*
கொண்டாடப்படவேண்டிய நாளின் தொடக்கம் உன்னிலிருந்து ஆரம்பிக்கிறது மோனா..
தொலைத்தொடர்புகளற்ற வனாந்திரத்துப் பறவையின் சுதந்திரத்தைப் போல சிறகுகள் பெற்றுவிட்ட கர்வம் வானளக்கிறது. அது பறந்து பறந்தே பெற்றுக்கொண்டுவிடும் கொண்டாட்டம் வந்து அமர்கிற இடம், நிஜத்தினூடாடும் வாழ்வின் பெருங்கருணை..
இலையுதிர்த்துவிட்ட மரங்கள் சூடிக்கொள்கிற வரவில், வசந்தங்கள் பூக்கிறது, அதன் மணம் காட்டுத் தேனியீன் ரீங்கரிப்பால் மொய்க்கும், தேனடைக்குள் நிறைந்திருக்கும் தேனீன் சுவைக்கு ஈடானது..
தித்திப்பென்பது பழகிப்போன கசப்பின் அடிச்சுவையிலும் இருக்கிறதென்ற பழக்கம், பயிற்றுவிக்கிற சம்பவங்களின் வழியே உன்னை நெருங்குகிறேன் இன்னும் ஆழமாய்.
காட்டுப்பாதை விரிகிறது சொல்லொன்றை விதைப்பதின் வழியே..
நுழைகிறேன், தொலைதலின் பொருட்டே..
:)
காலடித்தடங்களைக் களவாடிக்கொள்ளும் நேசத்தால் புதுப்பாதைகள் உருக்கொள்கிறது. அங்கே நமதென்ற காலடி ஓசைக்குள், ஒத்திசையும் உணர்வுகள் கால்கொலுசு. அந்த உணர்வின் சத்தம் அடர்ந்த காட்டில் நம்மைத் தவிர்த்து யாருமில்லையென்பதைப் போன்ற எண்ணத்தின் ஓசை.. ஓசையென்பது சூல்கொண்ட பெண்ணொருத்தியின் கரு வயிற்றில் நெளியும் கணப் பிறழ்வின் நடனம் ..
தொட்டுணர்கிறேன் நினைப்பதின் வழியே..
ஏகாந்தமென்ற உணர்வின் நூல்கொண்டு பறக்க வாய்க்கிற மனதின் போக்கில் உன்னை நெருங்க நினைக்கிற உயரமெல்லாம் உன்மத்தம்..அது தொட்டுத் தொட்டுப் பார்க்கிற பருவப்பெண்ணின் பருபோல, அழகு கலந்த துயரம்..
உயர உயரப் பறக்கிறேன், காற்றின் போக்கிற்கெல்லாம் அசைந்துகொடுக்கிற காகிதத்துண்டில் சிறைப்பட்டுக்கொண்ட ஈக்குச்சியின் பிடிப்போ உன்னை நாடுமிந்த மனமென்று யோசிக்கிறேன் மோனா..பட்டமென்பதை தாக்கிக்கொண்டிருக்கும் பிடிப்பு தான் ஒரு ஈக்குச்சியைப் போலென்னை எண்ணவைக்கிறது.. இரண்டு தனித்தனிக்குள் சேர்ந்துகொள்கிற ஒற்றைச் சொல்லின் உயரமெல்லாம், பறக்ககொடுக்கிற பிடியின் லாகவமென்பதை உணர்கிறேன்..
பறக்கிறேன் வானை துண்டுக்காகிதமாக்கி..
தொட்டுவிடும் தூரம் தான் முயற்சி அது வளர்கிறது, இளைஞன் ஒருவனின் பருவக்கனவுபோல..
ரகசியங்களற்ற ரகசியத்தில் அமைதிகொள்கிறேன்..
யாரும் பருக நினைக்காத சுவைக்குள் ஒளிந்திருக்கும் தாகத்தின் மேல், தாகம் கொண்டிருக்கும் இந்த இருப்பை, இந்த கணத்தில் கொண்டாடிக்கொள்ள உன்னை நினைப்பதில் வழியாய், இறுகிக்கொண்டுவிட்ட பனிப்பாறையொன்றின் மீது வெயில் விரிக்கும் கருணையைப் போல், உருகி உருகியே உன் வழித்தடம் நெருங்குகின்றேன்..
குளிர் அனத்துகிற நிமிடம், வெயில் போர்த்துகிறது..
வெயிலும், குளிருமாய் மாறி மாறிப்பெய்யும் பருவத்தின் மேல் மழையின் நடனம், கடல் சேர்வதற்கான விளையாட்டு தான் மோனா..
-ரேவா