உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
தனிமை கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிமை கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜனவரி, 2015

தனிமையில் இல்லை





தனியாக எழுதும் வேளையில்
நான் தனியாக இல்லை


தனிமைக்காய் எழுதும் வேளையிலும்
அது தனிமையில் இல்லை


யாருமில்லையென்று எடுத்துவைத்த வார்த்தையிலும் 

தனிமையில்லை

உன்னைப் பற்றி என்னைப்பற்றிய நினைவெதுவும் 

தனியாய் இல்லை

யாருக்கோ துணைபோகின்ற நேரத்தில்
யாருமே தனிமையில் இல்லை


தனித்தனியே புழங்கிய பின்னும்
புழுக்கம் கொடுக்கும் உணர்வும்   

தனியாய் இல்லை

தனிமை தனிமையென்று எழுதித்தீர்த்தபின்னும்
தனிமை மட்டும் தனியாய் இல்லை


தனித்துவிடுவதெற்கென்றே
எழுதிவிட்ட இவ்வரிகள் கூட
இறுதிவரை தனித்து விட்டும்
இது தனியாய் இல்லை

வியாழன், 3 ஜனவரி, 2013

தனித்திருத்தலென்பது



மதிப்பீடற்ற விசயங்களைக் கடந்து
விஷமங்கள் அரங்கேறும்
இத்தருணத்தில்
விஷமேறிய பற்களோடு
காத்திருக்கிற கடுச்சொல்லிருந்து...

துரத்திவிடுதலை
துணைக்கழைத்து
தன்னை விடுவித்துகொள்கிற
கணத்தில்
உயிர் உணர்கிற தவிப்புகளிலிருந்து

எப்படியோ மென்மரணமொன்று
இனி மெல்ல மெல்ல நடக்குமென்பதை
உணர்ந்தும்
அந்திசாமத்து பிடிகளிலிருந்து
விடுபடுதலைவிட
கொடுரமானது

தனித்திருத்தலென்பது....


வெள்ளி, 11 மே, 2012

எனக்கு பிடித்தது தனிமை...



சமீபகாலமாய் என்னால்
தனிமைபடுத்தபட்ட
என் தனிமைக்கு
ஏதோ ஒரு வெறுப்பு
என் மேல் ...

நலம் விரும்பிகளையும்,
நட்புகளையும்,
எனக்கென இருந்த உறவுகளையும்
வெளித்தள்ளிவிட்டு 
ஒய்யார நடை நடந்துவருகின்றது
என் அறையெங்கும்...

தினம் வரும்
நலம்விசாரிப்புகளிலிருந்து,
நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,
அன்பு தாங்கி வந்த
அத்தனை பேரையும்
வெறுப்பை சுமந்து செல்லும் படி
செய்கிறது...

கவிதைகளை கைக்கு
கிடைக்கசெய்துவிட்டு
காதலை தள்ளி வைக்கின்றது....

காலர நடக்கச்செய்துவிட்டு
நான்கு சுவர்களுக்கு நடுவே
கட்டிபோட்டுவிடுகிறது...

இப்போதெல்லாம்,
சுவர் பல்லியும்,
தேநீர் குவளையும்,
சில புத்தகங்களும்,
சில பல கவிதைகளுமே
சொந்தமென்றான பின்,

உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
 உதறித்தள்ளும்  உறவுகளை விட
இந்த தனிமை
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...


                      முந்தைய பதிவு : என் பார்வையில் வழக்கு எண் 18/9


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்நாளைய தனிமை


 எவ்வித எதிர்பார்புமின்றி
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில் 
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற 
பெரியதொரு உற்சாகம்....

உறக்க கத்துவதைக் காட்டிலும்
மெளனம் 
பயங்கரமானதாக இருக்கின்றன
இவ்வேளைகளில்.

மெளனமுடைக்க 
இல்லாத ஏதோ ஒன்றிடம்
பேசி பேசி 
வெல்ல நினைக்கின்றேன்..

நீளும் இந்நாட்களை,
நாழிகையிலும், நிமிடங்களிலும்
மணிகளிலுமாய் 
கரைந்து கொண்டிருக்கின்ற
நினைவுகளை 
கடத்த ஏதுவாய் ஒன்றும் 
அமையவில்லை...

வரைந்து பார்க்கிறேன்
இசைத்து பார்க்கிறேன்
புரட்டி பார்க்கின்றேன்
எதிலும் நான் நினைத்த 
ஒன்று கிட்டவேயில்லை..

ஏதோ ஒன்றை மறக்க
எதனிடமோ த்ஞ்சமடைகின்ற
மனதுக்கு ஏனோ 
எதுவுமே பிடிக்கவில்லை..

சில நேரங்களில் எதையோ 
நினைத்தபடி,
கணத்திடும் இரவை துரத்தியபடி,
சிதறிக்கிடக்கும் மௌனங்களை 
சேகரித்தபடியென
நீள்கிறது 
என் இந்நாளைய தனிமை...