உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 2

 


காலார நடந்துபார்ப்பதைப் போன்று நமக்குள் நாமே பேசிப் பார்க்கும் சுவரஸ்யமான உருமாற்றத்தில், உருவம் ஏற்கும் நிலைக்கொள்ளாமையை புரிந்துகொள்ளவும், அதன் பின்னான சமநிலைக்கு மனதை கொண்டுசெல்வதும் ஒரு தனிப்பயிற்சி தான்..

நான்கு சுவர்களுக்கு மத்தியிலும் ஒரு குட்டி வானம் நமக்கே நமக்கென்று ஒரு வாசலை திறந்துவிடுவதில் தொடங்கும் ஆறுதலும், அது நமக்காய் கொண்டு வரும் பறவையின் குரல்களும், மழைக்கால வானவில்லும்,  நீல வானில் கூட்டமாய் சினேகித்துத் திரியும் பறவைகளும், அவ்வப்போது இரைந்திருக்கும் தானியங்களுக்காய் மொட்டைமாடி வாசலுக்கு வந்துவிடும் ஜோடிப்புறாக்களும் தான் இந்த சிறுநகரத்தின் மீதான நேசிப்புக்கு  ஒரு காரணமாகிவிடுகிறது..

எப்போதும் அதிகாலைகளில் காக்கைக்கு  உணவு வைக்கும் அப்பாவை, அந்த நேரத்திற்குள் வராது போனால் கரைந்து அழைக்கும் காக்கையின் நேசம் எனக்கு வியப்பானவை. (அதே நேரத்தில் பொறாமைப் பட வைப்பவையும் கூட.) அதன் கண்களில் விரியும் காத்திருப்பை. வெயில் அழிக்கும் பொழுதுவரை கண்ணார பார்ப்பதில் தொடங்கும் சுவாரஸ்யம் அதை செய்து பார்க்க என்னை இதுவரைத் தூண்டியதே இல்லை. ஒருவேளை அவ்வுயிரை நான் பொருட்டாய் நினைப்பதில்லை என்ற மனிதத் திமிர் காரணமாய் இருந்திருக்கலாம்...

வெயில் காலங்களில் அம்மா மொட்டைமாடியில் ஒரு பாத்திரத்தில் வைக்கும் நீரில் இளைப்பாறும் பெயர் அறியா பறவையும், அது தன் செய்கையை வாடிக்கையாக்கிக் கொண்டதின் பின் இது எத்தனை தூரம் சாத்தியமென்று, அப் பறவையை கவனிக்க அம்மா ஊற்றிய நீரை கீழே சிந்திவிட்டு வெற்றுக் குவளையை நான் வேடிக்கை பார்த்த பொழுதிலும் அந்த பறவை வந்து காத்திருந்த பொழுதுகளும், எனக்குள் ஈரம் துளிர்க்கக் காரணமாய் இருந்த பொழுதுகளாய் இருக்கலாம்..

தப்பித்தவறி மொட்டைமாடிக்கு கூட்டமாய் வந்துவிடும் பறவைகளை விரட்டுவதில், அதன் சத்தத்தோடு அந்த சிறகடிப்பின் இசை என்னை  கிளர்ச்சியடையச் செய்பவை.. அது பறந்துபோனதில் பறவைகளை பயமுறித்திய வெற்றிக் களிப்பை எப்போதும் ருசித்திருக்கின்றேன்..

இன்று கதை வேறாகியிருக்கிறது..

நேற்றைய நாளும் வெயிலில் உலர்த்த அம்மா மொட்டைமாடியில் வைத்திருந்த தானியங்களை, நிறங்களை/ இனங்களைத் துறந்த பறவைகளும் காக்கைகளும் குளுக் குளுக் கென்ற சத்தத்தோடு கொத்தித் திண்ண, அதன் அருகிலமர்ந்து பார்க்கின்ற சந்தோஷத்தின் பின், நம்மைப் பற்றிய பயமற்று இருக்கும் பறவைகள் இப்போது தன் கூட்டாளிகளோடு என்ன பேசியிருக்கும்?
அதற்கு நம்மை பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும்?
மாடியில் நாளையும் இது போன்று தானியங்களுக்காய் வந்து நிற்குமா?

அடுக்கடுக்க கேள்விகளை மனம் கேட்டுக்கொண்டே இருக்க,  காற்றில் ஆடிய துணியின் அசைவில் பறந்து போன பறவைக்கு இப்போது யார் மனிதர்கள்?


மனிதர்களைப் பற்றிய அதன் நினைப்பு என்ன ?

இப்படி எண்ணற்ற  கேள்விகளோடு மனதை உருட்டிக்கொண்டு இருக்கையிலே,

தூரத்தில் மாதா கோவில் மணியோடு காற்றில் தவழ்ந்துவந்த

நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்ற பைபிள் வாசகம் தற்செயலானதா?

எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் வாழ்வு தான்.. கூட்டுவாழ்க்கையைத் துறந்த பொழுதுகளில் இந்த குட்டிவானம் நமக்கெல்லாம் பெரும் ஆறுதல்...

காலார நடந்துபார்ப்பதைப் போன்று நமக்குள் நாமே பேசிப் பார்க்கும் சுவரஸ்யமான உருமாற்றத்தில், உருவம் ஏற்கும் நிலைக்கொள்ளாமையை புரிந்துகொள்ளவும், அதன் பின்னான சமநிலைக்கு மனதை கொண்டுசெல்வதும் ஒரு தனிப்பயிற்சி தான்.


-ரேவா


0 கருத்துகள்: