உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

வாகை சூடும் வெற்றியின் பாலை


எப்படியும் திரும்பி வந்திடுவாய்
எனும் அலட்சியத்தில்
ஆளற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்

கண நேர யுத்தம்
கவனிக்கத் தவறிய காயம்
நிறுத்தியிருக்கும் இடம்
மன்னிப்பை மறுதலித்த
வெற்றியில் பெற்ற நரகமென்றுனக்குத் தெரிய
நேரம் பிடிக்கும்

கண்ணீரின் உவர்ப்போ
உரையாடல்கள் உடைத்த பிம்பங்களோ
கட்டுமானங்கள் தகர்ந்த நிமிடங்களின் புகைமூட்டமோ
கர்வப் புரை கூடி மறைக்கும்
உன் கண்களுக்குத் தெரியப் போவதில்லை

நீ வாகை மலர் பூத்துக் குலுங்கும்
தோட்டத்தில் இருக்கிறாய்
வெயில் பொழுதுகள் வேர்பிடித்திருப்பதை
அறியாது

வாடும் பொழுதுகளில் நீருற்றவோ
மலரும் கொண்டாட்டங்களில்
உன்னை நிறுத்தி வாழ்த்துச் சொல்லி
வாகை மலர் சூடவோ
வாய்க்காத தீவுனது

நீயே உன்னைத் துதி
உன் வெற்றி மீது ஏறி கொக்கரி
விடிவதற்கான பொழுதுகள் திரும்பி வரப்போவதில்லை

நீ
எப்படியும் திரும்பிவிடுவார்கள்
எனும் அலட்சியத்தில்
ஆளரற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்

-ரேவா


0 கருத்துகள்: