உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

*** யார் அறிந்தார் ****


எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோம்..


* அன்னையின் மகன் ஆசைக்காய்
தந்தையின் பெண் ஆசைக்காய்
எண்ணிக்கை கூடி,
அதனால்
எங்கள் எண்ணங்கள் கூடி
ஓடிப் போனதை யார் அறிந்தார்...

 

* மாற்றம் வரும்
எங்கள் வாழ்வில் மீறுதல் தரும்
என்று பத்திரமாய்
நான் பாதுகாத்த 
எங்கள் பாட புத்தங்களை
காலம் தின்று ஏப்பம்
விட்டதை யார் அறிந்தார்...

 

* தமிழ் வணக்கம்
பாட வேண்டிய எங்கள்
பூவிதழ்கள்,
அம்மா தாயே என்ற
பாடலையே  தேசியகீதமாய்  
பாடித் திரிவோம்
என்பதை யார் அறிந்தார்...


* பேனா பிடித்து
கரை பட வேண்டிய
பிஞ்சு விரல்கள்,
பத்துக்கு பத்து ஸ்பேனர்
பிடித்து கரை படிந்த
காரணத்தை யார் அறிந்தார்...

 

* எங்கள் இளமையை
வறுமைக்கு விலை பேசிய
விலை மாந்தர்கள் யார்
என்று யார் அறிந்தார்...

* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...


* எங்களை வளர விட்ட
வேர்களுக்கும்  தெரியவில்லை,
வளர இடம் தந்த
பூமிக்கும் தெரியவில்லை
விழுதுகள் வளர
பணச்சேர்க்கை தேவை என்பதை...
இதில் எங்கள் உணர்வுகளை
யார் அறிந்தார்..
 
* கடலும்
எங்கள் கண்ணீரின்
எச்சம் என்பதை யார் அறிந்தார்....
 
* இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...

இப்படியே போனால்,
இளமையில் வறுமை
தரும் முதுமை மட்டுமே
இந்தியாவின்
முதல் அடையாளமாய் போகும்....
 
 * அதற்க்கேனும்,
எங்கள் வறுமைக்கு
ஒரு வழி சொல்லுங்கள்....
உங்கள் முகமுடிக்கு
சாயம் இட்டுக்கொள்ளுங்கள்....
இந்த சடலங்களுக்கு
பிடி சாம்பலாவது
அள்ளிக்கொண்டுங்கள்....
 
 * எங்கள் இந்தியா
பண்பாடு நிறைந்த நாடு
மட்டும் அல்ல..
பணத் தேக்கம் பெருத்த
நாடு என்பதை நான் அறிவேன்
நீர் அறிவீரா?........
 
* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...
 
* எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோ
ம்.. 


அன்புடன்
ரேவா 

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முத்தத்தை கேட்டால் என்ன தருவாய்..



காதலன் : கன்னி உன் காதல் பரிசாய்
முத்தம் கேட்டால்
என்ன தருவாய்...

காதலி: என் ஒட்டு  மொத்த அன்பையும்
ஒன்றாய் திரட்டி உன்
உயிர் வாங்கும்
ஒற்றை முத்தத்தை
இன்றே தருவேன்...
பதிலுக்கு
நீ என்ன தருவாய்...

காதலன்: என்னை கொடுத்தபின்
என்னில் தருவதற்கு
ஒன்றும் இல்லையடி..
இருந்தாலும் நீ
கொடுக்கும் முத்தத்தை
எல்லாம் எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை 
மட்டும்
எனக்கு தரும் உன்
கைபேசியே
என் காதல் பரிசாய் 
வேண்டுமென்பேன்...  
தருவாயா?......!!!!!!!


முந்தய பதிவு : என் காதல் வாழ்த்து அட்டையில்

அன்புடன்
ரேவா 

புதன், 23 பிப்ரவரி, 2011

என் காதல் வாழ்த்து அட்டையில்




உனக்காய் நான் வாங்கி  வைத்த
வாழ்த்து அட்டையில்
இன்னமும் 
என் காதல் வாழ்கிறதடி...

உன்னைப் பார்த்த நாளில் பதியம்
போட்ட என் காதல் நாற்றை
பத்திரமாய் உன்னிடம் சொல்ல
நான் வாங்கிவைத்த
வாழ்த்து அட்டையில்
சிதையாமல்  இருக்கிறதடி
என் காதல்..

முதல் முதல் எனைபர்த்து
பேசிய வார்த்தைகள் அனைத்தயும்
கவிதையாய் நான் எழுதி
தொகுத்த என் காதல் 
கவிதைகள் எல்லாம்
புழங்காமல் இருக்கிறதடி
அந்த வாழ்த்து அட்டையில்..

உன் பிறந்தநாளுக்காய்,
நீ வெற்றிப் பெற்ற போட்டிக்காய்,
முதல் முதல் என்னிடம்
பரிமாறிய வார்த்தைக்காய்
என கொடுக்க நினைத்த
ஓராயிரம் வாழ்த்து அட்டையில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்...

வாழ்த்து அட்டையை 
 கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்
உனக்கான வாழ்த்து அட்டையில்...

உன்னக்காய் நான் வங்கி
வைத்த வாழ்த்து அட்டையில்
இன்னமும் 
என் காதல் வாழ்கிறதடி...

முந்தய  பதிவு : அவனும் அவளும் 

அன்புடன் 
உங்கள் தோழி 
ரேவா

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அவனும் அவளும்..



ரகுவும், லதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... ரகு ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் கட்டிளம் காளை... அவனைக் கண்டதும் காதல் செய்ய சொல்லும் அவன் கண்கள்...ஒட்டுமொத்த அழகையும் இறைவன் தனக்கே படித்ததாய்  நினைத்து எப்போதும் கர்வம் குடிகொண்டிருக்கும் நெஞ்சம் அவனுக்கு... இதற்க்கு நேர் எதிர் லதா....பார்த்ததும் பணிவு கொள்ளச்செய்யும் தோற்றம்.. தமிழ் பெண்ணுக்கே உரித்தான நாணம் என எப்பொதும் அமைதி குடிகொண்ட இடமாய் காட்சி தருவாள்..

இவர்கள் காதல் துளிர்த்த இடம் ....இருவரும் அலுவலக பணி நிமித்தமாய் சந்தித்துக் கொள்ள பார்த்ததுமே  இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது... ஆனாலும் ரகுவும் லதாவும் காதலை வெளிப் படுத்தாது  பரஸ்பரம் நண்பர்களாய் இருந்தது வந்தனர்...

லதாவின் பொறுமையும் நேர்த்தியான செயல் திறமையும், அடங்கிப் போகும் குணமும், ரகுவுக்கு பிடித்துபோக தன் காதலை அழகான ஒரு மாலைப் பொழுதில் தென்றல் தழுவும் கடற்க்கரை அருகில் அலைகளின் சாட்சியோடு அழகான தன் காதலைச் சொல்ல...
அழகியவள் கொஞ்சம் தடுமாற பின் நாணிக் குருகி வெட்கம் தின்ன தன் காதலை அவளும் அவனிடம் சொல்ல... அவளும் அவனும் ஒன்றாகி காதல் மொழி பேச காலங்கள் உருண்டோடியது...

லதாவின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, இவளும் தன் காதலைப் பற்றி தன் குடும்பத்திடம் சொல்ல,  ரகுவை சந்தித்து பேச லதாவின் குடும்பம் ஆயத்தமானது...ஒரு ஞாயிறு அன்று ரகு லதாவின் வீட்டுக்கு சென்று தன் காதலை பற்றி லதாவின் குடும்பத்திடம் பேச, ரகுவின் நான் என்ற ஆணவமும், உயர் பதிவியில் பணிபுரியும் கர்வமும் அவனிடம் அதிகமாய் இருப்பதாய் உணர்த்த லதாவின் பெற்றோர் லதாவிருக்கு பொருத்தமானவன் இவன் இல்லை என்று வேறு இடம் பார்க்க... பதறிப்போன லதா வீட்டுக்கு தெரியமால் ரகுவை மணந்தாள்...

புதுமண தம்பதியாறகிப்போன காதலர்கள், காதலையும் இளமையையும்  பருகிப் பருகி சுவைக்க, வாழ்க்கை இருவருக்கும் சுகமாய் நகர்ந்தது... தன் குடும்பத்தை பிரிந்த லதாவின் துயரும் உள்ளக் குழியில் ஒட்டி இன்று வலித்தது.. ரகுவின் குடும்பத்திருக்கு பிடித்தமாகிப் போன லதா அங்கு இன்னொரு மகளாய் பவனி வந்தாள்.. ரகுவிற்கு மட்டும் லதாவின் குடும்பத்தின் மீது இனம் தெரியா கோவம்... லதாவின் முன்னே அவள் குடும்பத்தை சாடுவது, எள்ளி நகைப்பது என அவள் பொறுமையை கட்டவிழ்த்து கொண்டிருந்தான்..

இதன் இடையே லதா வேலைக்கு செல்வதும்...  அவன் அல்லாத வேறு ஆண்கள் கூட பேசுவதும் பழகுவதும் நட்பு பாராட்டுவதும்  அவனுக்கு  பிடிக்காமல் போக பெண் என்றால் இப்படி தான் என்று ஒரு படித்த இளைஞனுக்குள்  ஒளிந்து கொண்டிருந்த பாமரனையும், ஆண் நான் என்ற கர்வத்தையும் லதா அவன் பேச்சில் உணர்ந்தாள்... நாட்கள் நகர நகர ரகுவின் ஆளுமை லதாவிடம் எரிச்சலை உருவாக்க, இருவருக்கும் பரஸ்பரம் இருந்த காதல் காணமல் போக.. சண்டையும், கோவமுமே வீட்டில் நர்த்தனம் ஆடியது... தன்னை தன் கணவன் பணிப்பெண்ணாகவும் , போகப் பொருளாகவுமே பார்ப்பதாய் உணர்ந்த லதா காதல் கணவனை விடுத்து இன்று விவாகரத்து பெற்று  தனிமையில் படிப்பின் துணையுடன்  வாழ்த்து கொண்டிருக்க, ரகு தன் காதலை பற்றியும் தன் கட்டிய மனைவியைப் பற்றியும் சிறிதும் நினைப்பில்லாமல் அலைந்து கொண்டிருக்க, முதுமையில் தன் மகனின் வாழ்கை மாற்றங்களை ரசிக்க நினைத்து, ரணங்களை மட்டும் பார்த்து வாழ்க்கையின் இறுதி காலத்தை துயரோடு அனுகிகிறார்கள் ரகு மற்றும் லதாவின் பெற்றோர்...

நண்பர்களே இந்த கதையோ இல்லா கற்பனையோ இல்லை... நாம அன்றாடம் பாக்குற விசயங்கள்ல இப்போ கணவன் மனைவி பிரிவு ஒரு முக்கிய அங்கமா வந்துருச்சு...வேக வேகமா காதலிக்கிறோம் அதே வேகத்துல சில பேரு காதல் , தாம்பத்தியம், குடும்பம் இப்படி  எது பத்தியும் நினைக்காம இளமையோட உந்துதல்ல கல்யாணமும் பண்ணிக்கிறோம்...  நம்மோட பாரம்பரியமே குடும்பமும்  குடும்பம் சூழ்ந்த நம் அமைப்பு தான் ஆனா இப்போ அதுவும் காணாம போயிட்டு  இருக்கு..

பரஸ்பரம் கணவன் மனைவிக்குள்ள இருக்கிற அன்பு, விட்டு கொடுத்தல், தட்டி கொடுத்து விட்டு பிடித்தல், உணர்வுகள புரிஞ்சு அதன் படி நடத்தல், பணிந்து போதல், புரிந்து கொள்ளுதல், இப்படி எதுவுமே நம்ம இளைய தலைமுறை கணவன் மனைவிகிட்ட இல்லாம போக காரணம் என்ன?...

இங்க யாரும் யாரையும் புரிஞ்சுக்க நினைக்கிறதில்ல, இப்போ நாம இருக்கிற சுழலும் அதுக்கு ஒரு காரணமா போயிடு இருக்கு... கணவனும் மனைவியும் பொருளாதார ரீதியில சுதந்திரமா செயல பட ஆரம்பிச்சுட்டோம்...ஒரு பொண்ணுனா இப்படிதான் வளரணும்னு சொல்லி சொல்லி வளர்க்கபடுறோம்..

ஆனா ஒரு ஆணுக்கு அப்படி எந்த கட்டுப் பாடுகளும் இல்லை...ஒரு ஆணை தான்  ஆண்கிற முறையிலேயே அவங்கள வளர விடுறோம்..எவ்ளோ தான் ஒரு ஆண் படிச்சாலும் ஒரு சிலர், பெண் நமக்கு கட்டுப்பட்டு தான் இருக்கணும்கிற எண்ணத்தோட இருக்கிறோம்... அவளுக்கும் மனசு இருக்கு அவளோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவளோட எண்ணங்களோட நாமும் ஒத்துப் போவோம்னு நினைக்கிறது கிடையாது..

சில பெண்ணுங்களும் ஆண்கள புரிஞ்சுக்க தயார இல்லை...படிப்பும், பணமும் கொடுக்கிற சுதந்திரத்த ஒரு ஆணுக்கிட அடகு வைக்க தயார இல்லை.. அதோட விளைவு நீ சொல்லி நான் கேக்கணுமா கிற நிலை..
இவ என்ன சொல்ல நான் என்ன கேக்கனு.. பிரச்சனைகள் ஆரம்பம் ஆகா விளைவு சுயலமான  விவாகரத்து தான்...

தனிப்பட்ட இவருக்குள்ள பிரச்னைக்கு விவாக ரத்து மட்டும் போதுமா?... ஏன் நம்ம யாரும் உறவுகளை புரிஞ்சுக்க தயார இல்லை... ரத்தம் வரும்படி ஒருத்தர குத்திக் கொல்லுறது மட்டும் கொலைகிடையாது... உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் நண்பர்களே..

குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... பொறுமையா எந்த விசயத்துக்கும் அறிவுப் பூர்வமா சிந்தித்து உணர்வுக்கும் கொஞ்சம் வழிவிட்டு நடந்தா பிரச்சனை  என்பது இல்லாமல் போகும் தானே நண்பர்களே...
சிந்திப்போம்  நம் குடும்ப அமைப்பை பண்பாடு மாறாமல் பேணிக்காப்போம்... 



  முந்தையப் பதிவு : என் காதல் தேவன் நீ

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள்... உங்கள் வாழ்த்துக்களே எங்களை வளப்படுத்தும் 
அன்புடன் 
உங்கள் தோழி 
ரேவா 

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என் காதல் தேவன் நீ




* அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும் 
என் காலத்தை 
காதல் கொண்டு
நிரப்பிய 
என் காதல் தேவன் நீ...

* அறியா ஒன்றை
அறிந்ததாய்...
புரியா ஒன்றை
புரிந்ததாய்...
காணாத ஒன்றை
கண்டதாய்...பக்தியில்
லயிக்கும் பக்தர்கள்
கூட்டம் உண்டெனில்...
நானும் உன் பக்த்தையே
நீயும் என் காதல் தேவனே...

* பாவம் செய்தோர்...
நிம்மதிவேண்டுவோர்...
அமைதி தேடுவோர்
நாடுவது ஆலயம் எனில்..
நான் நாடுவது உன் மடியன்றோ?...
 
* உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...

* நீ சோம்பல் முறித்து,
எனைப் பார்க்கும்
பார்வையில் பிறந்த
குழந்தை நிலவென்பது
உனக்கு தெரிகிறதா?....

* உன்னோடு நான்
இட்ட சண்டையில்
நீ வீசிய வார்த்தையின்
வடிவம் தன்
அந்த ஆதவன் என்பது
புரிகிறதா?...

* இரவும் பகலும் மாறிமாறி வர
நீ இட்டுக்கொள்ளும் ஒப்பனை
தான் காரணம் என்பது
புரிகிறதா?....


எல்லாம் புரிந்தும்
புரியாதது போல் நடிக்கும்
என் காதலே!!!!
நீ
நீராய் என் மேனி நுழைந்து,
நிலமாய் எனைத்தாங்கி...
காற்றாய் என் அங்கம் கலந்து,
ஆகாயம்போல்
அளவில்லாத அன்பை 
என்மேல்  பொலிந்து...
நெருப்பாய் எனைத்தொடும் துயரை
எரித்து எனை காக்கும்
என் காதலே...
பஞ்ச பூதங்களையும்
காப்பது கடவுள் என்றால்..
அனைத்தையும் உன்னுள் வைத்து
எனை காக்கும் என் காதலே
நீ என் காதல் தேவன் தானே?!!!!!!

* அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும் 
என் காலத்தை 
காதல் கொண்டு
நிரப்பிய 
என் காதல் தேவன் நீ...



அன்புடன்
ரேவா


( என் காதல் தேவன் நீ இது  என்னோட 100 வது   பதிவு.... என்னை இவ்வளவு தூரம்
எழுத உந்திய  என் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....)






--


சனி, 12 பிப்ரவரி, 2011

இப்படியும் சில மனித மிருகங்கள்



* காட்டில் மிருகங்கள்
கட்டுபாடுகள் கொண்டு
கட்டுக்கோப்பாய் வாழ
நாட்டில், நாணயம் மறந்து,
மனிதனின் மனிதம் மறந்த
சில மனித மிருகங்கள்...


* கொன்று கொளுத்த தேகத்தின்
சூடு தணிய  காதலின்
பெயரில் 
கலவு தேடும் 
சில மிருகங்கள்...

* கட்டிய தாலிக்காய்
கட்டிய மனைவியிடம்
காட்டு மிருகங்களை விட
கேவலமாய் வேட்டை யாடும்
சில மிருகங்கள்...

* தன் குறை இதுவென்று
அறியாமல், பிறர்
குறையை நிறைவாய்ச்சொல்லி
புகழ் தேடும் சில மிருகங்கள்..

* உணவிற்க்காய் பலர்
உடலைவிற்க,
உணர்வுகளை கொன்று
உறவு தேடும் சில மிருகங்கள்..

* ஆணென்றும் , பெண்ணென்றும்
பாலனினம் வகுக்க,
பாலுணர்விலே பாசம்
அறுக்கும் எமமைந்தர்கள்...

* ஒருவனுக்கு ஒருத்தி என்ற
புகழுக்குள் நம் பாரதம்
ஒளிந்து கொள்ள, உயிர்க்கொள்ளும்
நோய்க்கு சிவப்புக் கம்பளம்
விரித்து விருந்துகொடுக்கும்
உத்தம மைந்தர்கள்..

* கட்டுப் பாடுகள் இருப்பதாலோ
நாம் கலவில் நாம்
கட்டுப்படமறுக்கின்றோம்?....
கண்ணியம் காப்பதாய்
பலர் பொய் வேஷம் போடுகின்றோம்..

*  சிந்திக்க தெரிந்தவன் தான்
மனிதன் என்றால்,
சிதைக்குள் முடிந்து போகும்
மனித சதைக்கு அலையும்
மிருகங்களே!!!!

* காட்டு மிருகங்கள்
உன்னை பார்த்து ஏளனமாய்
சிரிப்பது உன் செவிக்கு
எட்டவில்லையா?..

** காட்டில் கண்ணியம்
காக்கும் விலங்குகள்
மத்தியில்,
நாட்டில் இப்படியும்
சில மனித மிருகங்கள்...
 
அன்புடன் 
ரேவா 

முந்தய கவிதை : "நலமா என் காதலே..."

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நலமா என் காதலே...

ரேவா கவிதைகள்


நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த  காதல் கனவைத் தந்த 
என் காதல் நீ நலமா?

முதல் முத்திரை பதித்த
உன் காதல் பார்வை,
முதல் முத்தம் பதித்த
உன் காதல் காலம்,
முதல் முதல் தேடிக்களைத்த
நம் புரிதல் நேரம்
என நீளும் நம் காதல் காலம்
நினைவுகளோடு என் நெஞ்சில்
நிலைகொள்ள..

சின்ன சின்ன ஊடல்கள்,
சின்னதாய் சில தேடல்கள்
சிலநேரம் சீண்டல்கள்
என நினைக்க நினைக்க இனிக்கும்
மிட்டாய்க் கனவுகளில்
நான் மையல் கொள்ள..

காகிதப் பூவாய் உன் பார்வைக்கு 
பட்டு, காதலால் உன்
காதலியாய் உருவெடுத்து,
காலத்தால் வந்த
நம் உறவு
இமைமூடினும்
மறையாதிருக்க....

சில நிமிடங்கள்,
சில தருணங்கள்,
சில நேரங்கள்,
புரியாமல் போக,
புரிதல் எதுவென்று 
அறிவதற்க்குள்ளே
கனவுக்கலைத்த என் தாயிடம்
கடிந்து, நான் மனதுக்குள்ளே
கேட்டுக்கொண்டேன்..
எங்கிருக்கிறாய் என் காதலே..?,...

நீளும் என் நாட்களில்
உன் கனவுகளே
என் சுவாசமாய் போக.
என் சுவசமாக்கிப்  போன
என் நேசமே..
நலமா நீ?????????????

நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த  காதல் கனவைத் தந்த 
என் காதல் நீ நலமா?

அன்புடன் 
ரேவா 

முந்தய கவிதை : என் இதயத்தில் நீ