உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

ஏப்ரல் துணுக்கு


1.

கதறி அழ
கட்டி அணைக்க
இருக்கிறேன் என்பதை மெய்ப்பிக்க
சூழும் தனிமையை விரட்ட
நேசிக்கும் மெளனத்தைப் பெருக்க
உடனிருக்கிற இந்த எழுத்து
என் வரம்..


2. 

யாரோ ஒருவராகிவிடும் நிமிடம் அத்தனைச் சின்னது ஆனாலும் அது கனமானது.

3.
மழைச் சொல் தீண்டும்
வெயில் நிலத்தில் பூக்கிறாய்
அரூப புள்ளிகளை இணைத்தபடி

4.

பக்கத்தில் இல்லை
பார்வை மட்டும் பார்க்கும் தூரம்

5.

நடைபாதையின் மொட்டவிழ்கிறது
இனி
நடக்கத் தொடங்கிவிட்ட
பாதையில்
விடியலின் வேர்கள்

6.

முற்றிலும் மாறிவிடுகிற ஒன்றிலிருந்து மாறாத ஒன்றின் அடிப்படை, குழந்தையின் தெளிந்த கண்களைப் போன்ற அறிதலால் தெளிவாகிற அறிவின் பயிற்சி..

7.


பறவையின் இருப்பறியா இரவுகள் பெரும்பாலும் இருளால் போர்த்தப்படுகிறது. பசித்து அழுகிற குரலுக்கு வெயில் அரைத்து குளிர் பூசும் சுவர்கள் மேல் அத்தனை பாந்தம். அதன் சிறகு பறப்பதற்கான வானம்..
வெட்டிய இறகுகள் வளர்கிற காலம் விரிகிறது குட்டி குட்டி வானமாய்.
#இரவுக் குறிப்புகள்

8.

 சராசரிக்கு சற்று அதிகமானது பாதுகாப்பானதாக மாறும் போது, சற்றைக்கு குறைவானது பாதுகாப்பற்றதாக மாறிடும் அபாயத்தின் ஏற்ற இறக்கங்களில்
சரிக்கான சராசரியை மிகச்சரியாய் தவறவிடுகிறோம், பாதுகாப்பு என்ற நிச்சயமற்ற இடத்தில் இருந்து.


9.

மெளனச்சாலைக்குள் வெயில் மரம் தன் நிழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது
சொல்லின் இருமுனையிலோ அந்தியின் கூர்மை.


10.

தேவையென்பது தாகத்தைப் போல் இருப்பதில்லை மாறாக அது தேவையாகவே தேங்கிவிடுகிறது...

11.

அழித்து அழித்து எழுதியும்
திருப்திப்படாத எழுத்து
இந்த மெளனம்..


12.

திரும்பி வர முடியாது இருக்கிற நீள் தேவைக்குள்
அடிக்கிவைக்கப்பட்ட ஒழுங்கின்மைகளை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்

குற்றச்சாட்டுகளோடு ஒத்துப்போவது
முதல் முத்தம் வாங்கிய
நீண்ட கடலைப் போல் புதிரானது

திரும்பி திரும்பி பின்னப்படுகிற வலை
இந்த அலை
சிக்கிக்கொள்கிறோம்


13.

மூச்சுமுட்டுகிற அறைக்கு ஜன்னலாகிற தொலைப்பேசிக்குள்
தொலைதூர வானம்

கை நீட்டி ஆறுதல் தேடும்
துண்டு வெயிலொன்றால் ஒற்றியெடுக்கப்படுகிறது
கைரேகை


14.

உன் குரல்கள் கோர்க்கப்பட்ட மாலையில்
அந்தியின் சருகு ஆரஞ்சு சுளை போலிருந்தது


15.

பைத்தியக்காரத் தனங்களிலிருந்து நம்மை ரட்சிக்கிற
கரங்கள் தேவனுடையதாய் மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அவை நீலம் கோர்க்கப்பட்ட கூர் முனைகளாய் கூட சில சமயங்களில் இருந்துவிடும்..


16.

பைத்தியக்காரத் தனங்களிலிருந்து நம்மை ரட்சிக்கிற
கரங்கள் தேவனுடையதாய் மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அவை நீலம் கோர்க்கப்பட்ட கூர் முனைகளாய் கூட சில சமயங்களில் இருந்துவிடும்..






-ரேவா



0 கருத்துகள்: