உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..
என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ
காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து
உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........
- ரேவா
வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........
# இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
# இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...
# இதுவும் காதலே...
ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்
இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
முகவரியிடம் கள(ல)வு போனால்
# இதுவும் காதலே
உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...
# அழகியல் விளையாட்டு......
ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...
# அழகியல் விளையாட்டு....
என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....
# அழகியல் விளையாட்டு..........
விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......
# அழகியல் விளையாட்டு......
ஆயிரம் ஒப்பனையிட்டு
ஒப்புக்காய் கொஞ்சம்
ஒப்பனை சேர்த்து
பவனிவரும் என் வரிகளை
ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை......
# அழகியல் விளையாட்டு....
இறக்கை விரித்து பறக்கச்சொல்லும்
உன்னிடத்தில் தான்
ஒளிந்துகொள்வதின்
சுகம் கிடைக்கிறது..
# அழகியல் விளையாட்டு.
உன்னிடம் தவறில்லாமல்
எப்படி பேசுவது
என்று யோசிக்கும் போதே
ஏதோ ஒரு தவறு நிகழ்ந்தேறிவிடுகிறது..
# அழகியல் விளையாட்டு...
கொட்டிக்கிடக்கின்ற
உன் குறும்புதனை
ஒவ்வொன்றாய் கோர்த்தாகிவிட்டது
கிடைத்ததென்னவோ
இந்த கவிதைகளும்,
அதற்கீடான
காதலும் தான்.....
# அழகியல் விளையாட்டு...
கடுச்சூடுதான் ஆயினும்
இவ்வடர் வனத்தில்
வெந்து தணிவதை விட
வா அன்புச்சண்டையிட்டு சாகலாம்..
# அழகியல் விளையாட்டு....
.
உயிர்வாழ்வதற்கான
ஒற்றைத் துளி
நீர்
உன் நட்பு.....
*
என் எல்லாமுமாய்
மாறிப்போன
எனக்கான சுயம்
நீ
*
புரிதலின் நிமித்தம்
பிரிதல்
நட்பிலே சாத்தியம்....
*
காதலில் சிக்கிக்கிடக்கும்
என் பெரும்பாலான கவிதைகளுக்கான
உற்சாகம் உன்னிலிருந்தே
ஆரம்பம்......
*
என் பிடிபடாத மெளனங்களை
படிக்கத்தெரிந்த
ஒற்றை அகராதி
நீ
*
என் ஒவ்வொரு போராட்டமும்
உன் உற்சாகத்தின் பொருட்டே
உயிர்வாழ்கிறது...
*
உயரப்பறக்கும்
எந்தன் கனவுகளுக்கான
இரண்டாம் சிறகு
நீ..........
*
எதையும்
புரியாமல் தவிக்கும் மனதின்
தவிப்பை
சரியாக புரிந்தவன்
நீ
நீ என்
# நண்பேன்டா
ஒரு பிரிவைத்தாங்கி வரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திட முடியும்...
சில கவிதை
பிறரின் அனுபவத்தில் முளைத்திடும்
சில கவிதை
தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும்
அல்லது
ஏதோ ஒன்றை தூக்கி
எப்போதும் அசைப்போடுதலின்
பொருட்டு கிடைத்திடும்.
எது எப்படியோ
ஒரு கண்ணீரையோ
ஒரு கனவையோ
தற்காலிகமாய் மறைக்கதெரிந்தவன்
இல்லை தொலைக்கத்தெரிந்தவன்
ஒரு கவிதையிலோ
இல்லை கண்ணீரிலோ
முடித்துவிட்டு போகட்டும்
முடிந்தவரை
உங்களின் அபிப்ராயம்
எந்த ஒரு சம்பிரதாயத்தையும் கொண்டுவந்துவிடாது
புன்னகைப்பதைத்தவிர...
ஒரு நீள் சோகத்தை
சலவை செய்ய தெரிந்தவன்
காதலை வெல்கிறான்...
தெரியாதவன்
வெற்றிக்கு தயார் செய்யப்படுகிறான்
அவ்வளவே...
ஒரு பிரிவைத்தாங்கிவரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திடமுடியும்.....
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்...
இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய்
பிதுங்கி நிற்கும் பேருந்தின்
ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன்
என்னை..
கையோடு கைதடவி
கைமாறும் காசுகளில்
கற்பை கட்டிவிட்டு
கண்பார்க்கும் கூட்டத்தில்
கண்ணகிகள் புன்னகைப்பர்
இது புதிதல்லயென்பதுபோல்
ஆண்களோடு சிரித்துபேசி
ஆடைகளில் கவனம் வைத்து
ஆயிரம் கண்கள் நடுவிலும்
அடக்கம் பேணி
ஆரம்பமாகும் அலுவலிலும்
அடுக்கடுக்காய் கட்டப்படும்
ஆயிரம் வேலி,
அத்தனையும் உடைந்தெறிந்து
அடுத்தபணி ஆரம்பிக்கையில்
எப்போது இரையாகுமென
தூண்டிலில் வார்த்தை தைத்து
வசமாய் வீசப்படும்
காமத்தின் அம்பை
யாருக்கும் தெரியாமல்
கடந்தாகவேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு நாளும்
நீண்டு முடிகிறது
என் அலுவலக வேலை..
பணமென்ற ஒன்றிற்காய்
பழக்கப்பட்ட என் பழக்கங்களை
பூட்டிதைக்கிறேன்,
வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..