தொலைதலின் பொருட்டு
மகிழ்ச்சி கொண்டால்
# இதுவும் காதலே.......
அழுதலின் நிமித்தம்
ஆனந்தமடைந்தால்
# இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு
வானம் பார்த்து
சிரித்துவைத்தால்
# இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும்
சிறைபடுத்தமுடியா
பொருள் கொண்டால்
# இதுவும் காதலே...
தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அற்புதக்கலையை
அறிந்திருந்தாயாயின்
# இதுவும் காதலே.....
உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..
என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ
காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து
உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........
- ரேவா
வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........
# இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
# இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...
# இதுவும் காதலே...
ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்
இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
முகவரியிடம் கள(ல)வு போனால்
# இதுவும் காதலே
உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...
# அழகியல் விளையாட்டு......
ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...
# அழகியல் விளையாட்டு....
என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....
# அழகியல் விளையாட்டு..........
விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......
# அழகியல் விளையாட்டு......
ஆயிரம் ஒப்பனையிட்டு
ஒப்புக்காய் கொஞ்சம்
ஒப்பனை சேர்த்து
பவனிவரும் என் வரிகளை
ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை......
# அழகியல் விளையாட்டு....
இறக்கை விரித்து பறக்கச்சொல்லும்
உன்னிடத்தில் தான்
ஒளிந்துகொள்வதின்
சுகம் கிடைக்கிறது..
# அழகியல் விளையாட்டு.
உன்னிடம் தவறில்லாமல்
எப்படி பேசுவது
என்று யோசிக்கும் போதே
ஏதோ ஒரு தவறு நிகழ்ந்தேறிவிடுகிறது..
# அழகியல் விளையாட்டு...
கொட்டிக்கிடக்கின்ற
உன் குறும்புதனை
ஒவ்வொன்றாய் கோர்த்தாகிவிட்டது
கிடைத்ததென்னவோ
இந்த கவிதைகளும்,
அதற்கீடான
காதலும் தான்.....
# அழகியல் விளையாட்டு...
கடுச்சூடுதான் ஆயினும்
இவ்வடர் வனத்தில்
வெந்து தணிவதை விட
வா அன்புச்சண்டையிட்டு சாகலாம்..
# அழகியல் விளையாட்டு....
.
கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)
உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...
அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........
நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........
நான் எதைக்கொடுத்தாலும்
எப்படி
உடனே திருப்பித்தருகிறாய்
கவிதைகளாய் :)
கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி....
எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)
உன் முத்தங்களை வெல்ல நினைத்து
மொத்தமாய் தோற்றுப்போன
இந்த கவிதைக்கு
என்ன பெயர் வைப்பது?....
என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,
உனக்கும்
இந்த மழைக்கும் :)
நம் ஒவ்வொரு சந்திப்பும்
புத்தகத்தின் கடைசி பக்கங்களின்
புதைந்திருக்கும் முடிவைப்போன்றது
சுபமாய் இருந்தாலும்
சுலபமாய் இருந்துவிடுவதில்லை :)
எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...
எதை எழுதினாலும்
அதை பாதியிலே
நிறுத்திவிடுகிறது
பாழாய் போன
உந்தன் நினைவு.... :)
என் எழுதுபொருளில்
நீயிருக்கிறாய்
என்பதற்காகவே எழுதப்படுகின்றன
இவ்வரிகள் ஒவ்வொன்றும் :)
ஒவ்வொரு புரையேறுதலுக்கு
பின்னும்
புரையோடிப்போன
உந்தன் நினைவுகள் மீட்டெடுக்கின்றன
என்னை...........
வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு
அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு
எத்தனைமுறை
இறுக கட்டியும்
அவிழ்ந்துவிடுகிற மனதை
நானும்,
ஈர்க்கின்ற விழியை
நீயும்,
பெற்றிருக்கின்றோம்
காதலிடம்...
காட்டிக்கொடுத்த
கண்முன்-உன்னை
கட்டிப்போடுகிறது
காதல்...
நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....
ஜன்னலோர இருக்கையாய்
என்னை எப்போதும்
ஈர்த்துகொள்கிறது
உன் விழிகள் :)
உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து
இவ்வரிகள்
ஒவ்வொன்றும்
தன்னை
அலங்கரித்துகொள்கின்றன......
உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு........
இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை............
நம் ஒவ்வொரு சண்டையும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து,
காதல் எனும்
பெரும்புள்ளியில் முடிகிறது...
தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்..
காதலுக்கென்று
தனிமொழியேதுமில்லாமல்
போனாலும் போய்விடும்
கொஞ்சம் வாய் திறந்து பேசிவிடு....
விதைத்தவனாய்
நீ இருக்க
தன்னை தானாய்
வளர்த்துக்கொள்கிறது
இந்த காதல்.....
ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...

தீர்ந்துவிடுமோ
என்ற பயத்தில்
நீ பத்திரப்படுத்தும்
புன்னகை தான்
என்னை
பாதிப் பைத்தியமாக்குகிறது
என்பதை அறிவாயா
நீ?....
வரங்கள் சில நேரம்
சாபங்களாய் போவதுண்டு
இதழ் முத்தம் கொஞ்சம்
கன்னத்திற்கு ஈயப்படும் போது......
= ரேவா