உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

பனிக்கால இரவுகள்






 பனிக்கால இரவுகள் எத்தனை அழகானவை..

கொட்டும் பனியில் பாதம் ஊன்றி நடப்பது பனிக்குடத்தில் ஒரு புழுவைப் போல் கிடந்த பொழுதுகளை அறிவின் துணையோடு ஈரமாய் மனதில் தவழவிடுகிறது..

பிடித்த நேரத்தில் பிடித்த பாடலோ அல்லது பிடித்தவரோடு கொஞ்சமாய் உரையாடலோ கொடுக்கும் ஆனந்தத்தை விட, அழகால் நிரம்பித் தழும்பும் நிலவை கண்ணயராது பார்ப்பதில் இருக்கும் கிறக்கம் ஒரு பெரும் பித்து.. 

தனிமைக்கு துணையாய் சுடர்விடும் மெழுகு, தன்னை உருக்கி பின் தானாய் வளரும் பெண்மையின் உருவாய் எனக்கு எப்போதும் தெரிவது இந்த நிலவு..

ஒரு பெரும் சக்தியை எனக்குள் எப்போதும் பாய்ச்சுவது நிலவு...

மெளனத்தின் மொழி எதுவாய் இருக்குமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் நிலவும் கூடவே வருவதன் நிழல் வளர்க்கும் வெளிச்சம் இன்று வரை எனக்கு புலப்படவில்லை தான்..

யாருமற்று ஒரு இரவில் பரந்த கடற்கரையை அதன் ரகசியம் மிகுந்த அலைகளின் ஓசையை கேட்கவேண்டுமென்ற ஆசை என்னை அதிகமாய் திங்கும் போதெல்லாம் பெளர்ணமிப் பொழுதுகள் அந்த பசியை ஓரளவில் குறைத்திருக்கின்றன.

நிலவின் வெளிச்சத்திற்கு முகம் காட்டி அமர்வதோ இல்லை அதை குழந்தையின் கைபொம்மையென இழுத்துக்கொண்டு கதை பேசி நடப்பதும் எனக்கு அத்தனை பிடித்த விசயம்.. அது ஒரு தியானம் போலவே எனக்கு தோன்றும்..

இன்று அதிகமாய் இருக்கும் குளிரால் அடங்கிப் போய்விட்ட வீதிகளை தூரத்து மாதா கோவில் மணிச்சத்தமும், அதிக காற்றால் செவிக்கு எட்டாது போன பைபிள் வாசகமும் தட்டிக் கொடுக்கின்றன. இன்று கிறிஸ்துபிறப்பென்ற நினைப்பு சட்டென்று அவர் பிறந்த தொழுவத்திற்கு இழுத்துச் செல்கிறது நிலவின் கைபற்றி..

சென்னையில் வேலையில் இருக்கும் பொழுதின் இடையே, பெளர்ணமிக் கடலை,அருகமர்ந்த பிடியின் சூட்டோடு தரிசித்த அந்த உப்பு வாசமும்,பிடித்தவர்களின் ஸ்பரிசமும் ஏனோ இந்த பனிக்காற்றில் அதிகம் கலந்திருப்பதாய் நாசி தூண்டிய செய்தியை, நிலவிற்கு முகம் காட்டி நடுங்கும் விரலோடு தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன்....

செல்போனில் பாடலை இசைத்தபடி.


பனிக்கால பெளர்ணமி இரவுகள் எப்போதும் அழகானவை என்று மட்டும் சுலபமாய் செல்லிடமுடிவதில்லை.



தூவானம் தூவத் தூவ
மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்



-ரேவா


25-12-15
10:58pm

0 கருத்துகள்: