இருபக்கமும் அடர்ந்திருக்கும்
 அவ்வசீகர சாலை
 ஆரம்பத்தில் குறுகளாகி
 ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
 லாவக ஓட்டம் பிடிக்க 
 அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
 தடையின்றி செல்ல 
 நீலியின் கைகள்
 ஏதுவாய் அமைய
 
 தூரமாய் செல்லச்செல்ல
 செல்ல கைகளாய் மாறிய
 நிழல்
 உதிர்ந்த காரணங்களையெல்லாம்
 கிளையேற்றி பார்க்கும்
 கண்களை கொடுக்க
 
 நிலா
 நீ
 வானம்
 தனிமையென அலைந்து பறக்கின்ற
 மனதிற்கு
 வேகத்தடையெடுத்து வருகிறது
 இம்முத்தவழிச்சாலை...
  
 
 
 
 
 
              
          
          
        
          
        
காலத்தின் முகம் அணிந்துகொண்டவனுக்கு,
 நானிருக்கும்
 வரை நலமாய் இருப்பாய் என்ற எண்ணத்திலே எழுத்துகளின் ஊடே உனக்கொரு வலை 
பின்கிறேன்...எழுத்தில் உன் முகம் பார்க்க, எழுதிட சுகம் சேர்க்கும் உன் 
நினைவுகளே உற்சாகமெடுத்து ஓடவைக்கட்டும் இனி வரும் வரிகளை..எழுத மறந்து போன
 நாட்களில் எங்கோ இருந்து எழுதிடச்சொல்கிற இந்த போக்கு எனக்கொன்றும் 
புதிதில்லையென்றாலும் வாழ்க்கையின் சூழ்ச்சியில் வஞ்சிக்கப்பட்டவர்களில் 
நாமும் ஒருவரென்பதை இதுவரை சந்திக்காத விழிகளின் கிடைக்கின்ற இருளில் 
உண்ர்வோம்...
திரும்பிப்பார்த்தலென்பது எப்போதும் லயிப்பான விசயமாய்
 இல்லாது போகும் இக்காலச்சூழலில் இக்கடிதம் கண்ணில் படும் போதெல்லாம் 
ரசிப்பிற்கு விருந்துவைக்கும் விசயமாய் மாறிப்போகட்டும் நம் 
வாழ்க்கைப்பக்கங்களுக்கு.. பிறப்பு குறித்த பிரபஞ்ச ரகசியங்களை உடைக்குமொரு
 நிகழ்வு இதுவரை நிகழவேயில்லையென்பது நிகழ்ந்தவரை கிடைத்த நகர்வில் இருக்க,
 எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய்யென யாதொன்றும் தெரியாதிருக்க, எனை 
எதை எதையோ செய்யவைக்கிறாய், சின்னதாய் பொய்கோலம் பூண வைக்கிறாய்.. 
விசித்திர விரிப்புகள் மத்தியில் ஒய்யார  வந்தமர அருபமாய் இருக்கும் என் 
மனதில் அடிக்கொரு முறை உனை அளவெடுத்துக்கொள்கிறேன்.. எப்போதேனும் எனை 
நினைப்பாயா? எனைக்குறித்து உன் கொள்ளளவு என்னவாய் இருக்கும் .. உன் 
நண்பனின் பொல்லாத மனைவியோடு என்னையும் ஒப்பிட்டுக்கொள்வாயா? இல்லை உன் 
தோழியின் நேசத்திற்குரியவனைப்போல் என்னிடம் நடந்துகொள்ளவேண்டுமென 
ஒத்திகைசெய்துகொள்வாயா? யாதொன்றிலும் எனக்கு தெரிவில்லையென்றாலும் 
ஆண்னென்பதின் பதம் என் அப்பாவிற்கடுத்து உன்னிடம் தான் நான் 
தேடத்தொடங்கவேண்டும்.. 
தனிமையின் நிறமெனக்கு எப்போதும் பிடித்தது, அது தரும் சுகந்தமும் 
ஆறுதலும் எனக்கு எதுவுவொன்றும் தந்துவிடாது அதேபோல் உனக்கெப்படி 
என்னைப்போல் அதிகம் பேசுவாயா? இல்லை அளவெடுத்து வார்த்தைகளை விடுவாயா? பெண்
 என்பவள் உன் பார்வைக்கு எப்படி?  நீ என்பதில் நான் எதுவரைக்கும்? இப்படி எத்தனையோ 
கேள்விகள் உள்ளன, உனக்கும் அப்படியாய் இருக்கலாம்.இந்த கேள்விகள் தான்  
நான் இருக்கிறேன் என்பதற்கான என் இறுப்பினை உறுதிசெய்யும் காரணிகளாய் 
இருக்க, என் எதிர்ப்பார்ப்பு உன் வருகைக்கானதாய் மட்டுமென்பதை 
அறிந்துகொள். 
எழுத்தின் வாயிலாய் உன் முகம் 
தேடத்தொடங்கியிருக்கும் இந்நாட்களில் இக்கடிதம் உனக்கும் எனக்குமான முதற் 
புள்ளியை வைத்துவிட்டு கள்ளத்தனமாய் சிரிக்கிறது...
,
 
 
 
              
          
          
        
          
        
எல்லோர் வீட்டின் கதவுகளும் 
 திறந்தே தான் கிடக்கிறது 
 உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும் 
 உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க 
 குறியுடைத்து
 உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ
 நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில் 
 கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ
 அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்
 சூல்லொன்றை அவர்கள் முன் பிரசவிப்பதில்
 ஏற்படும் வலியோ
 நம் படுக்கையை பகிர்ந்துகொள்வதில் 
 கிடைக்கும் உணர்வை 
 சொல்வதிலிருக்கும் சுவாரஸ்யம் 
 பற்றிய கவலையோயின்றி
 நிர்வாணமாய் நிற்கின்ற 
 உண்மையின் முன்
 அன்னியத்தன்மையிலிருந்து விலகுவதாயிருக்கிற
 இக்கனவு
 எல்லா பறவைகளும் வந்தமர்வதற்கான 
 விலாசமாக
 விசாலமாகவே இருக்கிறது...
  
 
 
 
 
 
              
          
          
        
          
        
எதை எதையோ 
 கொடுத்து பேச வைக்கிறாய்
 யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் 
 சூரியனாகி சுட்டெரிக்க  
 நீ கொடுத்துப்போன குரல்
 ஆன்மாவில் பெருங்குரலெடுத்து 
 பாடிக்கொண்டே திரிய 
 கைவிளக்குகளாகிப்போன 
 காரணங்கள்
 காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த
 
 காதலது காத்திருப்பில் கரைய
 மிச்சமிருக்கும் காலத்தை
 காட்சிபடுத்த கிடைக்கட்டும் 
 ஜோடி தூரிகை...
  
 
 
 
 
 
              
          
          
        
          
        
        
             பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் 
அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு 
பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் 
சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும் 
காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது
 எவ்வளவு பெரிய உண்மை...
           எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான 
உலகம்,என்ன ஒரு  நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு 
சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது 
மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக 
பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு 
பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...
          யாருமற்ற சாலை, 
அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள் 
வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது 
பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச 
எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து 
இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற, 
கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில்  இளையராஜாவும் 
இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
 
          எப்போதும்
 எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும் 
இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும் 
மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி 
அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப 
நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில் 
தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் 
ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது 
அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி 
ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன 
அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள் 
குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது 
கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே 
வியந்துகொண்டேன்...
       கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம்
 தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில் 
வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும்
 கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?... 
நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம் 
எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல்
 கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது... 
மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை, 
ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது 
இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி  
கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு 
பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை 
கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர் 
மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு 
சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு 
எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய் 
விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச 
ஆரம்பித்தார்..
 ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு 
வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது 
பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த 
காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது.. 
       ஒருவழியே 
நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து 
கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி 
நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில்  அந்த ஆட்டோ நண்பர் 
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம்
 அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ 
கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய் 
பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்.... 
 
 
              
          
          
        
          
        
யாருமற்ற இடம்
 ஏதுமற்ற மொழி
 எப்போதும் பிடிக்கும் உனக்கு.
 
 உன் மொழி உடைக்க நீட்டித் தருகின்றேன்
 சிறு இடைவெளியை..
 
 கைகோர்த்துக்கொள்கின்ற
 இருளுக்குள் 
 இரவல் வாங்கிக் கொள்கிறாய்
 என் கைகளை...
 
 மெளனம் நிறைந்த 
 பாதையை கடந்து 
 வெகுதூரம் பயணிக்கிறது 
 உன் பார்வை
 
 இப்போது மழை வேண்டுமென்று
 உன் மொழி உடைய
 குடைவேண்டுமென்ற
 என் மொழி அடைக்க
 
 காத்திருந்தவனைப் போல்
 காற்றாய் தேகம் நுழைந்த 
 அந்நிமிடம்
 விதைகள் விருட்சமாகத்தொடங்கின
 ஆழமாய் அதி ஆழமாய்
 இம் மழையில்...
 
 ••
 நன்றி உயிர்மை, யூத்புல் விகடன்
 http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6186
http://youthful.vikatan.com/index.php?nid=1344#cmt241