எல்லோர் வீட்டின் கதவுகளும்
திறந்தே தான் கிடக்கிறது
உள்ளே வருவதற்கான அனுமதி மட்டும்
உரிமையாளறென்ற பெயரில் நிறுத்தற்குறிவைக்க
குறியுடைத்து
உள் நுழைபவர்களைப்பற்றிய கவலையோ
நம் குறிப்புகளை அவர்கள் படிப்பதில்
கிடைத்த சிலாகிப்பை அறிவதில் ஆர்வமோ
அந்தரங்கமென ஆட்டிவிக்கும் ரகசியங்களின்
சூல்லொன்றை அவர்கள் முன் பிரசவிப்பதில்
ஏற்படும் வலியோ
நம் படுக்கையை பகிர்ந்துகொள்வதில்
கிடைக்கும் உணர்வை
சொல்வதிலிருக்கும் சுவாரஸ்யம்
பற்றிய கவலையோயின்றி
நிர்வாணமாய் நிற்கின்ற
உண்மையின் முன்
அன்னியத்தன்மையிலிருந்து விலகுவதாயிருக்கிற
இக்கனவு
எல்லா பறவைகளும் வந்தமர்வதற்கான
விலாசமாக
விசாலமாகவே இருக்கிறது...
எதை எதையோ
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள்
சூரியனாகி சுட்டெரிக்க
நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து
பாடிக்கொண்டே திரிய
கைவிளக்குகளாகிப்போன
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த
காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை...
பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல்
அழகாக்கிப்போக நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு
பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும்
சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும்
காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது
எவ்வளவு பெரிய உண்மை...
எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான
உலகம்,என்ன ஒரு நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு
சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது
மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக
பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு
பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...
யாருமற்ற சாலை,
அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள்
வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது
பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச
எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து
இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற,
கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில் இளையராஜாவும்
இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
எப்போதும்
எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும்
இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும்
மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி
அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப
நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில்
தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும்
ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது
அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி
ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன
அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள்
குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது
கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே
வியந்துகொண்டேன்...
கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம்
தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில்
வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும்
கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?...
நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம்
எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல்
கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது...
மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை,
ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது
இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி
கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு
பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை
கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர்
மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு
சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு
எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய்
விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச
ஆரம்பித்தார்..
ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு
வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது
பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த
காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது..
ஒருவழியே
நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து
கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி
நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில் அந்த ஆட்டோ நண்பர்
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம்
அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ
கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய்
பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்....
யாருமற்ற இடம்
ஏதுமற்ற மொழி
எப்போதும் பிடிக்கும் உனக்கு.
உன் மொழி உடைக்க நீட்டித் தருகின்றேன்
சிறு இடைவெளியை..
கைகோர்த்துக்கொள்கின்ற
இருளுக்குள்
இரவல் வாங்கிக் கொள்கிறாய்
என் கைகளை...
மெளனம் நிறைந்த
பாதையை கடந்து
வெகுதூரம் பயணிக்கிறது
உன் பார்வை
இப்போது மழை வேண்டுமென்று
உன் மொழி உடைய
குடைவேண்டுமென்ற
என் மொழி அடைக்க
காத்திருந்தவனைப் போல்
காற்றாய் தேகம் நுழைந்த
அந்நிமிடம்
விதைகள் விருட்சமாகத்தொடங்கின
ஆழமாய் அதி ஆழமாய்
இம் மழையில்...
••
நன்றி உயிர்மை, யூத்புல் விகடன்
http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6186
http://youthful.vikatan.com/index.php?nid=1344#cmt241
உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்
உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது
வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது
புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்
செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு
இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்
நன்றி : அதீதம்
http://www.atheetham.com/?p=4738
பதியமிட்டு வளர்க்காமல்
பாதுக்காத்து வைக்காமல்
நாளுக்கு இருமுறையென
நிரூற்ற வேண்டாமல்
தெருவோரக்கடையொன்றில்
வாங்கிவந்தேன்
பல வண்ண ரோஜா
தினச்செயலாக
ஒவ்வொரு இடமாய்
இடம் மாறும்
அப்பாவின் பேப்பர் வெயிட்டாக
தம்பியின் வாகனச்சாவி அறையாக
அம்மாவின் பலசரக்கு சீட்டை
தாங்கிய ஒன்றாகவென
பலவாறு உருமாறினாலும்
தனக்கான வேலைகளை முடித்து
அதன் இடம் வருகையில்
மலர்வாசம்
என் வீட்டிலும்.
-ரேவா
சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...
உயிர் ஒப்பந்தமொன்றை
உதடுகள் எழுதுகிறது
முத்தமெனும்
மையிட்டு
*
சொர்க்கமென்பதை
இரண்டாய் பிரித்து
உன் இதழாய் படைத்தானோ
இறைவன்...
*
ஒரு துளியாய் விழுந்து
பிரவாகமாய்
உருவெடுக்கும் வித்தையை
எப்படி கற்றது
உன் முத்தம்...
*
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்றென
தனைக்காக்க தானாய்
வளருகிறது
இம் முத்தம்...
*
ஊடலை உடைக்க
உடன் எடுத்துவருகிறாய்
உன் முத்தத்தையும்
அதன் மொத்தத்தையும்..
*
உனக்கு ஊட்டையில்
மட்டும்
பசியேறி ஏறிகொள்கிறது
இம்முத்ததிற்கு..
*
இன்னுமொரு கவிதையென
கன்னம் காட்டுகிறாய்
கட்டுக்கடங்காமல் இதழ்கள்
எழுதித்தீர்க்கிறது
உன்னை.
*
அசலோடு வட்டியை
அடம்பிடித்து வாங்கும்
முத்த வட்டிக்காரனாய்
உன்னை முழுதாய் மாற்றியிருந்தது
இம்முத்தம்...
*
காமத்தின் சாவியிட்டு
காதல் திறக்கும்
ரகசிய வழி
முத்தம்
*
முதல் முத்தத்திற்கு
முகம் மூடுகிறாய்
விரலிடுக்கில் வந்து விழுகிறது
நாணமெனும்
முத்தம்..
*
உலராமலே கிடக்கிறது
நீ உயிர்த்தொட்டு
எழுதிய கவிதையொன்று
இதழிலில்..
*
இதழ்கோப்பைதனை
மறுமுறையென்
இதழ்மாற்று
போதை தெளியட்டும்
இம்முத்ததிற்கு..
*
உனைக்கண்டதும்
கவியெழுத
காதல் கட்டெடுத்த
வார்த்தை
முத்தம்...
*
சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...