வலையுலக உறவுகளுக்கு வணக்கம்,
வருடத்தின் கடைசி நாள் வாழ்த்துச்சொல்லவோ இல்லை நன்றிகளை பரிமாறிக்கிறவோ எழுதப்பட்ட பதிவு இல்லை இது...ஒவ்வொரு வருட முடிவும் அதன் நியாபகங்களை தக்கவச்சிக்க, அழிக்க முடியா ஒரு சுவடை ஏற்படுத்திட்டு போகும், போன வருடம் தானே புயல் மூலம் தன் இருப்பை தக்கவச்சுட்டு போனது 2011.. இந்த வருடம் 2012 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தேசமா புது அவதாரமெடுத்திருக்கு நம் நாடு...
எங்க போயிட்டு இருக்கோம்ன்னு சத்தியமா தெரியலை..
வலியவர் விசயங்கள் என்னைக்கும் மேடை ஏறாதுங்கிற விஷயங்களை தெளிவா காட்சி படுத்திக்கிட்டு வருற விசயங்கள், 4 வயது குழந்தையில் தொடங்கி 45 வயது பெண்மையையும் சூரையாடும் வெறி, இதனால ஏற்பட்ட விவாதம், பிரச்சனை, ஆடை குறைப்பு தான் அடிப்படைக்காரணம்ன்னு சொல்ல அர்த்தமற்ற பேச்சு எல்லாமே நடந்த தவறுக்கு முகமூடி போடவைக்கிற நிலை தானே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற களமா இல்லை...
இனி பிறக்கும் வருடமாவது வன்கொடுமைகளில்லா ஒரு தேசமாய் மலரட்டும்...அப்படி இல்லாம இந்த நிலை நீடித்தால் நிச்சயம் இந்த தேசம் மலடாய்ப்போகும்...
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்.....
சந்தோஷமா இவ்வாண்டை வழியனுப்பி வைக்கமுடியா நிலையில் இருந்தாலும், நடந்தவைகள் நடப்பில் இருப்பவர் கண்களுக்கு எட்டட்டும்...
அடுத்தவர் சங்கடங்களை வெறும் செய்தியாய் கடங்கின்ற மனதும் மறைந்து போகட்டும்.
நல்லவை எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம்... நீயாவது எங்களை ஏமாற்றாதே 2013..
நடந்தவைக்கும் கிடைத்தவைக்கும் நன்றி 2012...
வன்கொடுமைகளின் தேசத்திற்குள் வருக 2013.......
நண்பர்களுக்கும் ஏற்றங்களை கொண்டுவரட்டும் இந்த புத்தாண்டு....
மாற்றம் படைக்க மனிதம் போற்றுவோம்.....
-ரேவ
இருப்பிடங்களை வெற்றிடமாக்கி
வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும்
நினைவுகளில் கோலேச்சில்
உன்னோடிருக்கிறேன்..
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லையென்ற
சமாதான சாஸ்திரங்களை
காதல்
கட்டவிழ்க்கும் காலமதில்
உன்னோடிருக்கிறேன்
சோகத்தின் அடர் இருளிலின்
கோரமுகத்திற்கு பயந்து
காட்சிகொண்ட
காட்டிக்கொண்ட தைரியத்தின்
பெரும் நிழலில்
காதலென்னை காட்டிக்கொடுக்க
உன்னோடிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனதறைகள் திருடி
அவசியப்படுகையில் புணர்ந்து வெடிக்கும்
கவிதை விந்தின் பாய்ச்சலில்
உன்னோடிருக்கிறேன்
அவசியங்கள் காதலாகாதென்று
அறியவைக்க
அடர் இருளை போன்றதொரு
அமானுஸ்யம்
உனதருகில்
உண்டென உணர்ந்தும்
உன்னோடிருக்கிறேன்
நீ காட்டிக்கொடுத்தவைக்கு
காதலென்று பெயரிட்டு
கழுவிலேற்றும் கனவுகள்
எனதென்று அறிந்தும்
உன்னோடிருக்கிறேன்
வேறென்ன
எப்போதும் போல ஏமாந்த சிந்தாந்தம்
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
இருட்டில் கலந்து
கரைந்து போகிற
சுயத்தின் சிதைவுகளை
ரசித்தபடியே
உன்னோடிருக்கிறேன்
-ரேவா
ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..
ப்ரியக்கண்கள் மத்தியில்
பிரியாமல் நமைத்தொடரும்
கேள்விகளை
பெரிதாய் - யாரும்
சட்டைசெய்யாத போதும்
சாட்டையடியாய் வந்துவிழும்
இப்பார்வைகளின் வீரியம்
விழித்திருப்பவனுக்கே
புரியுமாதலால்
இப்படியும்
அப்படியும்
எப்படியோ ஒப்பிட்டு
எதன் எதற்கோ
பொருளிட்டு
பொய்யை மெய்ப்பிக்கும்
பொருளில்லா
இவர் பொருளில்
புதைந்துள்ள
பொருளனைத்தும்
புறம் பேசும் மனமன்றோ...
ஓப்புக்காய் அன்புவைத்து
ஓயாமல் உழலும்
இவர் நாக்கில்
ஓப்புமை உயருமென்றால்
ஓங்கிவளரும் நம் நட்பின்
பொருள் தானென்ன?
இச்சிநேகத்தின் சிறு நாடி
சில்லு சில்லாய் நொறுங்கிப்போக
சிக்கிட்ட
இம்மனிதருக்காய்
ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..
- ரேவா
அவளைப்போலவே
நீங்களும் வரைந்திருக்கலாம்
உங்களின் எண்ணங்களிற்கான
ஒரு வட்டத்தை...
இதுவரை
அவள் வரைந்துகொண்ட
அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த
கவலையோ
அதிலிருந்து மீளவேண்டுமென்ற
தவிப்போ
தோன்றவேயில்லை
அவளுக்கு
மேலும்
மேலும்
அவளை நெருங்கும் யாரும்
அவளை நெருங்காதிருக்க
கட்டுப்பாடுகளின் வட்டத்தை
நெருக்கிக்கொண்டே இருக்கிறாள்
உங்கள் எண்ணங்களை
பற்றியோ
இது அடிமைத்தனமென்று
நீங்கள்
குறிப்பதை குறித்தோ
எந்த கவலையுமில்லை
அவளுக்கு
என்றேனும் ஒரு நாள்
அவளை சரியாய் படிப்பதன்
பொருட்டு
தளர்த்தப்படலாம்
அவளின் கட்டுப்பாடுகளின் வட்டம்
உங்களுக்காய்
இதை உணர்ந்த தருணம்
உங்களுக்காய் மட்டுமென
ஒரு வட்டத்தை
வரைந்திருப்பாள்
நீங்கள் அறிந்திறாதபடி..
தொலைதலின் பொருட்டு
மகிழ்ச்சி கொண்டால்
# இதுவும் காதலே.......
அழுதலின் நிமித்தம்
ஆனந்தமடைந்தால்
# இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு
வானம் பார்த்து
சிரித்துவைத்தால்
# இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும்
சிறைபடுத்தமுடியா
பொருள் கொண்டால்
# இதுவும் காதலே...
தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அற்புதக்கலையை
அறிந்திருந்தாயாயின்
# இதுவும் காதலே.....
இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில்
கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்
ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டு
பரிசெனத் தருகிறாய்
அவ்வளவு கடினமான முடிச்சாய்
அதுயில்லாது போனாலும்
அவிழ்ப்பது கொஞ்சம்
கடினமாதென்பது முயன்றலில்
கிடைத்திட்ட பலன்...
எல்லோரும் வருகின்றனர்
இதனோடு போட்டியிட
இறுதியில் எல்லோருக்குள்ளும்
முடிச்சிட்டுக்கொண்டது
இது..
பலவிதமான முயன்றுபார்த்தல்
பலனில்லை
பதிலில்லை
இதனிடம்..
தோல்வியை மறுக்க
இதை
அறுத்துப்போடுவதென்று
நினைத்திட்ட வேளையில்
அவிழ்க்கப்பட்டது
இவ்முடிச்சு....
பல அபிப்ராய முடிச்சுகள்
உங்களுக்கு இருக்கலாம்
அவிழ்க்கப்பட்ட அதற்கு
காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
இறுகிக் கிடக்கிறது
அம்முடிச்சு....
என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீயும் கேட்கிறாய்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர...
உள்ளத்தை
எரித்து வாழும் வாழ்க்கையில்
எனக்கு உடன்பாடுயில்லை என்பதை
உள்ளதைச்சொல்வதால் அறிக...
எப்படியும் இதை முகம்பொருத்துப்பார்க்கும்
இவ் ஓராயிரம் முகங்களுக்கும்
சொல்கின்றேன்
என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீங்களும் கேட்கின்றீர்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..
என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ
காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து
உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........
- ரேவா
வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........
# இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
# இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...
# இதுவும் காதலே...
ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்
இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
முகவரியிடம் கள(ல)வு போனால்
# இதுவும் காதலே
உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...
# அழகியல் விளையாட்டு......
ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...
# அழகியல் விளையாட்டு....
என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....
# அழகியல் விளையாட்டு..........
விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......
# அழகியல் விளையாட்டு......
ஆயிரம் ஒப்பனையிட்டு
ஒப்புக்காய் கொஞ்சம்
ஒப்பனை சேர்த்து
பவனிவரும் என் வரிகளை
ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை......
# அழகியல் விளையாட்டு....
இறக்கை விரித்து பறக்கச்சொல்லும்
உன்னிடத்தில் தான்
ஒளிந்துகொள்வதின்
சுகம் கிடைக்கிறது..
# அழகியல் விளையாட்டு.
உன்னிடம் தவறில்லாமல்
எப்படி பேசுவது
என்று யோசிக்கும் போதே
ஏதோ ஒரு தவறு நிகழ்ந்தேறிவிடுகிறது..
# அழகியல் விளையாட்டு...
கொட்டிக்கிடக்கின்ற
உன் குறும்புதனை
ஒவ்வொன்றாய் கோர்த்தாகிவிட்டது
கிடைத்ததென்னவோ
இந்த கவிதைகளும்,
அதற்கீடான
காதலும் தான்.....
# அழகியல் விளையாட்டு...
கடுச்சூடுதான் ஆயினும்
இவ்வடர் வனத்தில்
வெந்து தணிவதை விட
வா அன்புச்சண்டையிட்டு சாகலாம்..
# அழகியல் விளையாட்டு....
.
உயிர்வாழ்வதற்கான
ஒற்றைத் துளி
நீர்
உன் நட்பு.....
*
என் எல்லாமுமாய்
மாறிப்போன
எனக்கான சுயம்
நீ
*
புரிதலின் நிமித்தம்
பிரிதல்
நட்பிலே சாத்தியம்....
*
காதலில் சிக்கிக்கிடக்கும்
என் பெரும்பாலான கவிதைகளுக்கான
உற்சாகம் உன்னிலிருந்தே
ஆரம்பம்......
*
என் பிடிபடாத மெளனங்களை
படிக்கத்தெரிந்த
ஒற்றை அகராதி
நீ
*
என் ஒவ்வொரு போராட்டமும்
உன் உற்சாகத்தின் பொருட்டே
உயிர்வாழ்கிறது...
*
உயரப்பறக்கும்
எந்தன் கனவுகளுக்கான
இரண்டாம் சிறகு
நீ..........
*
எதையும்
புரியாமல் தவிக்கும் மனதின்
தவிப்பை
சரியாக புரிந்தவன்
நீ
நீ என்
# நண்பேன்டா
ஒரு பிரிவைத்தாங்கி வரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திட முடியும்...
சில கவிதை
பிறரின் அனுபவத்தில் முளைத்திடும்
சில கவிதை
தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும்
அல்லது
ஏதோ ஒன்றை தூக்கி
எப்போதும் அசைப்போடுதலின்
பொருட்டு கிடைத்திடும்.
எது எப்படியோ
ஒரு கண்ணீரையோ
ஒரு கனவையோ
தற்காலிகமாய் மறைக்கதெரிந்தவன்
இல்லை தொலைக்கத்தெரிந்தவன்
ஒரு கவிதையிலோ
இல்லை கண்ணீரிலோ
முடித்துவிட்டு போகட்டும்
முடிந்தவரை
உங்களின் அபிப்ராயம்
எந்த ஒரு சம்பிரதாயத்தையும் கொண்டுவந்துவிடாது
புன்னகைப்பதைத்தவிர...
ஒரு நீள் சோகத்தை
சலவை செய்ய தெரிந்தவன்
காதலை வெல்கிறான்...
தெரியாதவன்
வெற்றிக்கு தயார் செய்யப்படுகிறான்
அவ்வளவே...
ஒரு பிரிவைத்தாங்கிவரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திடமுடியும்.....
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்...
இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய்
பிதுங்கி நிற்கும் பேருந்தின்
ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன்
என்னை..
கையோடு கைதடவி
கைமாறும் காசுகளில்
கற்பை கட்டிவிட்டு
கண்பார்க்கும் கூட்டத்தில்
கண்ணகிகள் புன்னகைப்பர்
இது புதிதல்லயென்பதுபோல்
ஆண்களோடு சிரித்துபேசி
ஆடைகளில் கவனம் வைத்து
ஆயிரம் கண்கள் நடுவிலும்
அடக்கம் பேணி
ஆரம்பமாகும் அலுவலிலும்
அடுக்கடுக்காய் கட்டப்படும்
ஆயிரம் வேலி,
அத்தனையும் உடைந்தெறிந்து
அடுத்தபணி ஆரம்பிக்கையில்
எப்போது இரையாகுமென
தூண்டிலில் வார்த்தை தைத்து
வசமாய் வீசப்படும்
காமத்தின் அம்பை
யாருக்கும் தெரியாமல்
கடந்தாகவேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு நாளும்
நீண்டு முடிகிறது
என் அலுவலக வேலை..
பணமென்ற ஒன்றிற்காய்
பழக்கப்பட்ட என் பழக்கங்களை
பூட்டிதைக்கிறேன்,
வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..
கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)
உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...
அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........
நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........
நான் எதைக்கொடுத்தாலும்
எப்படி
உடனே திருப்பித்தருகிறாய்
கவிதைகளாய் :)
கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி....
எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)
உன் முத்தங்களை வெல்ல நினைத்து
மொத்தமாய் தோற்றுப்போன
இந்த கவிதைக்கு
என்ன பெயர் வைப்பது?....
என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,
உனக்கும்
இந்த மழைக்கும் :)
நம் ஒவ்வொரு சந்திப்பும்
புத்தகத்தின் கடைசி பக்கங்களின்
புதைந்திருக்கும் முடிவைப்போன்றது
சுபமாய் இருந்தாலும்
சுலபமாய் இருந்துவிடுவதில்லை :)
எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...
எதை எழுதினாலும்
அதை பாதியிலே
நிறுத்திவிடுகிறது
பாழாய் போன
உந்தன் நினைவு.... :)
என் எழுதுபொருளில்
நீயிருக்கிறாய்
என்பதற்காகவே எழுதப்படுகின்றன
இவ்வரிகள் ஒவ்வொன்றும் :)
ஒவ்வொரு புரையேறுதலுக்கு
பின்னும்
புரையோடிப்போன
உந்தன் நினைவுகள் மீட்டெடுக்கின்றன
என்னை...........
வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு
அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு
சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தை
சாவகாசமாய் இளைப்பார
நீளும் வாழ்க்கையென
ஒவ்வொருஇரவிலும்,
அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறது
தோல்வியின் தடயங்கள்...
அதிகார ஆளுமைக்கு பயந்து
பொருளில்லா வாழ்வால்
இருளிடம் நயந்து,
அவன் இருக்கையில் சிரித்து,
இருக் கையால் அணைத்து,
மென் முத்தமொன்றை
புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,
சாத்தப்பட்ட அறையின்
சடங்குகள் முடிந்து
தனித்து விடப்படுகின்றேன்...
இந்த தனிமையில் வலி
நெஞ்சைகிழிக்க
வலிதாளாது
துவண்டுவிழுகின்றேன்...
ஒவ்வொரு இரவும்ஒவ்வொருவரின் வரவால்வாய்பிழக்கச்செய்ததுவாழும் நம்பிக்கையை...அந்த இருண்ட அறையில்கசிந்துகொண்டிருந்த
என் கனவுகள் சிலவும்,அங்கிருந்து அகற்றப்பட,என்னிடமிருந்து பலவந்தமாய்
பறிக்கப்பட்ட கறுப்பு பக்கமொன்றைதேடிக்கொண்டிருகின்றேன்நான்.....
விந்தின் வழி முளைக்கவில்லை
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...
பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..
ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு...
ஆனாலும் ஆண்டவர்கள்
என்னை அடிமைபடுத்த,
ஆன்மீகர்கள் என்னை பாடாய்படுத்த,
பலரும் பலவாறு
என் கற்பை கலைக்க
வெற்றுகாகிதமென்னை வேசியாய்
மாற்றியவர் நீர்...
ஆசையாய் பலர் புணர,
அடுத்தடுத்து பலர் கைக்களுக்கு
மாற்றி விட்டவர் நீர்..
என்னை படைத்த மனிதரின்
கடவுளுக்கும்யெனை
காணிக்கையாக்கியவர் நீர்..
இயந்திர மனிதனாய்
மாறிப்போன மனிதனின்
மாற்றிபோட்ட செய்கைக்கு
பின்
என்னை காரணம் காட்டும்
மனிதனே
உந்தன் செய்கைக்கு
எனக்கு எதற்கு சாயம்?...
படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...
வெற்று காகிதமெனை
வேசியாய் மாற்றாதீர்....
பின் உங்கள் கயமை எனக்கும் வரக்கூடும்..
ஜாக்கிரதை....
இப்படிக்கு
பணம்....
எத்தனைமுறை
இறுக கட்டியும்
அவிழ்ந்துவிடுகிற மனதை
நானும்,
ஈர்க்கின்ற விழியை
நீயும்,
பெற்றிருக்கின்றோம்
காதலிடம்...
காட்டிக்கொடுத்த
கண்முன்-உன்னை
கட்டிப்போடுகிறது
காதல்...
நீயில்லா அறையில்
தனக்கு பிடித்தவாறு
உன்னை நிறைத்துக்கொள்கிறது
என் தனிமை....
ஜன்னலோர இருக்கையாய்
என்னை எப்போதும்
ஈர்த்துகொள்கிறது
உன் விழிகள் :)
உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து
இவ்வரிகள்
ஒவ்வொன்றும்
தன்னை
அலங்கரித்துகொள்கின்றன......
உன்னை கடக்கும் நிமிடங்களில்
ஆசையாய் கைக்கோர்த்து
கொள்கிறது
உன் நினைவு........
இப்போதைக்கு
உன் நினைவுகளை
தின்றே
உயிர்வாழ்கிறது
என் கவிதை............
நம் ஒவ்வொரு சண்டையும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து,
காதல் எனும்
பெரும்புள்ளியில் முடிகிறது...
தீர்ந்து போனபின்னும்
தீரா தாகத்தை
உணர்கிறாயாயின்
நீ
காதல் முன்
ஆசிர்வதிக்கப்பட்டவன்..