உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 ஜனவரி, 2016

அலைவிளையாட்டு 9

 
 
மோனா..
 
நானாய் ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒற்றைச் சொல்லின் பிம்பம் வளர்க்கிறது, நீரற்ற வேரின் பொழுதை. நீயற்ற பொழுதை வெயில் தீண்டுவதில்லை என்ற போதும், அதை சுவைக்கப் பழகியிருக்கும் இந்த நிழல் வெயில், காலத்தின் தீனி..
 
பெருந்தாகம் எடுக்கிற போதும், பசிக்கிற வேளைக்கு ஆட்படுகிற போதும் கரைமீறி வருகிற உன் கடல், கால் நனைப்பதற்கு எனக்கான தீவென்பது எத்தனை பெரிய ஆசுவாசம்..எவ்வளவு பெரிய கர்வம், அத்தனையையும் மீறிய ஆறுதல். 
 
மனிதக்கடல்கள் பல நம்முள் சங்கமிப்பதும், பின்னது கானல் நீராய் காணாமல் போவதும் நமக்கொன்றும் புதிதில்லை தான் மோனா. ஆனால் நீர்ச்சுழிகளை, எதிர்ப்பார்ப்பின் வளைவுகளுக்குள் செலுத்திப் பார்க்கும் போது சிக்கிடும் நம் சுயம், எத்தனை பெரிய கொடிய அரக்கனாகிறான் என்பதை கவனிப்பதில் அயற்சியும் பிடிக்கிறது மோனா..அதை மீறி சம நிலைக்கு செலுத்த முற்படுகிற துடிப்பில், வார்த்தைகளின் புஜங்கள் கடுக்கிறது. எல்லை மீறிடுமோ என்ற படபடப்பே அசைக்க மறக்கிறது, அடுத்தவர்களை நோக்கி. 
 
யாருமற்ற அமைதிக்குள் கரைகிற பொழுதின் கடல், கரை போகத் துடிக்கிறது. அது செவி சாய்ப்பதில்லை கடலின் பேரமைதிக்கு. எங்கேயும் வெளிச்சத்தின் இருட்டு தான் என்பதை எந்த இருட்டின் வெளிச்சத்தால் நாம் தரிசிக்கிறோம் மோனா?. கேள்விகள் எழுப்புகிறது இருப்பை. ஆனாலும் வாழ்வதில் பதில்களேதும் கிடைப்பதில்லை தான் மோனா.
 
வருவதும், வந்த பின் வராமல் போவதுமான தத்துவ வார்த்தைகளை உதிர்க்கையில் எல்லாம் பழுத்த இலையொன்றின் பச்சைக் கனவுகள் தான் விழாமல் பிடித்துவைத்திருக்கிறது என்பதை நீயும் அறிந்திருக்கிறாய். வாழ்வு என்பது என்ன மோனா? உன்னை நான் பார்க்கிற இந்த கண்ணாடி எழுத்தில் நீ எப்படி தெரிகிறாயோ அப்படி தானே இந்த வாழ்வும். ஆனால் அதில் ஏன் இத்தனை சிக்கல்? யாருமற்றவராய் நாம் பிறப்பதில்லை என்பதை நம் தொப்புள் குழிகள் சொல்லிடும் தானே மோனா?
 
சுவாசமெடுக்க இங்கே எத்தனை உயிர்கள் துடிக்கிறது பார்த்தாயா? 
 
நம்மை மீறி நாம் பற்றிடத் துடிக்கும் கைகளிலும் ரேகைகள் உண்டு மோனா. அது வளர்த்துப் பார்த்திருக்கும் தூரங்களின் அளவிற்கேற்ப, நம் பயணங்களின் நிறுத்தங்கள் என்பதை நாம் எப்போதும் ஏற்றிட மறுக்கிறோம். உரிமை, உரிமை மீறலாய் மாறிடும் போது, உருவாக்கி வைத்த ஒன்று, ஒன்றுமற்றதாய் உருவாகிப் போகிற இந்த வார்த்தை விளையாட்டைப் போல் இலகுவானது இல்லை. 
 
எதையும் கைக்குள் வைத்திட நினைக்கும் போது காணாமல் போகிறோம், அதீத சுதந்திரத்திற்குள் அனுமதிக்கும் போது, சிறைபடுகிறோம் இதன் இரண்டிற்கும் நடுவிலிருக்கும் வாசல், எந்த யாத்திரீகனின் பயணக்குறிப்பு மோனா? இதில் தேசாந்திரியின் மனமும் கால்களும் வாய்ப்பதென்பது யாருக்கான இலக்கு?
 
தேடுபவர் கண்டடைவர் 
 
என்ற இரண்டு சொல்லில் இருக்கிற தேடுதலும், கண்டடைதலும் மறைத்து வைத்திருக்கிற மாய குகையின் வாசல் எங்கிருந்து ஆரம்பம் மோனா? தேடுதலிலா, இல்லை தொலைத்தலிலா? தொலைவதிலா? நோவாவின் வயதை பெற்றிடத் துடிக்கும் உறவு நிலைகளின் எதிர்பார்ப்பை பாதுக்காக, நம்மை எந்த பெட்டியில் அடைத்துக் காப்பது மோனா?
எந்த கடவுள் அதை காப்பாற்றுவார்? கடவுளர்கள் என்ற சொல்லிற்குள் இருக்கிற மனிதனின் நேர்மை கடவுளாவதா? இல்லை கடவுளைச் சேர்வதா?
பதில்கள் மனிதர்களாவதில்லை என்ற போதும் அது சுமக்கிறது தன் பக்குவத்திற்கு ஏற்ப மனிதர்களின் காலங்களை. 
 
நுழைகிறோம். 
 
பரிசோதனைக் கூடத்தின் எலிகளாகிடும் உயிர்வதைகளின் மதிப்பு பல உயிர்களுக்கான காப்பீடு. வலிகள் இப்படித்தான் மோனா. ஏற்பதில் எதுவொன்றும் இன்னொன்றைக் கொண்டுவரும் என்பதைப் புரிந்திட நாம் இன்னொரு கடலுக்குள் பயணப்பட வேண்டும் தான் மோனா.
 
கட்டட்டற்ற சுதந்திரந்தின் காட்டுப் பலம் ஓர் அசுரப் புயல். அது அடித்துப் போகட்டும், அகப்பட்ட யாவற்றையும். இருப்பதை இருப்பதாய் கொள்வதால் எது நம் இருப்பென்று அறிகிற ஆவல் எழுப்பட்டும் யாவற்றையும்.

அதோ அங்கே உன் கடல் காத்திருக்கிறது மோனா
வருகிறேன் கரை மீறி.

-ரேவா 
 
 
 

0 கருத்துகள்: