உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

பெளர்ணமிப் பொழுதுகள்





சித்ரா பெளர்ணமி அன்றைக்கே எழுத நினைத்தது,பின் பகிரமுடியாத சூழலும், மன நிலையும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கையில் தேமேனென்று நடப்பவைகளை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுகளில் சமீபமாய் ஈடுபட்டுக்கொண்டிருப்பதில், நேற்றைய வானமும் வளர்ந்துவிட்ட நிலவும் கொடுத்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் அடைக்கமுடியாத கொண்டாட்டம்..

ஒரு இரவை நிலவைப் பார்த்தபடியே கடப்பதென்பது என் பெரும் ஆசை.. அதை நிறைவேற்றிக்கொடுத்த இந்த கோடையை இன்னும் கூட கொஞ்சிக்கொள்ளத் தோன்றுகிறது. சரியாக 43° C என்று என் மொபைல் வெயிலைக் குறித்துக்காட்டையில் செங்கல் சூளைக்குள் இருப்பதை வீடென்று நம்பிக்கொண்டிருக்கிறோமா என்ற எண்ணத்திற்கு இழுத்துவந்துவிட்ட வெயில்!? இரவுகளில் மொட்டைமாடியை தஞ்சம் புக அனுமதித்திருக்கிறது.

படுப்பதற்கு முன் நீர் தெளித்து வெட்கையை விரட்டும் அம்மாவின் கைகள் சகலத்திலிருந்தும் நம்மை ரட்சிக்க வந்த தேவனின் கைகள் என்றே சொல்லத் தோன்றுகிறது..

அதன்படி நேற்றைக்கு தூரத்தில் எங்கோ பெய்த மழையில் நனைந்த ஈரக்காற்றும், அதற்கு இசைந்து கொண்டு குளிர்வாங்கிய நிலவும் சிரிந்தபடியே என்னை வரவேற்க, மாடியில் பெரும் விருந்தொன்றை செவியில் நிறைத்த ஜோடிக்குயில்களின் பாடலும் மனதை எனக்கு பிடித்த தனிமையின் திசை நோக்கியே இழுத்துப் போனது..

நானிருக்கும் உலகம் சற்று நேரம் freeze out ஆனதில் இன்னும் கூட உண்ட களிப்பிலிருந்து மீளாதவளாய்த் தானிருக்கிறேன். இந்த வாழ்க்கை அத்தனைக்குப் பிறகுமென்ற இடத்திற்கு வந்து நிற்கும் போது கூட கொண்டாடப்படவேண்டியது தான், அதற்கு தயாராய் இருந்தால்.

குறையென்றானது குறைவில்லாதது என்ற மன நிலைக்கு வரும் போது அது கொண்டாடப்படவேண்டியதாய் மாறுகிறது. அப்படியே அத்தனையின் எல்லாமும்.

இங்கே சித்திரைத் திருவிழாவும் கிட்டத் தட்ட முடிகிற நேரத்தில் வீதிகள் எங்கும் நிறைந்து வழிகிற புதுமுகங்களும், கோடையை வேறு இடத்தின் நகர்வில் கொண்டாட வந்த குழந்தைகளும் தூங்கிப் போன வீதியை, ஒப்பனை களைத்த நடனக்காரியின் கால் சலங்கையின் ஓய்வில் இருக்கும் ஆட்டத்தைப் போல் வேடிக்கை பார்க்கிறேன்..

அதன் சலசலப்பு, யாருமற்ற வீதியில் எரிகிற சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் படுத்திருக்கும் நாயின் கண்கள் வாங்குகிற காட்சிகளைப் போல கனமானது.அரூபமானது.

நேற்றைய நிலவைப் பார்த்த படி படுக்கையை விரித்ததில் முகம் பார்த்து கதை பேசிய நிலவு பின் கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குப் பின் நின்று விளையாட்டுக் காட்டையில் தொலைத்த பால்ய தோழியின் சாயலைக் கொண்டுவிட்ட நிலவை, இந்த விடியலில் ஆட்டோகிராப்பிற்குள் அடைபட்ட தோழியின் கையெழுத்திற்குள் தொலைந்துவிட்ட முகத்தைப் போல் தேடுகிறேன்.

என்னிடம் இப்போதும் இரண்டு ஆட்டோகிராப் டைரிகள் உண்டு.. உதட்டுச் சாயத்தை முத்தமென்று பதித்துக் கொடுத்த தோழியின் சாயல் இதழின் ரேகைகளில் ஆயுளை வளர்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நிலவு தானென்று எப்போதும் தோன்றும்.

தேய்வதும், வளர்வதும் மட்டுமே வாழ்க்கையல்ல..

நின்று கவனிப்பதில் வளர்ந்தது தேய்வதும், தேய்ந்தது வளர்வதுமே நம் வாழ்விற்கான ஆகச்சிறந்த நிலாக்காலங்கள் என்று எண்ணுகிறேன்..

இப்போதும் என்னிடம் ஒரு பாடல் உண்டு..

அதையும் பகிர்ந்து விடுகிறேன் ;)

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

#நிலாக்காலம் தொடரும்..

-ரேவா

0 கருத்துகள்: