்க்க வேண்டி.
வாசிக்க வாசிக்க மிக இலகுவாக ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடிய ஒரு தொகுப்பாக (என்னளவில் மட்டும்) இருக்கிறது.ஆனால் அதன் அதிர்வு என்பது என்றைக்குமானது. மறுவாசிப்பு எப்போதும் அதே கடலின் வேறு வேறு பாதைகளை காட்டிக் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறேன். சரியான தேர்வுக்கு துணை நிற்கிற காலத்தை மழை விரல்களால் அணைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் க்கா...

 
ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு புத்தகம் முடிந்த பிறகான மனநிலை வாய்த்து...😍
 
கவனிக்க மறந்த சொல் 

ரேவா
  யாவரும் வெளியீடு.

-மனோ அரசு 

 

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

வாசிப்பும் கண்டுணர்தலும்

 நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 



துயரம் ஒரு குற்றம், ஒரு சிறை. ஒரு வினோத மனப்பதிவு. நான் அந்த சாம்பல் கித்தானிலிருந்து எழுந்தாகிவிட்டது ஒரு தாளைப் போல.
                                                         -அன்னா அக்மதோவா 

நான் வாழ்வேன் கனவு ஒன்றில், மீண்டுமொரு தடவை நீ என்னுடன் இருக்கப்போகிறாய் - உமா பார்வதி 


சரியாய் இந்த தொகுப்பு இந்த இரண்டு விதமான மனநிலையைக் கொண்டாதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் இது. என் மனம் சமனின்மையில் இருக்கும் போது எதையும் தொடாது, அதன் போக்கிற்கு தீனிபோட பழகிக்கொண்ட பொழுதில்  அகத்தோடு நடக்கிற உரையாடல்களை கவனிப்பதும் கேள்வி கேட்காது அதன் முன் உட்காரப் பழகியதும் ஒரு தவம் போன்று எனக்குத் தோன்றும். 

இதை இங்கு சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது இந்த குறுநாவலில் வருகிற ஆராதனா புறத்திற்கும் அகத்திற்குமான நெருக்கடியில், அவள் மனிதர்கள் கொடுக்கும் அனுபவங்களை, அதனூடாக அகம் தொடுக்கும் பார்வைகளை, அவள் பொருத்திப்பார்த்து ஒரு கசப்பிலிருந்து அதைக் கண்டடைவதற்கான பயணத்தை இத்தொகுப்புக் கொண்டிருக்கிறது. 

பெண், பெண் வாழ்வு, பெண் சுதந்திரம்,  இதில் ஒன்றென கலந்திருக்கும் ஆண்
அவர்கள் பெண்ணுக்குத் தருகிற அனுபவம், அதை அவர்களிடமே பகிர்தலுக்காக கிடைக்கும் வெளி, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கான நீட்சி  இதைப் பொறுத்தே அத்தனை மனமாற்றங்களும் நிகழ்கிறது.அப்படியே இது ஆணுக்கும் பொருந்தும். 

சுயமாய் சிந்திக்கத் தெரிந்த பெண்ணும், இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் தேடும் அடையாளமும் தான் நேசிப்பவர்களால் ஒவ்வொரு பருவத்திலும் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைக் கவனிப்பதே ஒரு காட்டுவழிக்கான பயணம். 

முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, சௌகர்யமற்ற பொழுதொன்றில் குத்திக்காட்டப்படும் ஒன்றாய் மாறுகிற வாழ்வில் உள்ளுக்குள் நடக்கிற குமுறல்களை அடைத்துவைத்து பின்னொருநாளில் வெடித்துக்கிளம்பும் சத்தம் சத்தமட்டுமா என்ன?

கதையில் வரும் ஆராதனாவின் வாழ்வில் அப்பாவாக,தம்பி அருணாக,  பிரிந்த கணவனாக, அந்த கணவன் வழியில் கிடைத்த ஆண் குழந்தை சஞ்சுவாக, பின்வரும் காதலில் கிடைத்த வருணாக அவர்கள் உறவில் கிடைத்த நந்திதாவாக சொற்ப மனிதர்கள் தரும் அனுபவம் இந்த பரந்தவெளியை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்கிறதா?     
 
ஒரு வாழ்க்கை தோல்வியில் முடியும்போது வீட்டில் கிடைத்த நிழலும், பின் தானே தேடிக்கொண்ட காதலால் ஆராதனா சந்திக்கும் நெருக்கடியும், அதிலிருந்து அவள் வெளியேறுவதற்கு அவள் கையிலிருக்கிற சிந்தனையும் அதன் வழி பெற்ற அனுபவப்பார்வையும் அவளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை  இந்த நாவல் பேசுகிறதாய் என் வாசிப்பில் எனக்குத் தோன்றியது.

ஆராதனாவுக்கு தன்னை அழுத்தும் துயரங்களுக்கு மத்தியில் கனவுகள் பிடித்திருக்கிறது. அந்த கனவு, தான் விரும்பியதை அப்படியே உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதாய் அவள் நம்பவும் செய்கிறாள். அந்த கனவும் நிஜமுமாய் அவள் தேடிப்பார்க்கும் வாழ்வில் நம்மையும் ஒன்ற வைப்பது இந்த தொகுப்பில் கையாளப்பட்ட மொழியின் அழகும் கூட.  

தொகுப்பில் துயரத்தை மீறி நம்மை ரசிக்கவைப்பது அதில் கையாளபட்டிருக்கும் மொழி. அது அத்தனை ரம்மியமாய் நம்மை கதையோடு ஒன்றவைக்கிறது. 

உதாரணமாக நாவலில் ஒரு இடத்தில் 

துயரமான மனதை வெல்வது, அதை மறக்கவோ அதனை விட்டு ஓடி ஒளிவதோ அல்லது அவற்றை நினைக்காமலிருக்க பயிற்சி எடுப்பதோ இல்லை. கொதிக்க கொதிக்க அந்நினைவுகளை மனதிற்குள் இறுக்கி வைத்து பின் மெல்ல இளகுவதற்கு விட வேண்டும். கொதி நிலையிலிருந்து மெல்ல மெல்ல அது குளிர்நிலைக்கு வந்து, ஓரிடத்தில் உறைந்துவிடும். உறைந்த அந்நினைவுகளை எப்போது வேண்டுமெனினும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அது பெரும்பாலும் தேவையிருக்காது , ஆழமானவை தாமாகவே அவ்வப்போது மேலெம்பி வந்து நம்மை உள்ளிழுக்க முயற்சி செய்யும், அதனுடான சமரே இந்த வாழ்வில் பெரும் சவால்.      

இப்படி ஆழமான அனுபவங்களை, ஆராதனா நிகழ்வுக்கும், நினைவுக்கும் இடையே பயணப்படும் அனுபவத்தை குறுநாவலாய் ஆக்கியிருக்கிறார் உமா பார்வதி.. 

கதையை ,கதையின் போக்கை அப்படியே சொல்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்திடப்போகிறது. வாசித்து உங்களுக்கான அனுபவங்களை நீங்களும் பெறலாம். 

எனக்கு இந்த குறு நாவல் ரொம்ப பிடித்திருக்கிறது. 


நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் 
பதிப்பகம் : யாவரும் 
ஆசிரியர் : உமா பார்வதி 
     

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மீண்டும் தொடர்கிறேன்




சரியாக ஒரு வருடம் பிளாக்கரில் எந்த பதிவும் இடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு மனநிலை எதையோ கடத்திக்கொண்டு வந்திருக்கிறது என்பதைவிட ஓர் உழைப்பிற்கு கொடுக்கமுடிந்த இடைவெளியாகவும் இதைக் கருதிக்கொள்கிறேன்.

கவனிப்பற்ற பொழுதுகளில் எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல் இலக்கிய உலகம் குறித்த எந்த புரிதலும் இல்லாத போதும் எந்த சத்தமும் இல்லாமல் இங்கே எழுதிச் சேர்த்த கவிதைகளை அது உருவாக்கிய வெப்பத்தை நினைத்துக்கொள்கிறேன். 

இனி வாசிப்பு எழுத்து பகிர்தல் என மீண்டும் இங்கே அதிகம் பதியவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளுகிறது. 

அதற்கு முதலாய் போன வருட இறுதியில் வெளியான என் கவிதைத் தொகுப்பான கவனிக்க மறந்த சொல்லோடு வந்திருக்கிறேன். 

எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட சுவர்களைப் போல் இந்த இடம் எனக்கு அத்தனை வரம்.. 

தொடர்கிறேன் 

-ரேவா   



வியாழன், 19 ஜனவரி, 2017

அதுவரை இது நிகழாதிருக்கட்டும்




வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது  
புறச்சூழலை


நாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்  

செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை  
ஓர் அட்டைப் பூச்சி
இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்

நமக்கு கவலைகள் இல்லை  

வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது  
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்

 தனித்த செய்தியில் உரையாடுகிற 
கைகள் கொண்டிருக்கிற பழக்கம்
ரோட்டோர ஓவியக் கைகளுக்குக் கிடைப்பதில்லை
ஆனாலும் யாம் தெரிந்தே செய்கிறோம்


இச்சில்லறைகள்
தரையில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தின் கண்களைக்  
குருடாக்கப் போவதில்லை

விழுந்து கிடக்கிற ஒன்றின் தெளிவு
வானத்தை பார்க்கையில்  
வசப்படுவதும் வானமாகவே இருக்கிறது


ஆனவரை அழிக்கிற உரிமையை மழைக்கே கொடுக்கிறோம்

 சிறுதூரல் கிளப்புவது உஷ்ணத்தையென்றாலும்
 உள்ளிருப்பது வெளியேறுதல்
 பெருமழைக்குச் சமமே

அட்லீஸ்ட்  
இந்த மழை 
 மனதின் வெயிலை புறச்சூழலின் வழியாவது குறைக்கட்டும்  
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்


நிழல் வளர்த்த நிஜத்தின் தோற்றப் பிழை



கடைசி பார்வையாய் சுடர்விடுகிறது  
சந்திப்பு

பருகிய கோப்பைகளின் பிசுபிசுப்பை 
மொய்க்கும் ஈக்களின் பறத்தலைப் போல்  
கவனம் கலைக்கிற வார்த்தைகளைத் தட்டிவிட்டு  
நகரும் கால்கள் வாய்க்கா உரையாடல் அமர்ந்திருக்கிறது  
எளிய உயிர்மெய்யில்

விட்டில் பூச்சி நம் சொற்கள்  
பறக்கையில் பெரிதான நிழல்  
பதிகிறது சுவற்றில்

இருள் வெளிச்சம் குடிக்கப் பழகிய  
ஒயின் கோப்பைகளை  
பார்வையாக்கி பருகுவதின் அடர்த்தி  
அடிமடியின் நினைவென கசக்கிறது

பிரிவின் போதை ஆட்கொள்ளத் தொடங்கும்  
சூழலின் அமைதி உடைத்து
முதல் ச்சியர்ஸ் சொல்லித் தொடங்கப் போகும் வார்த்தை  
உன்னிடம் இருந்தே வரட்டும்

கடைசி சந்திப்பாய் சுடர்விடுகிறது வெளிச்சம்  
அத்தனை இருளையும் மறைத்து

நீ உன் கோப்பையை உயர்த்து
ச்சியர்ஸ்..